கடன், எதிரி, நோய் பிரச்சினை தீரலையா? - அனுமனை சரணடையுங்கள்
தீராத கடன் தொல்லைகளாலும், நோய்களினாலும் பலரும் மனக்கலக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடல் தொல்லையால் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
சென்னை: கடன் தொல்லையால் தவிப்பவர்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒருபக்கம் இருக்க, எதிரிகள் தொல்லையும் சிலருக்கு அதிகம் இருக்கும். இந்த தொல்லைகளை எப்படி சமாளிப்பது என்று பலரும் யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். கடன் தொல்லையும், நோய்களும் வருவதற்கு நம்முடைய ஜாதகத்தில் உள்ள கிரகங்களும் காரணமாக இருக்கும். நோய், கடன் தொல்லை தீர அதற்குரிய பரிகாரங்களை செய்ய வேண்டும். அனுமனையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.
தொழிலில் திடீர் வீழ்ச்சி, கடன் சுமை, தீராத நோய் போன்றவை ஜாதகங்களின் கிரக சேர்க்கைகள் மூலம் உண்டாகும் அமைப்பாகும். லக்னம், இரண்டாம் இடம், நான்காம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினோறாம் இடம் ஆகியவை நல்ல அம்சத்தில் இருந்தால் கடன்களால் தொல்லை இருக்காது, வரவும் வராது, வந்தாலும் வாழ்வாதாரத்தை பாதிக்காது.
ஒருவருக்கு நோய், கடன், எதிரி இம்மூன்றுக்கும் உரிய இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படும் 6 ம் பாவம் ஆகும். இந்த 6ஆம் பாவத்தைக் கொண்டுதான் ஜாதகருக்கு வரக்கூடிய நோய்கள், கடன் மற்றும் எதிரிகள் பற்றி, துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதன்படி 6ஆம் பாவம், அதன் அதிபதி மற்றும் 6 ஆம் பாவத்தில் நின்ற கிரகங்கள் பற்றி ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும். அனுமனை வணங்க கடன் பிரச்சினை எளிதில் தீரும்.
சனிபகவான் நிலை
ஜாதகத்தில் சனி
நோய், கடன் மற்றும் எதிரிகளின் காரகக்காரன் சனி. ஒருவரது ஜாதகத்தில், சனி பகவான் வலுவடைந்து நின்றிருந்தால் நீண்ட ஆயுள் இருக்கும். அதே நேரத்தில் நோய், கடன் தொல்லை கூடவே எதிரிகளின் தொல்லை இருக்கும். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடப்பவர்கள், சனிக்கிழமையன்று விரதமிருந்து, எள் தீபம் ஏற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச, சுபமற்ற கிரகங்கள் இருப்பது, 6, 8, 12ம் அதிபதிகள் சம்பந்தப்படுவது போன்றவைதான் ஒருவருக்கு பல கஷ்ட, நஷ்டங்களைத் தருகின்றன. தனகாரகன் குரு, நீசம் மற்றும் பல குறைபாடுகளுடன் இருந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். நீச்ச கிரகங்களான ராகு, கேது, செவ்வாய் போன்றவை சனியுடன் சம்பந்தப்படும்போது பல பாதிப்புக்கள் உண்டாகின்றன.
ஆறாம் பாவம்
கிரகங்களின் கூட்டணி
6 ஆம் பாவத்தில் சனி, ராகு, கேது நின்று இருந்தால், நம்பியவர்களால் பணம் இழப்பு, நோய்கள் மற்றும் எதிரிகள் தானாகவே அமைந்து விடும்.
6 ஆம் பாவாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலும் நோய், கடன் மற்றும் எதிரிகளின் தொல்லை நீங்காது. லட்சுமி நரசிம்மரை வணங்க கடன் பிரச்சினை காணாமல் போகும். நரசிம்மர் எங்கும் நிறைந்திருப்பவர் நாம் கேட்காமலேயே நமக்கு அருள் புரிவார். சுவாதி நட்சத்திர நாளிலும், பிரதோஷ வேளையிலும், பௌர்ணமி தினத்திலும் லட்சுமி நரசிம்மரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கடன் தீர்க்கும் முருகன்
கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும்.
மைத்ர முகூர்த்தம்
செவ்வாய்க்கிழமை பிரதோஷ காலத்தில் சூரிய அஸ்தமானத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில் கடனைத் திருப்பித் தரலாம். அனுஷம் நட்சத்திரமும் விருச்சக லக்னமும் கூடிய காலத்திற்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடன் தொகையில் ஒரு சிறு தொகையைக் கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருப்பினும் அக்கடன் முழுவதும் விரைவில் தீர்ந்துவிடும். வளர்பிறை வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமையன்று பசுமாட்டிற்கு கீரை, பழங்கள் தர கடன் பிரச்சினை தீரும்.
ஹனுமன் சாலிசா கடன் தீர்க்கும்
சூரியன் கடன் பிரச்சினைகளை தீர்ப்பார். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹிருதயம் படிக்கலாம். சூரிய சந்திர கிரகணம் ஏற்பட்டு கிரகணம் விலகும் சமயம் கடனில் ஒரு பகுதியைத் திருப்பித் தரலாம். ஆஞ்சநேயரை பக்தியுடன் வணங்கலாம். ஹனுமன் சாலிசா தினமும் படிக்க கடன் பிரச்சினை தீரும். 40 நாட்கள் சைவ உணவுகளை சாப்பிட்டு செவ்வாய்கிழமைகளில் அனுமன் ஆலயத்திற்கு சென்று வரலாம். அஸ்வினி, மகம் மூலம் நட்சத்திர நாட்களில் ஏழைகளுக்குப் போர்வை வாங்கித் தரலாம்.
நோய்கள் நீங்கும்
தினந்தோறும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து விட்டு முன்னோர்களையும் சூரிய பகவானையும் வணங்க தீராத நோய்கள் தீரும். தன்வந்திரி பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி வந்தாலும் நோய் நொடியற்ற வாழ்க்கை வாழ முடியும். ஏழைகளுக்கு உணவும், ஆடைகளை தானமாக வழங்கலாம் இது நொய் தீர்க்கும் சிறந்த பரிகாரமாகும்.