ராகு தசையும் ஒன்பது புத்திகளும் எப்படி இருக்கும் - பரிகாரம் என்ன
ராகு தசையில் ராகு, குரு, சனி,புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் என மொத்தம் ஒன்பது புத்திகள் உள்ளன. தசை நடக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த புத்திகள் தங்களின் வேலையை செய்யும் அதன்
சென்னை: ஒருவருக்கு ராகு திசை நடக்கும் காலத்தில் நிறைய நன்மைகள் நடக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். ராகு நிழல் கிரகம். தனது தசாபுத்தி காலத்தில் அள்ளிக்கொடுப்பார். தசை என்பது, மனிதனின் வாழ்நாட்களில் கிரஹங்கள் ஆட்சி செலுத்தும் கால அளவு. மொத்தம் ஒன்பது தசை இருக்கின்றன. இந்த தசை காலம் மொத்தம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசைக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்பது புத்திகளாக ஆட்சி செலுத்துகின்றன.
புக்தி என்பது தசையில் ஒரு பாகம். அதாவது ஒரு கிரஹ தசைக்குள் மற்றைய கிரஹங்கள் வரிசையாக வந்து ஆட்சி செலுத்தும் காலம் புக்தி. தசை எந்தக் கிரஹத்தினுடையதோ, அதன் புக்தி முதலில் ஆரம்பமாகும். உதாரணமாகச் தசையானாலும் புக்தியானாலும் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என்ற முறையிலே வரிசையாகத்தான் வரும். ராகு தசை ஆரம்பித்தால் முதலில் ராகு திசை தொடங்கும். தொடர்ந்து குரு, சனி,புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் வரும்.
ஏதாவது தவறு நடந்தால் அவனுக்கு புத்தி சரியில்லை அதான் அப்படி பண்ணிட்டான் என்பார்கள். தசா நாதனும் புத்தி நாதனும் நன்றாக இருந்தால் வாழ்க்கை அதுபாட்டுக்கு நன்றாக போகும். ஜாதகத்தில் ராகுவின் அமர்வைப் பொருத்து அவருக்கு நன்மைகளும் தீமைகளும் நடைபெறும்.
நன்மையும் தீமையும்
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும். ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். வீடு வண்டி வாகனம் வாங்கலாம். ராகு பலமிழந்திருந்தால் மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப்படும் நிலை ஏற்படும் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
குருவினால் நன்மை
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் பணவரவும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரும். சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும். அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும். குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் புத்திர பாக்கியம் தடை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
சனியால் பாதிப்பு
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கலாம். சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
புதனால் என்ன பலன்
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, பகைவர்களால் தொல்லை ஏற்படும்.
ராகுவும் கேதுவும்
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும். கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும்
கேது சரியில்லாத நிலையில் இருந்தால் கணவன் மனைவியிடையே பிரச்சனை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம் ஏற்படும்.
சுக்கிரன் அள்ளிக்கொடுப்பார்
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும்.
சூரியனால் என்ன நன்மை
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும். சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள் கிடைக்கும். நல்ல தைரியம் துணிவு தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தலைவலி, இருதய கோளாறு தொழில் வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
சந்திரன் தரும் பலன்கள்
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி ஏற்படும் வண்டி வாகன யோகம் அமையும். கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழியில் மேன்மை உண்டாகும். பொருளாதாரமும் உயரும். சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை ஏற்படும். நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் வரும்.
செவ்வாய் தரும் நன்மை தீமை
ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும். தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும். நல்ல உடல் ஆரோக்கியம் உயர் பதவிகள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதரர்களால் நன்மை ஏற்படும். செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் பாதிப்பு, எதிர்பாராத விபத்து ஏற்படும். சகோதர்களிடையே பகை ஏற்படும். தொழில் உத்தியோத்தில் விண் பிரச்சினை வரும்.
பரிகாரம் என்ன
ராகுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடலாம். நவகிரகங்களில் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்யலாம். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் ஊற்றி வணங்கலாம்.