சனிப்பெயர்ச்சி: சனி வக்ர பார்வை சரியா இல்லையே என்று வருத்தமா இருக்கா- பரிகாரம் இருக்கு
சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு இல்லை என்றாலும் சனி வக்ர கதியில் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு பாதகங்கள் ஏற்படலாம். மேஷம் முதல் மீனம் வரை 142 நாட்களில் என்ன பலன், பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
Recommended Video
சென்னை: சனி பெயர்ச்சி ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு இடம்மாறுதல் அடைவது. சனி வக்ரம் அடைதல் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.
சனிதான் ஆயுள் காரகன். சனிதான் தொழில் காரகன். சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி. ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்குகிறார். சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும்.
சனிக்கு மகரம்,கும்பம் சொந்த வீடு. துலாம் உச்ச வீடு. மேஷம் நீச வீடு. ஒருவரது ராசியில் சனி திசை 19 ஆண்டுகள். சிலருக்கு பெரும் நன்மையையும்,சிலருக்கு பெரும் கெடுதலையும் செய்வார் சனி பகவான். சனி வக்கிரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். ஆயுளைக்குறைப்பார். ஆதிபத்ய சிறப்பில்லாத சனி சுப பலனைத் தருவர். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார். உடல் முழுவதும் விதவிதமான பிரச்சனைகள் எற்படும்.
பின்னோக்கிச் செல்லும் சனி
தனுசு ராசியில் உள்ள சனிபகவான் இந்த ஆண்டு 30.04.2019 சித்திரை 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த மாதங்கள் அமையும். சனி வக்ரத்தினால் பாதிப்பு குறைய பறவைகள், விலங்குகள், ஆதரவற்ரோர், ஊனமுற்றோருக்கு உணவுகள் உதவிகள் செய்யலாம். சனிக்கிழமையன்று எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.
மேஷம்
சனிபகவான் இப்போது தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். இது ஒன்பதாவது இடம். பாக்கிய சனியால் எந்த தடையும் இன்றி செயல்கள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் சனிபகவான் வக்கிரகாலமாகும். இந்த கால கட்டத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இருக்காது. வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்காது. மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு கடன்கள் பெருகி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை அதிகரிக்கும். தேவையற்ற வகையில் நம்மை பற்றிய வீண் வந்தந்திகள் உலவும். அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். ஏப்ரல் மாதம் சனி வக்ரம் அடைவதால் தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது, புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்னை தீரும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
மிதுனம்
சனிபகவான் கண்டச்சனியாக கவலைக்கு ஆளாக்கி வருகிறார். ஏப்ரல் முதல் பின்னோக்கி நகர்வதால் சில நன்மைகள் ஏற்படும்.
இந்த கால கட்டத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தாயாரின் உடல் நிலை சீராகும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். சிலர் வேலை விசயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும்.
கடகம்
தற்போது ஆறாம் வீட்டில் உள்ள சனியால் அபரிமிதான யோகங்களை பெற்று வரும் நீங்கள் கவலையற்று இருக்கிறீர்கள். சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறுப்பினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமாகவும் அமையும். திருப்தியான மனநிலை இருந்து வரும். அதே சமயம் பணவரவு சீராக இருந்து வரும். தந்தையாரால் எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிட்டும். நட்பு வட்டாரங்களில். விரிசல்கள் ஏற்படும் விலகும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். இந்த காலத்தில் உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் ஏற்படும், இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு தாய் மாமன்களின் அன்பும் அவர்களால் சகாயமும் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உறவினர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். கடன் பிரச்னையால் தொல்லை ஏற்படும். நோய்கள் தீரும். வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை ஏற்படும். பாதிப்புகள் தீர சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
கன்னி
சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக இருக்கிறார். ஏப்ரல் மாதத்திற்கு மேல் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். பாதிப்புகள் குறைய ஆஞ்சனேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
துலாம்
சனி தற்போது மூன்றாவது வீட்டில் இருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் வக்ர சஞ்சாரத்தினால் சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும். விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்களும் அசதியும்தான் அதிகரிக்கும். மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் வீடு நிலம் வாங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.
விருச்சிகம்
சனி தற்போது இரண்டாவது வீட்டில் இருக்கிறார். பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வேலையாட்கள் வந்து சேர்வார். மனை, வீடு, வண்டி வாகனங்களை முதலில் கொடுத்து விட்டுப் பின் புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பார்கள். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி வர பாதிப்புகள் தீரும்.
தனுசு
சனி உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் மாதம் பின்னோக்கி செல்வதால் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்குகள் சாதகமாக இராது. சுய தொழில், சிறு தொழில்கள் வருமானம் தரும். ஒரு சிலருக்கு கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கொடுக்கும். வெளிநாடு செய்திகள் சாதகமாக இருந்து வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் உற்சாகமும் இருந்து வரும். அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலை நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். வீடு வாடகைக்கு அல்லது ஒத்திக்கு விட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாகவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பெருமாள் கோவில்களுக்கு சென்று வணங்கி வரலாம்.
மகரம்
சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏப்ரல் மாதம் பின்னோக்கிச் செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்துள்ள பணம் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக அமையும். உறவினர்களால் நன்மைகள் அமையும்.
அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். ஏப்ரலில் பின்னோக்கி செல்வதால்
பார்க்கும் வேலையில் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ அலல்து வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். விருந்து கேளிக்கைகளில் கவனம் தேவை. உல்லாசப் பயணங்களில் அதிக கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடந்தேறும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.
மீனம்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில் ஸ்தானமாகும். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும். நல்ல கல்வி உயர்கல்வி அமைய வாய்ப்புகள் அமையும். மேலும் தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையில் அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அதே சமயம் உடல் ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருந்து வரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். நேரத்திற்கு உணவு அருந்துதல் நலம் கூடியவரை விரதத்தைத் தவிர்ப்பது நல்லது.