ரமலான் நோன்பு நாளை தொடக்கம் : புனித மாதத்தில் பாதுகாப்புடன் தொழுகை - உலக சுகாதார நிறுவனம்
ரமலான் நோன்பு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. நோன்புக் காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்தியாவில் நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில் சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் நாடுகளில் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்களையும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமூக மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளன. திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசிய ஊரடங்கு காலத்தில் மக்கள் பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் உலகில் பல நாடுகளில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி மே 23ஆம் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது. 30 நாட்களும் இஸ்லாமிய மக்கள் நோன்பிருந்து மாலை நேரங்களில் மசூதிகளுக்கு தொழுகை செய்வார்கள்.
கொரோனா வைரஸ் காலத்தில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோன்புக் காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சில அறிவுறுத்தல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
ரமலான் வழிகாட்டு நெறிமுறையில், மதம் தொடர்பான ஒன்று கூடலை முற்றிலுமாகத் தடை செய்வது அவசியமானது. இதுதொடர்பான முக்கிய முடிவுகளை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே எடுத்துக் கொள்ளலாம். மசூதிகளில் ஒன்று கூடுதலை தவிர்த்து, தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் மூலமாக மத செயல்பாடுகளை அனைவருக்கும் பரப்பலாம்.
ஒருவேளை அரசாங்கங்களால் மதச் செயல்பாடுகளுக்காக ஒன்று கூடுதல் அனுமதிக்கப்பட்டால், கொரோனா தொற்று வேகமாகப் பரவக்கூட வாய்ப்புள்ளது" என எச்சரித்துள்ளது.
- சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் நாடுகளில் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்களையும் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
- மக்கள் கொண்டாட்டங்களுக்கான பொருள்கள் வாங்கச் சந்தைகளில் ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஒருவருக்கொருவர் இடைவெளி என்பது கட்டாயம் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.
- நேரடி முறையில் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளாமல் மாற்று வழிகளில் அவற்றை மேற்கொள்ள வேண்டும்.
- கொரோனா அறிகுறி உள்ளவர்கள் எவ்விதக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளாது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் அவர்களும் பொதுக் கூட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
- ரமலான் நோன்பு தொடர்பான கூட்டங்களை மூடிய இடங்களில் நடத்தாது திறந்த வெளியில் காற்றோட்டமாக நடத்தவேண்டும்
- ரமலான் தொடர்பான தொழுகைகள் மற்றும் கூட்டங்களில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் முழு விவரங்களையும் உரிய அமைப்புகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- தொழுகைக்கு முன்னதாகக் கலந்துகொள்ளும் அனைவரும் சானிடைஸர்களை பயன்படுத்திக் கை கழுவ வேண்டும். அவரவர் சொந்த விரிப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
- நிகழ்ச்சியில் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்த வேண்டும். பொது மக்கள் கூடித் தொழுகை நடத்தும் இடங்களைத் தொடர்ச்சியான முறையில் சுத்தம் செய்து கிருமிநாசினிகளைக் கொண்டு கழுவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.