ஸ்ரீராமநவமி : அவதார புருஷன் ஸ்ரீ ராமனை வணங்குவோம்!
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: தெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார். மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது. ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துக்கள்.
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு.
ஸ்ரீ ராமபிரான் அவதாரம்
ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம். பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு. ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.
ஸ்ரீ ராம நவமி
ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் 'ம' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது. நவமி திதியில் உதித்த சக்ரவர்த்தி திருமகனின் ஜாதகத்தில் நவகோள்களின் நிலையை இந்த ஸ்ரீராம நவமி பார்ப்போம் வாருங்கள்.
ஸ்ரீ ராமபிரான் ஜாதகம்
ஸ்ரீ ராமபிரான் புனர்பூச நட்சத்திரத்தில் கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர். இரண்டுக்குடைய சூரியன் மேஷத்தில் உச்சம். மூன்றுக்குடைய புதன் சூரியனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்ய யோகம். நான்கிற்க்கும் பதினொன்றுக்கும் உடைய சுக்கிரன் உச்சம். ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் உச்சம். ஆறுக்கும் ஒன்பதுக்கும் உடைய குரு உச்சம். ஏழுக்கும் எட்டுக்குமுடைய சனி உச்சம். ஆக ஐந்து கிரகங்கள் உச்சமடைந்துள்ளன.
உதாரண புருஷன்
ஸ்ரீராமர் ஜாதகத்தில் மாத்ரு ஸதானாதிபதி சுக்கிரன் பித்ரு ஸ்தானத்தில் உச்சம். பித்ரு ஸ்தானாதிபதி குரு மாத்ரு காரகன் சந்திரனின் வீட்டில் உச்சம். மேலும் பித்ரு காரகன் உச்சம், மாத்ரு காரகன் ஆட்சி எனும் அமைப்பை பெற்று தாயிற் சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..."என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர்.
ஏகபத்தினி விரதன்:
பொதுவாக களத்திர ஸ்தானாதிபதியோ அல்லது களத்திர காரகனோ உச்சமடைந்தால் அவர்களுக்கு பலதார அமைப்பு ஏற்படும். அவதார புருஷனான ஸ்ரீ ராம பிரான் ஜாதகத்தில் களத்திர காரகனும் உச்சம் களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் என்றாலும் லக்னத்திலும் ராசியிலும் உச்சம் பெற்ற குரு நின்று 9ம் பார்வவையாக களத்திர காரகனை பார்ப்பதாலும் ஆன்மீக கிரகம் சூரியன் ஸம சப்தமமாக களத்திரஸ்தானாதிபதியை பார்பதாலும் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிவர் ராமர்.
பஞ்ச மகா புருஷ யோகம்
யோகங்களிலேயே சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் சர்ப கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து, மற்ற கிரகங்களான செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகக்கூடிய யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும்.இவைகள் ருச்சுக யோகம், பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன.
நான்கு யோகங்கள்
பஞ்சமகா புருஷ யோகங்களில் நான்கு யோகங்கள் ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் அமைந்துள்ளன. லக்ன கேந்திரத்திலும் சந்திர கேந்திரத்திலும் குரு உச்சமாகி ஹம்ஸ யோகமும், சனி உச்சமாகி சச யோகமும், செவ்வாய் உச்சமாகி ருச்ச யோகமும், சுக்கிரன் உச்சமாகி மாளவியா யோகமும அமைந்திருக்கிறது. மேலும் ராகுவும் கேதுவும் குரு புதன் வீடுகளில் நின்று ராஜயோக அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் பெற்ற ஸ்ரீராமரையும் அவர் ஜாதகத்தையும் இந்த ராமநவமி நாளில் பூஜிப்பது நமக்கு எல்லாவித அருளையும் பொருளையும் வாரிவழங்கும்.