கன்னிசாமியும் ஐயப்பனும்... கல்யாணத்திற்காக காத்திருக்கும் மாளிகைபுரத்து அம்மன்
ஐயப்ப பக்தர்கள் மாளிகைப்புறத்தம்மனை தரிசிக்காமல் ஐயப்பனை தரிசிக்க முடியாது. அதற்கு காரணம் ஐயப்பனுக்கும் மாளிகைப்புரத்து அம்மனுக்கு இடையில் உள்ள ஆத்மார்த்தமான பந்தம் தான். அது என்ன பந்தம் அதைப்பற்றிய புராண கதையை காணலாம்.
பட்டனம் திட்டா: பிரம்மச்சாரி ஐயப்பனிடம் மையல் கொண்ட மகிஷி தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டி நின்ற புராண கதை தெரியுமா? தன்னை காதலித்த மகிஷியிடம் வாக்கு கொடுத்திருக்கிறார் ஐயப்பன். அந்த நம்பிக்கையில் இன்றைக்கு காத்துக்கொண்டிருக்கிறார் மாளிகைபுரத்து அம்மனாக மாறி காத்துக்கொண்டிருக்கிறார் மகிஷி. ஐயப்பனுக்கும் மாளிகைப்புரத்து அம்மனுக்கு இடையில் உள்ள ஆத்மார்த்தமான பந்தம் என்ன என்று புராண கதை உள்ளது பார்க்கலாம்.
என்னை மணந்துகொள்ளுங்கள் என்று வேண்டி நின்ற மாளிகைப்புரத்து அம்மனிடம், நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதாகவே சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை மீற முடியாது என்று ஐயப்பன் கூறினார். அதற்கு அந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தவே, ஐயப்பனும், நான் வீற்றிருக்கும் மலையிலேயே நீயும் அமர்ந்திரு. என்றைக்கு ஒரு கன்னி சாமியாவது என்னைக் காண வராமல் இருக்கிறாரோ அன்றைக்கு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
மாலைபோட்டு மலைக்கு போகும் சாமிகள் சபரிகிரி வாசனான ஐயப்பனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை மஞ்சமாதா என்று அழைக்கப்படும். மாளிகைப்புறத்தம்மனுக்கும் கொடுக்கின்றனர். சபரிமலைக்கு வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் இந்த மாளிகைப்புறத்தம்மனை தரிசிக்காமல் ஐயப்பனை தரிசிக்க முடியாது. அதற்கு காரணம் ஐயப்பனுக்கும் மாளிகைப்புரத்து அம்மனுக்கு இடையில் உள்ள ஆத்மார்த்தமான பந்தம் தான்.
ஐயப்பன்
ஐயப்பனுக்கு மாலை அணியும்போதே, பக்தர்கள் அனைவருமே, இந்த மாளிகைப்புரத்து அம்மனின் பெயரையும் சொல்லியே மாலை அணிந்துகொள்கின்றனர். உண்மையில், இந்த மாளிகைப்புரத்து அம்மன் தான் ஐயப்பன் அவதாரம் உருவாக முழுமுதற்காரணமாகும்.
மகிஷனின் தங்கை மகிஷி
தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை அன்னை பார்வதி துர்கா தேவியாக அவதரித்து, அவனை வதம் செய்தார். தன்னுடைய அண்ணன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்கள் தான் காரணம் என்பதை அறிந்த அவனது தங்கை மகிஷி, தேவர்களையும், முனிவர்களையும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தாள். இதனால் வேதனைப்பட்ட தேவர்களும் முனிவர்களும் மீண்டும் சிவபெருமானை சரணடைந்து முறையிட்டனர். தங்களை காத்தருள வேண்டுமென ஈசனிடம் வேண்டினர்.
சிவன் விஷ்ணுவின் புத்திரன்
மகிஷாசுரன் எப்படி தன்னுடைய மரணம், ஒரு பெண்ணால் ஏற்படவேண்டுமென்று வரம் பெற்றிருந்தானோ, அதுபோலவே, மகிஷியும், தன்னுடைய மரணம் என்பது எம்பெருமான் ஈசனுக்கும் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றிருந்தாள். அந்த குழந்தை 12 வயது பாலகனாக வரும் சமயத்தில் தான் நடக்கவேண்டும் என்று வரம் பெற்றிருந்தாள்.
ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்தது
ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கும் என்ற அகங்காரத்தில் தனக்கு அழிவே கிடையாது என்று நினைத்தே தேவர்களையும் முனிவர்களையும் இம்சித்து வந்தாள். ஆனால், நடப்பது எல்லாமே ஈசனின் திருவிளையாடல் என்பது மகிஷிக்கு தெரியாமல் போய்விட்டது. மகிஷியின் கொடுமை அளவுக்கு மீறிச் சென்றபோது, மஹாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து, ஐயப்பனின் அவதாரம் நிகழ்ந்தது. அதன் பின்பு நடந்தது நம் அனைவரும் அறிந்ததே.
வேண்டி நின்ற தேவர்கள்
12 வயது நிரம்பிய பாலகனான ஐயப்பன், தன்னுடைய தாயாரின் தலைவலி தீர புலிப்பால் கொண்டு வர காட்டிற்கு புறப்பட்டார். அங்கு ஐயனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள், பொன்னம்பல மேட்டில் ஐயனை சந்தித்து அரக்கியான மகிஷியால் தாங்கள் படும் துயரங்களை எடுத்துக்கூறி தங்களை காத்தருள வேண்டி நின்றனர். தேவர்களின் கோரிக்கையை ஏற்று, ஐயப்பன் தேவலோகம் சென்று அரக்கி மகிஷியுடன் போரிட்டு வென்று அவளை பூலோகத்தில் தூக்கி எறிந்தார்.
சாபம் நீங்கிய மகிஷி
அந்த அரக்கி வந்து விழுந்த இடமே அழுதா நதிக்கரையாகும். அரக்கி மகிஷி வதம் செய்யப்பட்ட உடனேயே, அவளது அரக்க உருவம் மறைந்து லீலா என்ற அழகான பெண்ணொருத்தி தோன்றினாள். பின்னர் அந்த பெண் ஐயப்பனை வணங்கி நின்று, நான் உங்களால் தான் சாபவிமோசனம் பெற்றேன். என்னுடைய சாபம் நீங்கப்பெற காரணமாக இருந்த நீங்கள் தான் என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள்.
கன்னிசாமி
ஐயப்பனோ, நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதாகவே சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை மீற முடியாது என்று கூறினார். அதற்கு அந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தவே, ஐயப்பனும், நான் வீற்றிருக்கும் மலையிலேயே நீயும் மாளிகைப்புரத்து அம்மனாக அமர்ந்திரு. என்றைக்காவது ஒரு கன்னி சாமியாவது என்னைக் காண வராமல் இருக்கிறாரோ அன்றைக்கு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
சபரிமலை கோவில்
தன்னுடைய அவதார நோக்கத்தை பந்தள மன்னனுக்கு எடுத்துரைத்த ஐயப்பன், தான் அமைதியான சூழலில் தியானம் செய்யப்போவதாக சொல்லி, தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படி சொன்னார். அதோடு, ஒரு அம்பை மலை மீது எய்து, அந்த அம்பு விழுமிடத்தில் தனக்கும், மாளிகைப்புரத்தம்மனுக்கும் ஆலயத்தை அமைக்குமாறு கூறிவிட்டு மறைந்தார். ஐயப்பன் சன்னிதிக்கு இடது புறத்தில் சுமார் 300 அடி தூரத்தில் மாளிகைப்புரத்து அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
கல்யாணத்திற்காக காத்திருப்பு
அன்றிலிருந்து இன்றுவரையிலும், நாள்தோறும் சபரிமலைக்கு செல்பவர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, கண்டிப்பாக மாளிகைப்புரத்து அம்மனையும் வணங்கிவிட்டு தான் திரும்பி செல்கின்றனர். ஆனால் எந்த ஒரு கன்னி சாமியும் ஐயப்பனை தரிசிக்க வராமல் இல்லை. மாளிகைப்புரத்தம்மனும் ஐயப்பனை மணக்க ஆவலோடு காத்திருக்கிறாள்.