மாமன்னர் ராஜராஜ சோழன் 1033வது சதய விழா: தஞ்சாவூரில் விழாக்கோலம்
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் களைகட்டியுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033வது சதய விழா இன்று தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டே ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில், இம்முறை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் கட்டிய கோவில்
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஐப்பசி சதயம் விழா
ராஜராஜ சோழன் பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், இன்று காலை மங்கள இசை முழங்க விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாமன்னன் 'ராஜராஜன் கண்ட திருமுறை', 'ராஜராஜன் ஆட்சிக்காலம்' போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும், 'திருமுறை பன்னிசை' என்கிற பெயரில் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ராஜராஜனுக்கு மரியாதை
இன்று காலை 7.30 மணிக்கு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பிறகு 108 கலச பூஜை நடைபெறுகிறது. அதன் பிறகு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் ‘தேவார வீதி உலா' நடைபெறும்.
ராஜராஜன், உலகமாதேவி
ராஜராஜன் உயிருடன் இருக்கும் காலத்தில் செய்யப்பட்ட அவரது சிலையும் பட்டத்து இளவரசி உலகமாதேவி சிலையும் காணாமல் போய் குஜராத்தில் உள்ள தனியார் மியூசியத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. அந்த சிலைகள் பலத்த பாதுகாப்போடு கோயிலுக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்தச் சிலைகளைக் கொண்டுவரும்போதே மக்கள் திரண்டு பெரிய விழா எடுத்து வரவேற்பு கொடுத்தனர். சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும் இருந்து வந்துள்ள ஏராளமானோர் மீட்கப்பட்ட சிலைகளை பார்த்து செல்கின்றனர்.
தஞ்சையில் விழாக்கோலம்
ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரிய கோயில் மின் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கிறது. ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் புகழோடு விளங்கும் மாமன்னர் ராஜராஜனின் சதயவிழாவை நாமும் கொண்டாடுவோம்.