ரதசப்தமி 2019 : எருக்க இலைக்கும் சூரியனுக்கு என்ன தொடர்பு தெரியுமா?
அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். அதனால் தான் அதனை சூரியன் தலையில் சூடியிருக்கிறார். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை.
சென்னை: ஏழாவது நாளான சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. ஒவ்வொரு நாளும் சூரிய பகவானையும் வெள்ளெருக்கு விநாயகரையும் வணங்கி நமது பணியை தொடங்கினால் நன்மைகள் நடைபெறும். ரதசப்தமி நாளில் எருக்கன் இலையை உடம்பின் மீது வைத்து குளித்தால் பாவங்கள் நீங்கும்.
மகாபாரத காவியத்தில் வரும் பிதாமகர் பீஷ்மரின், துன்பம் நீங்க வழி காட்டிய பெருமை இதற்கு உண்டு. தான் விரும்பியபோது இறக்கும் வரத்தை பீஷ்மர் பெற்றிருந்தாலும் துரியோதனனின் பாவச்செயலை தடுக்க முடியாமல், அமைதியாக இருந்த காரணத்தால், வரமே சாபமாக மாறும் தன்மை பெற்று விட்டது.
அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் தந்தையிடம் ஆலோசித்து, அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கச் சொல்கிறார். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கன்செடி இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பீஷ்மர்.
மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால், உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் விட வேண்டி காத்திருந்தார். உரியகாலம் வந்தும் பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்தார் வேதவியாசர். அவரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருத்தப்பட்டு கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மா! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருப்பதும் கூடப் பாவம் தான். அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்றார்.
பீஷ்மருக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது. சபையின் நடுவே பாஞ்சாலி அவமதிக்கப்பட்டபோது, தான் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்ததே இந்த துன்பத்திற்கு காரணம் என்று உணர்ந்தார். இதற்கு விமோசனம் இல்லையா? என்று வியாசரிடம் பீஷ்மர் கேட்டார். உடனே வியாசர், எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்பொழுதே அது அகன்று விட்டாலும், அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார்.
உடனே பீஷ்மர், சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டினார். அதற்கு மறுத்த வியாசர், எருக்க இலையை சுட்டிக்காட்டி, அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். அதனால் தான் அதனை சூரியன் தலையில் சூடியிருக்கிறார். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை. அதே போல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலைக் கொண்டு அலங்கரிக்கிறேன் என்றார். அப்படிச் செய்ததால் அவரது துன்பம் விலகி, ஏகாதசி அன்று உயிர்நீத்தார்.
அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும்.
ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்' என்று ஆறுதல் சொன்னார். ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.
ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும். ரத சப்தமி நாளன்று சூரியனின் தலையில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளை வைத்து, அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை வைத்து, அவரது பூவுலக கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுக்கிரகம் செய்யப்பட்டது. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும். ஆன்மிக பயிற்சிகள் தொடங்கவும், ரதசப்தமி உகந்த நாளாகும்.
சூரியன் உதிக்கும் சமயத்தில் குளித்து முடித்து, தனது அன்றாட கடமைகளை செய்ய தொடங்குபவரிடம் செல்வம் சேரும் என்பது சாஸ்திரம். ரத சப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி சொல்லும் தாத்பரியமும் அதுதான். ரத சப்தமி நாளில் தொடங்கும் தொழில், பணிகள் ஆகியவை சிறப்பாக விருத்தி அடைவதாகவும் ஐதீகம். அன்று செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ரத சப்தட நாளில் ஆரம்பித்து தினமும் சூரியோதய நேரத்தில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, செல்வ வளம் ஏற்படும் என்பது உறுதி.