ஸ்ரீரங்கநாதனின் தங்கை சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது ஏன் தெரியுமா
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் நோயின்றி வாழ இறைவியே விரதம் இருக்கும் தலம் சமயபுரம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் சமயபுரம் மாரியம்மன் மாசி கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரைக்கும் 28 நாட
சென்னை: அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார் சமயபுரம் மாரியம்மன். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு பச்சைப்பட்டினி விரதத்தை கடந்த ஞாயிறு முதல் தொடங்கியுள்ளார் சமயபுரம் மாரியம்மன்.
அம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களிலும் அம்மனுக்கு நைவேத்தியமாக துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே படைக்கப்படுகிறது. தாளிகை நைவேத்தியத்தை தவிர்த்து விடுகின்றனர்.
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம்.
சமயபுரத்தால் மகிமை
ஸ்ரீரங்கநாதனின் தங்கை சமயபுரம் மாரியம்மன். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப்போலவே சுயம்பு வடிவானவள். 12 ராசிகள் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் எந்திரங்களாக அடக்கி அருள்பாலிப்பது சமயபுரத்தாளின் சிறப்பு. அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரங்களையும் நவ சர்ப்பங்களாக தரித்து அருள்பாலிக்கிறார். எனவேதான் அம்மனை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ராகு கேது தோஷங்கள் நீங்கும். அம்மனை அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் கிரகண காலங்களிலும் வணங்கினால் உச்ச பலன் கிடைக்கும்.
பூச்சொரிதல் விழா
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றதாகும். 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த பச்சைப்பட்டினி விரதம் என்று கேட்கலாம் அதற்கும் ஒரு புராண கதை உள்ளது.
பூக்களால் மூடி தவம்
தேவர்களை இம்சித்த மகிஷாசூரனை புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் தவமிருந்து வதம் செய்தார் அன்னை ஆதிபராசக்தி. மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
பச்சைப்பட்டினி விரதம்
இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா மார்ச் 8ஆம் தேதி மாசி கடைசி ஞாயிறன்று தொடங்கியது. இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவிலின் கொடிமரத்தின் முன்பிருந்து யானை மீது பூத்தட்டுகளுடன் கோவில் குருக்கள் அமர்ந்து வந்தார். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து வந்தனர்.
28 நாட்கள் விரதம்
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று, அம்மன் மீது பூக்கள் சாற்றப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன. நேற்று முதல் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார்.