சபரிமலை: 453 சவரன் தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பன் - கண் குளிர தரிசித்த பக்தர்கள்
சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு 453 சவரன் தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சன்னிதானத்தில் கூடியிருந்த பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.
பத்தனம் திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முக்கிய அம்சமாக 453 சவரன் தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சன்னிதானத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாதம் 1ஆம் தேதியே சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து ஐயப்பனை நினைத்து விரதம் இருந்தனர். மண்டல பூஜைக்கு எப்படியாவது ஐயப்பன் தரிசனம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர்களில் சில ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே ஐயப்பனை தரிசிக்க அனுமதி கிடைத்தது.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 16ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை காலத்தில் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா காலமாக இருப்பதால் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அதிர்ஷ்டம் கிடைத்தது.
மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக கடந்த 22ஆம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்ட தங்க அங்கிக்கு பக்தர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு கொடுத்தனர்.
தங்க அங்கி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பம்பை வந்தடைந்தது. அங்கிருந்து பதினெட்டாம் படி வழியாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தியிடம் ஆபரண பெட்டி ஒப்படைக்கப்பட்டது.
இதனைப் பெற்றுக்கொண்ட மேல்சாந்தி ஐயப்பனுக்கு தங்க அங்கியை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து சிறப்பான தீபாராதனை நடைபெற்றது. இதனை காண சன்னிதானத்தில் காத்திருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நாளை பிற்பகல் நடைபெறுகிறது. இதற்காக முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழுடன் நிலக்கல்லில் காத்திருக்கின்றனர்.
சபரிமலை: 5,000 பக்தர்களை அனுமதிக்கும் ஹைகோர்ட் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனு
நாளைய தினம் சபரிமலையில் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மண்டல பூஜை விழாவை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.