பிப் 1ல் ரத சப்தமி 2020 : திருமலையில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலாவரும் மலையப்பசுவாமி
திருப்பதியில் பிப்ரவரி 1ஆம் தேதி விழா ரத சப்தமி நடைபெறுவதை முன்னிட்டு ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்க இருக்கிறார். புரட்டாசி மாத பிரம்மோற்சவத்திற
திருப்பதி : திருப்பதியில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தைநோக்கிப் பயணிக்கிறார். சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கிச் செலுத்தும் நாள் ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புனித நீராடி சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.
ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி காலையில் ஆறு குளங்களில் குளித்தால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.
சூரிய நாராயணப் பெருமாளை வழிபடும் விதமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த நாளில் சூரியனை வணங்குவதற்கு முன் காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக் கொண்டு குளிப்பது ஐதீகம்.
திருப்பதியில் ரத சப்தமியையொட்டி ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
ரத சப்தமி விரதம் 2020: நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளோடு வாழ சூரியனை வழிபடுங்க
ஏழு வாகனங்களில் சேவை
திருப்பதி க்ஷேத்திரம் ஏழு மலைகள் சூழ அமைந்துள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி ரத சப்தமி விழா அங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவுக்கு அர்த்த பிரம்மோற்சவம் என்று பெயர். பிப்ரவரி 1ஆம் தேதி ரத சப்தமி நாளில் அதிகாலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள் ஏழு வாகனங்களில் மாறி மாறி மலையப்ப ஸ்வாமி மாடவீதிகளில் உலா வருவார். பிறகு 12 மணிக்கு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும். ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஏழு பிராகாரங் கள் உண்டு. ஆகவே, அங்கும் ரத சப்தமி வைபோகம் வெகுசிறப்பாக நடைபெறும்.
ரத சப்தமி வாகன சேவை
ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகனங்களில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
புரட்டாசி பிரம்மோற்சவம்
திருமலை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது ஒவ்வொருநாளும் சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய, சந்திர வாகனங்களில் சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். அதே போல் ரதசப்தமியன்றும் மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் திருமலையின் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். 7 நாள் வைபவத்தை ஒரே நாளில் பக்தர்கள் தரிசித்து மகிழலாம்.
பித்ரு பூஜை
ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஷ்டமி திருநாள். அன்றும் புனித நீர் நிலைகள், அருவிகள் ஆறு குளங்களுக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்ய வேண்டும். இதன் மூலம் சுகமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.