சபரிமலை யாத்திரை: மதநல்லிணக்கத்தின் அடையாளமான வாபர் சாமி சந்நிதி
சபரிமலைக்கு செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் அமைந்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அங்கு சென்று, தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சரியத்தையும் ஒருமனதாகி, முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதியளித்து, அதன்
பட்டனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் தன்னை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் முதலில் வாவர் சுவாமியை தரிசித்து விட்டு அதன் பின்பே தன்னை தரிசிக்க வருவார்கள் என்று வாக்குறுதியளித்தார். அதன்படி தான் அன்று முதல் வாவர் சாமியை வணங்கி தரிசித்துவிட்டு அதன் பின்பே சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்க மலையேறிச் செல்கின்றனர். இந்த சன்னதியில் கறுப்பு மிளகு காணிக்கைப் பொருளாக பக்தர்களால் படைக்கப்படுகிறது. மேலும் இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது. இரண்டு வேறு மத நம்பிக்கைகளை ஒன்றிணைக்கும் இந்த வாவர் சன்னதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் மத நல்லிணக்க அடையாளமாக திகழ்கிறது.
நம்முடைய ஆட்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதில் பலே கில்லாடிகள். அது மட்டுமல்ல, நாம் எங்காவது நடந்து செல்லும்போது, ஒரு இடத்தில் சட்டென நின்று கொண்டு, அல்லது ஒரு பாலத்தில் நின்று கொண்டு கீழே எட்டிப் பார்த்தால், அடுத்து வருபவர்களும் தொடர்ந்து எட்டிப்பார்ப்பார்கள். ஏன், எதற்கு, எப்படி என எதைப் பற்றியும் யோசிக்கவே மாட்டார்கள். கேட்டால், தெரியலை, அவங்க எட்டிப்பாத்தாங்க, அதான் நானும் எட்டிப்பாக்குறேன், என்று புத்திசாலித்தனமாக பதிலளிப்பார்கள்.
ஆனால் சில நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும், வழி வழியாக நடந்து வரும் சம்பிரதாயங்களின் அடிப்படையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதே தான் சபரிமலையில் அமைந்திருக்கும் வாவர் சாமியின் தரிசனமும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
மத நல்லணக்கத்திற்கு மிசச்சிறந்த ஒற்றுமையாக சபரிமலை ஐயப்பனை குறிப்பிட்டு சொல்லலாம். இந்து, இஸ்லாம், கிறிஸ்து, சீக்கியர் என அனைத்து தரப்பு மக்களும் பயபக்தியுடன் கும்பிடும் தெய்வம் ஐயப்பன் தான்.
41 நாட்கள் விரதம்
பிரம்மச்சாரி கடவுளான ஐயப்பனை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம். அதிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்கும் லட்சக்கணக்கானோர் சபரிமலை செல்வது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த தரிசனத்திற்காகவே, ஐயப்ப பக்தர்கள் அனைவருமே கடுமையான விரதம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று மாலை போட்டு, தினசரி விடியற்காலை மாலை என இரண்டு முறை குளித்து பூஜை செய்து 41 நாட்கள் மிகக் கடுமையாக விரதமிருந்து, இருமுடி கட்டிக்கொண்டு, சபரிகிரி வாசனான ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
வாபர் தரிசனம்
இவ்வாறு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக மலையேறும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர், பாரபட்சமில்லாமல் செல்லும் முக்கியமான இடம் வாவர் சமாதி தான். இதற்கு முக்கிய காரணம் ஐயப்ப சுவாமியும் வாவரும் இணைபிரியா தோழர்கள் என்பதால் தான், ஐயப்ப சுவாமி தான் வீற்றிருக்கும் மலையிலேயே வாவருக்கும் ஒரு இடமளித்து, தன்னை தரிசிக்க வருவோர் அனைவரும் வாவர் சாமியை முதலில் தரிசித்துவிட்டு, அதன் பின்பு தன்னை தரிசனம் செய்ய வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவரையும் தன்னுடனேயே சேர்த்துக்கொண்டார் என்று காலம் காலமாக சொல்லி வருகின்றனர்.
நண்பர்கள்
இதில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம், சபரிமலை ஐயப்பனின், வரலாறும், வாவர் சாமியின் தோற்றமும் தான். ஐயப்பனின் அவதாரம் நிகழ்ந்த ஆண்டு உறுதியாக யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தாலும் நிச்சயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதே அனைவரின் நம்பிக்கையாகும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அந்த காலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை தான் பக்தர்கள் செல்வது வழக்கம். அதற்கு முக்கிய காரணம், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் இடம் அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய மலை உச்சி என்பதாலும், கொள்ளையர்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதாலும், பாதுகாப்பு கருதியே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்துவருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
பாலகன் ஐயப்பன்
இந்நிலையில் 9ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பந்தள மன்னன் ராஜசேகரனுக்கு வாரிசாக பிறந்தார் தர்மசாஸ்தா. இவரைத் தான் மன்னன் ராஜசேகரன் ஐயப்பன் என்று பெயரிட்டு அழைத்து வந்தார். இதன் பிறகு நடந்த வரலாறு நாம் அறிந்த ஒன்று தான். புலிப்பால் கொண்டு வர காட்டிற்கு சென்ற ஐயப்பன், அங்கு மலைக்கு வரும் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த வாவர் என்ற இஸ்லாமியர் ஒருவரை வதம் செய்யச் சென்றார். ஆனால் பாலகனாக இருந்த ஐயப்பனை மதிக்காமல் போரிட்டார். இறுதியில், வாவரை வதம் செய்ய முயன்றபோது, அவரிடம் வாவர், என்னைக் கொன்றுவிட்டால் என்னை நம்பியிருக்கும் என்னுடைய சுற்றத்தாரை யார் காப்பாற்றுவது என்று கேட்டார்.
விபூதி பிரசாதம்
அதற்கு ஐயப்ப சுவாமி, அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, வாவரை ஆட்கொண்டதோடு, தன்னை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் முதலில் வாவர் சுவாமியை தரிசித்து விட்டு அதன் பின்பே தன்னை தரிசிக்க வருவார்கள் என்று வாக்குறுதியளித்தார். அதன்படி தான் அன்று முதல் வாவர் சுவாமியை வணங்கி தரிசித்துவிட்டு அதன்பின்பே சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்க மலையேறிச் செல்கின்றனர்.
சபரிமலைக்கு செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் அமைந்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அங்கு சென்று, தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சரியத்தையும் ஒருமனதாகி, முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதியளித்து, அதன் பிறகே சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். அதன்படியே பக்தர்கள் அனைவரும் சென்று வருகின்றனர். இந்த பள்ளிவாசலில் விபூதி பிரசாதமாக வழங்குவது சிறப்பாகும்.
மத நல்லிணக்கம்
வாவர் சாமிக்கும் ஐயப்பனுக்குமான தொடர்பு பற்றி பல கதைகள் வழங்குகின்றன. வாவர் சாமி ஆரம்பத்தில் ஐயப்பனை எதிர்த்து போரிட்டதாகவும் ஆனால் இந்த யுத்தத்தில் தோற்றுப்போன வாவர் ஐயப்பனின் நண்பனாகவே மாறிவிட்டதாகவும் சொல்லப்படுவது அவற்றில் ஒன்றாகும். கருங்கல்லால் ஆன வாவர் ஸ்வாமியின் சிற்பத்தை கொண்டுள்ள இந்த சன்னதியில் ஒரு புராதன வாளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியில் கறுப்பு மிளகு காணிக்கைப் பொருளாக பக்தர்களால் படைக்கப்படுகிறது. மேலும் இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது. இரண்டு வேறு மத நம்பிக்கைகளை ஒன்றிணைக்கும் இந்த வாவர் சன்னதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் மத நல்லிணக்க அடையாளமாக திகழ்கிறது.