கங்கை நதிபோல புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி - சபரிமலை பம்பையின் புராண கதை
ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் தவறாமல் புனித நீராடிவிட்டு செல்லும் இடம் பம்பா நதி. இந்த பம்பா நதிக்கு இத்தனை புனிதம் எப்படி வந்தது என்பது பற்றி ஒரு புராண கதையே உள்ளது.
சபரிமலை: ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் தவறாமல் புனித நீராடிவிட்டு செல்லும் இடம் பம்பா நதி. எருமேலி வழியாக பெரும் பாதை எனப்படும் பெரு வழிப்பாதை வழியாக நடந்து வரும் ஐயப்ப பக்தர்களும், கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம், ஆலப்புழா, சாலக்காயம், புனலூர் வழியாக வரும் ஐயப்ப பக்தர்களும் தங்கி இளைப்பாறி உடல் வலி தீர நீராடிவிட்டு பயணத்தை தொடங்கும் இடம் பம்பா நதி. இந்த பம்பா நதிக்கு இத்தனை புனிதம் எப்படி வந்தது என்பது பற்றி ஒரு புராண கதையே உள்ளது.
ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை பம்பா நதிக்கும் அளித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், சபரிமலைக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதும் இந்த பம்பா நதி தான்.
இமயத்தில் தோன்றி காசி நகரத்தின் வழியாக பாயும் கங்கை நதிக்கு ஒப்பாக, பக்தர்களின் பாவங்களை போக்கும் புண்ணிய நதியாக இந்த பம்பா நதி உள்ளது. தென் கங்கை (தட்ஷிண கங்கை) என்றழைக்கப்படும் பம்பா நதியின் கரையோரத்தில் தான் சாஸ்தாவான ஐயப்ப சுவாமி குழந்தை வடிவில் அவதரித்தார் என்று ஐயப்பனின் வரலாறு சொல்கிறது.
நீலி என்ற பெண்ணுக்கு ராமபிரான் கொடுத்த வரத்தினால் உருவானது பம்பா நதி. சீதா தேவியை ராவணன் கடத்திக்கொண்டு போன பிறகு, ஸ்ரீராமனும், லட்சுமணனும் சீதா தேவியை தேடி காடு மலை என சுற்றி அலைந்தனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில், மதங்க முனிவரின் குடில் கண்ணில் தென்பட அங்கு சென்றனர். அந்த நேரத்தில் முனிவர் இல்லை, சிவாலயங்களை தரிசிப்பதற்காக தீர்த்த யாத்திரை சென்றிருந்தார்.
அவருடைய பணிப்பெண்ணான நீலி என்ற மலைவாழ் பெண் தான் வரவேற்றாள். முனிவருக்கு பணிவிடை செய்து வரும் அவள், தான் தாழ்த்தப்பட்ட மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவள் என்ற காரணத்தால், ஸ்ரீராமருக்கும் லட்சுமணருக்கும் உணவளிக்க தயங்கினாள் நீலி.
நீலியின் தயக்கத்தை போக்க விரும்பிய ஸ்ரீராமர், இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட அனைவருமே சமமானவர்கள் தான். அன்புள்ளம் கொண்டவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று சொல்லி, நீலியின் தயக்கத்தை போக்கினார்.
ஸ்ரீராமரின் அருளுரையை கேட்டு மகிழ்ச்சியுற்ற நீலி, பணிவன்புடன் அவர்கள் இருவருக்கும் உணவளித்து உபசரித்தார். அதனை அன்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமர், அவளை புனிதப்படுத்த விரும்பினார்.
உன்னை தாழ்ந்த குலத்தவள் என்று உதாசீனப்படுத்திய மக்கள் என்றென்றும் உன்னை போற்றி வணங்கும் அழியாப் புகழை உனக்கு அளிக்க விரும்புகிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள் என்று அன்புடன் கேட்டார் ஸ்ரீராமர். அதற்கு நீலி, எனக்கு மோட்சம் அளித்து, இனிமேல் பிறப்பெடுக்காத நிலை வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டாள்.
நீலியின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமர், அன்பால் உயர்ந்த உன்னை, இந்த உலகமே போற்றி வணங்கும் நிலை உணக்கு வரும். இந்தப் பகுதிக்கு வரும் அனைவருமே, உன்னை போற்றி வணங்கி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன், என்று சொல்லி, அவளுடைய பூரண விருப்பத்துடன், அவளை கங்கையைப் போல பொங்கிப் பெருகும் அழகான ஜீவ நதியாக மாற்றினார். அந்த நதிதான் பம்பா நதியாகும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டை விட குறைந்த வருமானம்.. கவலையில் தேவஸ்தானம்!
கங்கையைப் போல் புண்ணிய நதியான பம்பா நதியிலேயே ஸ்ரீராமரும் லட்சுமணனும் மனம் குளிர நீராடிவிட்டு, தன்னுடைய தந்தை தசரதனுக்கும் பிதுர் தர்ப்பணம் செய்தனர். ராமர் போற்றி கொண்டாடிய காரணத்தினாலேயே, பின்னர் பல முனிவர்களும், தற்போது ஐயப்ப பக்தர்களும் பம்பா நதியை போற்றி வணங்கி வருகின்றனர். ஒரு சிலர் பம்பா நதிக் கரைக்கு வந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பம்பை நதியில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் கால் நனைக்க முடியவில்லையே என்ற சோகம் பக்தர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.