புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது - ஆன்மீகத்தோடு அறிவியலும் இருக்கு
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை: புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது என்று தெரிந்தாலே ஆடு,கோழிகள் எல்லாம் உற்சாகத்தில் துள்ளி விளையாடும் காரணம் ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளுக்கு மாறிவிடுவார்கள். நாளைய தினம் புரட்டாசி மாதம் தொடங்குகிறது. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் புரட்டாசி மாதப் பிறப்புடன் அற்புதமான அமாவாசையும் இணைந்து வருகிறது மிகச்சிறந்த இந்த நல்ல நாளில் விரதத்துடன் தொடங்கலாம்.
புரட்டாசி மாத தட்ப வெப்ப நிலை என்பது, அக்னி நட்சத்திர வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் அதிக கேடு விளைவுக்கும், அந்த வெப்பம் நம்முடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது இந்த சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் மேலும் கூடுதல் சூட்டை கிளப்பி வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தி, நம்முடைய உடல் நலத்தை கெடுக்கும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.
புரட்டாசி மாதம் அநேகம் பேர் சைவத்திற்கு மாறி விடுவதால் காய்கறி கடைக்காரர்கள் குஷியாகிவிடுவார்கள். காய்கறிகளின் விலையும் உச்சத்திற்கு சென்று விடும். அதே சமயம் சிக்கன், மட்டன் ஸ்டால்கள் அனைத்தும் காற்று வாங்க ஆரம்பித்து விடும்.
பிரதோஷம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனம்
அசைவம் சாப்பிட தடை
என்ன தான் ஒரு கிலோ சிக்கனுக்கு இரண்டு முட்டை இலவசம், ஒரு கிலோ மட்டன் எடுத்தால் ஈரல் இலவசம் என்று சொல்லி, விலையை குறைத்தாலும் கூட யாரும் புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான இந்துக்கள் அசைவத்தின் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. அதே போல், சுத்த சைவ ஹோட்டல்களில் கூட்டம் நிரம்பி வழியும். அசைவ ஹோட்டல்களில் குறைவான ஆட்களே சாப்பிடுவதுண்டு.
பெருமாள் மாதம்
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம், இம்மாதம் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்பதால் தான். மேலும், ஜோதிட ரீதியாக பார்த்தால் புரட்டாசி மாதம் கன்னி ராசிக்கு உரிய மாதம். இந்த மாதத்தின் அதிபதி புதன் கிரகம் ஆகும். புதன் மஹாவிஷ்ணுவின் அம்சம் ஆகும். அதோடு புதன் கிரகம் சைவத்திற்கு உரிய கிரகம் என்பதாலும் நம் முன்னோர்கள் இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
அறிவியல் பூர்வமான உண்மை
அறிவியல் பூர்வமாக பார்த்தால், புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெளிச்சம் குறைந்து காணப்படும். இதன் காரணமாக பூமியின் சுழற்சி இயக்கத்தின் படி நமக்கு செரிமானக் குறைவும், வயிற்று உபாதைகளும் ஏற்பட்டு நம் உடம்பில் கெட்ட கொழுப்புகள் தங்கி விடும். ஆகவே தான், புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் நன்மை விளைவிக்கும் சைவ உணவுகளை உண்டும், துளசி தீர்த்தத்தை குடிக்க வேண்டும் என்று நம் மூதாதையர்கள் சொல்லி இருக்கின்றனர்.
சூட்டை கிளப்பும் வெயில்
புரட்டாசி மாதத்தில் தென்மேற்கு பருவமழையும் குறைந்து காற்றும் கணிசமாக குறைவதோடு, லேசான மழை தொடங்கும் மாதமாகும். மழை பெய்தாலும் கூட பூமியை குளிர்விக்கும் அளவுக்கு மழை பெய்யாது. பல மாதங்களாக வெய்யிலின் தாக்கத்தால் சூடாகியிருந்த பூமி மழை நீரை ஈர்த்து இம்மாதத்தில் தான் வெப்பத்தை குறைக்க தொடங்கும். இதனாலேயே, இம்மாதத்தை சூட்டை கிளப்பி விடும் மாதம் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.
சைவம் சாப்பிடுவது நல்லது
புரட்டாசி மாத தட்ப வெப்ப நிலை என்பது, வெய்யில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் அதிக கேடு விளைவுக்கும், அந்த வெப்பம் நம்முடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது இந்த சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் மேலும் கூடுதல் சூட்டை கிளப்பி வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தி, நம்முடைய உடல் நலத்தை கெடுக்கும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.
புரட்டாசி பெருமாள் தரிசனம்
இதன் காரணமாகவே பெரும்பாலான இந்துக்கள், புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவு வகைகளை தவிர்த்து, சைவ உணவுகளை விரும்பி உண்கின்றனர். அதோடு புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு துளசி தீர்த்தம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.