தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான் - பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு
நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமான சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியடைந்துள்ளார்.
Recommended Video
சென்னை: இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிபகவான் ஒரு ராசிலியிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார் சனிபகவான். சனிபகவான் இன்று நீர் ராசியான விருச்சிகத்தில் இருந்து நெருப்பு ராசியான தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு இன்று செவ்வாய் கிழமை காலை 10.01 மணிக்கு மூலம் நட்சத்திரம் 1வது பாதத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனீஸ்வர பகவான்
சனி பெயர்ச்சியை முன்னிட்டு இன்று 12 ராசிகளைச் சேர்ந்த பக்தர்கள் அர்ச்சனை செய்து பரிகாரம் செய்தனர்.
சனீஸ்வரர் நீதிமான்
சனி என்றாலே எல்லோருக்குமே அச்சம்தான். ஏனென்றால் நாடு ஆண்ட மன்னர்களையும் காட்டுக்கு அனுப்பிய புண்ணியவான். அதனாலேயே சனி ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பெயர்ந்தாலே சற்று நடுக்கம்தான்.
பனிரெண்டு ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகளுக்கு அமரும் சனிபகவான் தனது முழு பயணத்தை முப்பது ஆண்டுகளில் முடிக்கிறார். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வதால் மந்தன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
வாரி வழங்கும் வள்ளல்
சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதற்கேற்ப அல்லாமல் வாழ்வில் கெட்டு நிற்போரையும் தலைநிமிர வைக்கும் ஆற்றல் படைத்தவர் சனி. இவர் மிக நேர்மையானவர், தவறிழைப்பவர்களைத் தண்டிக்கக் கூடியவர், நலம் வேண்டுவோருக்கு ஏராளமாக வாரி வழங்குபவர் என்ற பெருமை உடையவர்.
திருநள்ளாறு சனிபகவான்
விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார் சனிபகவான். இம்முறை சனிபகவான் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய காரைக்கால் மற்றும் புதுச்சேரி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
திருநள்ளாறில் பக்தர்கள்
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். பொதுவாக உக்ரமூர்த்தியாகிய சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகிறார்.இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது என்பது சிறப்பம்சமாகும். இந்த ஆலயத்தில் தர்ப்பைப் புல்தான் தல விருட்சமாக உள்ளது. இவரை தரிசித்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தர்கள் வேண்டுதல்
பக்தர்கள் அதிக சோதனைகள் கொடுக்காமலும், கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் சனீஸ்வர பகவானை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சனீஸ்வரருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனையை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்கள் தரிசனம்
சனிப்பெயர்ச்சி விழாவின்போது உற்சவ மூர்த்தியான சனீஸ்வரபகவான் தங்கக் காக வாகனத்தில் வீற்றிருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மூலவரை தரிசிப்பதுபோன்று எந்த நேரத்திலும் இக்கோயில் உற்சவரை தங்க காக வாகனத்திலிருந்தவாறு தரிசிக்க முடியாது. நேற்றிரவு தங்கக் காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குச்சனூர், திருக்கொள்ளிக்காடு
இதே போல சனிபகவான் பரிகார தலங்களான குச்சனூர், திருக்கொள்ளிக்காடு, வடதிருநள்ளாறு ஆகிய தலங்களில் பக்தர்கள் பரிகார பூஜைகளில் பங்கேற்றனார். சென்னையில் சிவ ஆலயங்களில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.