ராகு கேது பெயர்ச்சி 2019: ராகு கேது பரிகார தலங்களில் லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்: கடக ராசியில் இருக்கும் ராகுபகவான் மிதுனத்திற்கும், மகர ராசியில் இருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கும் பெயர்ச்சியடைவதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள ராகு கேது பரிகாரத்தலங்களிலும் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவ ஆலயத்திலும் பரிகார பூஜைகள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
வாக்கிய பஞ்சாங்கப்படி 13.2.19 முதல் 31.8.20 வரை ராகு கேது கிரகங்கள் ஒரு ராசியில் தங்கியிருந்து நன்மை தீமைகளை அளிக்கும் என்பதால் அதற்கான பரிகாரங்களை செய்து கொள்வது அவசியம். ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களின் ராசிகளின் எதிர்கால கணிப்புக்கு தகுந்தவாறு பரிகாரங்கள் செய்யலாம்.
தமிழகத்தில் கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாம்புரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என பல ஆலயங்கள் ராகு கேது பரிகாரத்தலங்களாக உள்ளன.
ராகு கேது பரிகாரத்தலங்களில் கால பூஜைகளும், யாக சாலை பூஜைகளும் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.
புராண கதைகள்
ராகுவும் கேதுவும் பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. ராகுவும் கேதுவும் தாங்கள் செய்த தவ வேள்விகளால் சிவனும் விஷ்ணுவும் நவகிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கினர். ஒருவரின் முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களை ராகு கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ராகு, கேது ஆகிய இருவரும் வலம் இருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்தக் கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாகின்றனர்.
திருநாகேஸ்வரம் ராகு பகவான்
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் ராகுதோஷ நிவர்த்தி ஸ்தலமாக விள்ங்கிறது. இக்கோவிலில் பிப்ரவரி 13ம் தேதி ராகு கேது பெயர்ச்சியாவதை முன்னிட்டு இன்று முதல் 9ஆம் தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனையும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. 13ஆம் தேதி 12.00 மணிக்கு கடம் புறப்பாடும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், பால் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி உலா வருகிறார். இக்கோவிலில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறி வருவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இங்கு மட்டுமே ராகு பகவான் நாக வல்லி நாக கன்னி ஆகியோருடன் மங்கல ராகுவாக வீற்றிருக்கிறார்.
கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்
நாகை மாவட்டம்பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் முதன்மையான மூர்த்தி என்று போற்றப்படும் கேதுபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு 2 கால யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடக்கிறது.
கேது பகவான் ஞானகாரன் என்றும், ஞானமோட்சத்திற்கு அதிபதியானவர் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் வாசுகி என்ற பாம்பு தனது சாபம் நீங்க நாகநாதசாமியை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
நாக தோஷங்கள் நீங்கும்
ராகு பகவானுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வதுபோல், கேதுபகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டத்தில் அர்ச்சனை செய்தால் பக்தர்கள் நோயில்லா வாழ்வும் வளமும் பெறலாம். கேதுபகவானை வழிபட்டால் தொழில் வளர்ச்சி,செல்வ செழிப்பு, திருமணத்தடை, கடன் நிவர்த்தி, நீதிமன்ற வழக்குகள் நாக தோஷங்கள், கல்வித்தடை, சரும நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.