2018ல் பருவமழை எப்படியிருக்கும்? தமிழகத்தை புயல் தாக்குமா? - பஞ்சாங்கம் கணிப்பு
தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் நல்லமுறையில் பெய்து அணைகள் நிரம்பியுள்ளன. 2018 ஆம் ஆண்டில் மழை, புயல் பாதிப்பு எப்படி என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: 2017ஆம் ஆண்டு இறுதியில் ஓகி புயல் தமிழகத்தின் தென் தமிழகத்தை குறிப்பாக குமரி மாவட்டத்தை சூறையாடியது. இது முன்பே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. அதே போல 2018ஆம் ஆண்டு புயல், மழை எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
2017ஆம் ஆண்டு சென்னையில் பருவமழை தாண்டவமாடியது. புறநகரில் வெள்ளம் சூழ்ந்தது. அதே போல புயல் பாதிப்பு பற்றி அறிவிக்காமலேயே இருந்த நிலையில் திடீரென்று உருவான புயல், குமரி மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. நெல்லை, குமரி மாவட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இன்னும் ஒரு ஆண்டுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் நிரம்பியுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பஞ்சாங்கம் கணிப்பு
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில், 2018ஆம் ஆண்டு 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 5 பலகீனம் அடையும், 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும். தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழியும்.
தேங்காய் விலை வீழ்ச்சி
இந்த ஆண்டு தேங்காய் விலை விண்ணை எட்டியுள்ளது. ஒரு தேங்காய் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வரும் 2018ஆம் ஆண்டு காய்கறிகள் விலை வீழ்ச்சியடையும், மா, பலா, தென்னை அதிக அளவில் விளையும், தேங்காய் விலை வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காசி முதல் ராமேஸ்வரம் வரை
ஆடி முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை பெய்யும், வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படும். தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அணைகள் நிரம்பி வழியும்.
ரயில், விமானம்
தென்மேற்கு பருமழை காலமான ஆடி, ஆவணி மாதத்தில் பகல், இரவில் எல்லா இடங்களிலும் மழைபொழியும் விமானம், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும். பம்பாய், கொல்கத்தா அதிகம் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் மழை பிரதேசங்களில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.