ஆண்டாள் பாசுரம் படிங்க... வெப்பம் தணிந்து மழை பெய்யும்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளனர். அச்சம் வேண்டாம் ஆண்டாள் பாசுரம் படித்து பிரார்த்தனை செய்தால் கோடை வெப்பம் தணிந்து பூமி குளிர மழை பெய்யும் என்று ஜோதிடர்கள் ஆறுதல் செய்தி கூறியுள்ளனர்.
நாம் அனைவருக்கும் இப்போது ஒரு சமுதாய கடமை இருக்கிறது. ஜாதி மத பேதமின்றி அனைவரும் இப்போது தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து சிக்கணம் கடைபிடிக்க வேண்டிய நேரமாகும்.
இந்த வருஷம் மழை பொய்த்துவிட்டதால் பிப்ரவரி மாதம் முதலில் இருந்தே பல இடங்களில் தண்ணீர் பற்றாகுறையும் குடங்களோடு தண்ணீர் லாரிகளின் பின் போராடுவதை காண முடிகிறது. எனவே நாம் தண்ணீரை எத்தனை முறை மறுசுழற்சி முறையில் உபயோக படுத்த முடியுமோ அத்தனை முறை பயன்படுத்திவிட்டு கடைசியில் கூட செடிகளுக்கு விட்டுவிடுவது சிறந்தது.
தண்ணீர் பிரச்சினை
இந்த வருடம் மே ஜூன் மாதங்களின் நிலையை கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. தண்ணீரை போற்றி பாதுகாக்க தவறினால் ஒரு பாட்டில் தண்ணீல் ரூ100 கூட விற்றாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை.
அப்படி என்றால் இந்த பிரச்சனையை எப்படிதான் தீர்ப்பது? சுக்கிரனுக்கு பல காரகங்கள் இருந்தாலும் மழைக்கும் சுக்கிரன் தான் காரக கிரகமாகும்.
மழைகுறித்த பல விதிகளை நம் முன்னோர்கள் நமக்கு அழகாக கூறியிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
புதன் - சுக்கிரன் அருகாமை
சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் எப்போதும் ஒன்றாக (சில விதிகளுக்குட்பட்டு) பயணம் செய்வர். எனவே அவர்களை முக்கூட்டுகிரகங்கள் என்பர்.
சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும் ஒரே இராசியில் இருந்தால் மழை பொழியும். அவை மூன்றும் ஒரே நவாம்சத்தில் இருந்தால், பலத்த மழை பெய்யும். இராசியும், நவாம்சமும் நீர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்) மிக பலத்த மழை பொழியும். அதற்கிணங்கவே மழையைத் தீர்மானிக்க வேண்டும்.
எப்போது மழை பெய்யும்
சுக்கிரனும், புதனும் ஒரே இராசியிலும், ஒரே நவாம்சத்திலும் இருந்து, சுக்கிரன் செவ்வாய்க்குப் பின்னால் இருந்தால், அதிகமான மழை பொழியும்.
சூரியன், பூமி சம்பந்தப்பட்ட இராசியில் (ரிஷப, கன்னி இராசிகள்) இருந்தும், சந்திரன், புதன், சுக்கிரன் நீர் சம்பந்தப்பட்ட இராசி, நவாம்சதிலும் இருந்தும், அந்த சமயத்தில் மேற்கே வானவில் தென்பட்டாலும், நிறைய மழை பொழிவு இருக்கும்.
மழை மேகங்கள்
சுக்கிரனும், புதனும் எவ்வளவு அருகாமையில் உள்ளனரோ அவ்வளவு மழை பொழியும். இவற்றுக்கிடையே அதிக பட்சமாக 30 டிகிரி தூரம் இருப்பது மழை பொழிய உகந்தது. இவை அடுத்தடுத்து சஞ்சரிக்கும் போது, சுக்கிரன், புதனுக்கு முன்னால் போவது நன்மை. புதன் சுக்கிரனுக்கு முன்னால் சென்றால், மழை மேகங்கள் வந்தாலும், அவை காற்றால் வீசப்பட்டு கலைந்து போகும்.
மார்ச் மாத மழை நாட்கள்
சுக்கிரனுக்கும், புதனுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் 8 டிகிரியிலிருந்து 30 டிகிரி வரை இருந்தால், அது புத சுக்கிர அருகாமை எனப்படும். இந்த நெருக்கம், ஜோதிடத்தில் பஹு வர்ஷம் எனப்படும். இந்த இணைவின்படி அடுத்துவரும் நாட்களில் எப்போது மழை பெய்யும்?
இந்த மாதம் 16/3/2017 , 17/03/2017 மற்றும் 18/3/2017 ஆகிய நாட்களின் கிரக நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் மழை வருவதற்க்கான சாத்திய கூறுகள் தெரிகிறது.
நீர் ராசிகள்
16/03/2017 அன்று நீர் கிரகமான சுக்கிரன் நீர் ராசியான மீனத்தில் உச்சம் பெற்று புதன் மற்றும் சூரியனுடன் 8-8 பாகை வித்தியாசத்தில் ஒரே ராசியில் இணைவு பெற்று சஞ்சாரம் செய்கிறது. மேலும் நவாம்சத்திலும் ஒரு நீர் ராசியில் சந்திரனும் மற்றொரு நீர் ராசியில் சுக்கிரனும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். 17ம் தேதியும் 18ம் தேதியும் கூட இது போன்ற நிலை தொடர்கிறது. எனவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருணபகவான்
வருண பகவான் மனது வைத்தாலன்றி இந்த வெயில் காலத்தில் அவ்வளவு எளிதில் மழை பெய்துவிடாது. அப்படி என்றால் வருன பகவானை மகிழ்வித்து மழை பெய்ய செய்வது எப்படி? அனைவரும் பக்தியோடு ஆன்டாள் இயற்றிய திருப்பாவையில் வரும் பின் வரும் பாசுரத்தை படித்துவந்தால் கண்டிப்பாக மழை வரும். இப்போது தேவை நமது பக்தியும் நம்பிக்கையும்தான்.
ஆண்டாள் பாசுரம் படிங்க
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ, கை கரவேல்
ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழவுலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
அக்னிநட்சத்திலும் மழை பெய்யும்
வெள்ளிக்கிழமை நாட்களில் சுக்கிர ஹோரையில் பூஜையறையில் விளக்கேற்றி வைத்துவிட்டோ அல்லது ஆறு குளம் ஏரி போன்ற நீர் நிலைகளில் நின்றுக்கொண்டோ அல்லது வீட்டிலேயே பக்கெட்டில் நீர் சிறிது நிரப்பி அதில் நின்றுக்கொண்டோ இந்த பாசுரத்தை பக்தியோடு படித்தால் அக்னி நட்சத்திரத்தில் கூட மழை பெய்யும். மேற்கண்ட பாசுரத்தை பக்தியுடன் படித்தால் என்வாக்கு பொய்தாலும் ஆன்டாளின் பாசுரம் பொய்யாகாமல் கட்டாயம் மழை வரும். செய்வீர்களா?