அதிசயமான பூரி ஜெகன்நாதர் ஆலய தரிசனம் அனைவருக்கும் கிடைக்குமா?
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலினுள் இந்து அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
பூரி: பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் இந்துக்கள் தவிர பிற மதத்தவர் நுழைய அனுமதியில்லை. ஜெகந்நாதரின் தரிசனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து. இந்து அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலம் பூரி ஜெகன்நாதர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்கள் திருமேனி மரத்தால் ஆனது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த மூன்று திருமேனிகளும் உரிய சடங்குகளுடன் புதியதாக மரத்தில் வடிக்கப்பட்டு ஆலயத்தில் வைக்கப்படும். இந்த ஆலயத்தில் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும். 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் இந்துக்கள் மட்டுமே நுழைய அனுமதி உள்ளது.
இந்த கோவிலின் கருவூல அறையில் ஜெகன்நாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பூரி ஜெகன்நாதர் கோவிலில் ஆண்டு தோறும் தேர் திருவிழா மிகவிமரிசையாக 9 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம்
பூரி ஜெகன்நாதர் கோவிலின் தேர் திருவிழாவில் ஏறக்குறைய 7,00,000 பேர் பங்கு கொண்டு கோவிலின் மிகப் பெரிய தேரை பூரிநகரின் வீதிகளில் இழுத்து வருவது வாடிக்கை. இந்துக்களை போலவே முஸ்லிம்களும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுத்து ஒற்றுமையுடன் கொண்டாடுவார்கள்.
தேரோட்டத்தின் பெருமை
ஒரிசாவில் இருக்கும் முஸ்லிம்கள் இந்து பண்டிகைகளை கொண்டாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். முஸ்லிம் பெண்கள்இந்து கடவுள்களின் அருளை பெறுவதற்காக இந்து மத சடங்குகளை பின்பற்றுகின்றனர். கிறிஸ்தவர்களும் ஜெகன்நாதர் கோவிலின் தேர்த்திருவிழாவில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்தேர் வடம் பிடித்து தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டாலும் இந்துக்களை தவிர வேறு யாரும் கோவிலுக்குள்அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிராக பறக்கும் கொடி
இந்த கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும். கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும். இக்கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.
சமைக்கும் உணவில் அதிசயம்
இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது. இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் சாப்பிட கிடைக்கும்.
அதிசய ஆலயம்
சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
உச்சநீதிமன்றம் விசாரணை
இத்தகைய பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோவிலில் இந்துக்கள் இல்லாத பிற சமூகத்தினரை அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெகந்நாதர் கோவிலில் பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்து மதத்தை சாராதவர்களும் கோவிலினுள் நுழைய அனுமதி அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி கோவில் நிர்வாகாத்தை கேட்டுக்கொண்டது.
அனுமதிக்க முடியாது
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு இதனை கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து பூரி நாடாளுமன்ற உறுப்பினர் பினகி மிஸ்ரா மற்றும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த மகேஸ்வர மோகந்தி உள்ளிட்ட 22 பேர் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து இதுகுறித்து பேசினர். செய்தியாளர்களை சந்தித்த கோவில் நிர்வாகிகளில் ஒருவரான சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். பூரி ஜெகன்நாதர் தரிசனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்குமா?