ரதசப்தமி 2019 - சூரியனை வணங்கினால் பாவங்கள் நீங்கும் #Rathasaptami
ரத சப்தமி நாளில் சூரியபகவானை நினைத்து விரதம் இருந்து வணங்கினால் நன்மைகள் நடைபெறும். பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
மதுரை: ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வணங்குவதன் மூலம் அளவற்ற நன்மைகளை பெற முடியும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய எல்ல வகையான பாவங்களையும் அகற்ற முடியும். ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் இந்த ஏழு வகையான பாவங்களும் நீங்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ரதசப்தமி என்பது மகா சப்தமி என்றும் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் தென் திசையிலிருந்து வட திசைக்கு நகர்த்தி செல்லும் காலத்தின் துவக்கமாக இந்த ரத சப்தமி அமைகிறது. சூரிய பகவானின் ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் 12 சக்கரங்களும் 12 ராசிகளையும் குறிக்கும் வண்ணம் அமைகிறது.
திருமலை திருப்பதியில் உறையும் ஸ்ரீவெங்கடேசப் பெருமானுக்குத் தினந்தோறும் திருவிழாதான். எப்போதும் சர்வ அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான். என்றாலும், திருப்பதியின் பெருமைக்குப் பெருமை அங்கு பிரமோற்சவம், ஜென்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கங்கம்மா சத்ரா போன்ற பல திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் விஷேசமான திருவிழா ரதசப்தமி திருநாள்.
ரதசப்தமி விரதம்
ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வணங்குவதன் மூலம் அளவற்ற நன்மைகளை பெற முடியும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய அனைத்து பாவங்களையும் அகற்ற முடியும். அறிந்தும் அறியாமலும், நம் உடலாலும் உள்ளத்தாலும் இந்த பிறப்பிலும் இதற்கு முந்தைய பிறப்பிலும் நாம் ஏழு வகையான பவங்களை செய்திருக்கிறோம் என புராணங்கள் கூறுகின்றன. ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் இந்த ஏழு வகையான பாவங்களும் நீங்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பித்ரு தர்ப்பணம்
ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரத சப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் நாளை அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.
திருமலையில் பிரம்மோற்சவம்
சூரிய பகவானை ஆராதிக்கும் இந்ததிருநாளில் சூரியபகவானின் அதிதேவனான நாராயனணும் கொண்டாடப்படுகிறார். அதனால் தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இன்று நடைபெறும் ஒரு நாள் ரதசப்தமி பிரம்மோற்சவத்தில் மலையப்பசுவாமி விதவிதமான அலங்காரங்களில் வீதி உலா வருவார். இன்று ஒரே நாளில் ஏழு வித வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா வருவார். புரட்டாசி பிரம்மோற்சவத்தை காணமுடியாதவர்கள் இந்த ஒரு நாள் ரத சப்தமி பிரமோற்சவத்தை கண்டு மகிழலாம். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதியில் குவிந்துள்ளனர்.
பக்தர்களுக்கு தரிசனம்
ஏழுமலையான் இன்று ஒரே நாளில் காலை முதல் இரவு வரை 7 வாகன சேவைகளில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் 175 கேலரிகளும் சீரமைத்து, தூய்மையாக வைக்கப்பட்டுள்ளன. மாடவீதிகளில் 55 உணவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுகின்றன.