சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23 : ரிஷபத்திற்கு பாக்ய சனியால் பதவிகள் தேடி வரும்
ரிஷபம் ராசிக்காரர்கள் கண்டச்சனி, அஷ்டமத்து சனி என கஷ்டப்பட்டீர்கள் இனி பாக்ய சனியாக சனிபகவான் அமர்ந்து அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார்.
மதுரை: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் பாக்ய சனி அமர்வதால் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியில் இருந்து விடுதலை கிடைக்கிறது.
ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. சனிபகவான் மகரத்தில் அமரும் காலம் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. உங்களின் பிரச்சினைகள் தீரப்போகின்றன. உடல் நலப்பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படப்போகிறது.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது, பத்தாம் அதிபதி. தர்ம கர்மாதிபதி சனி பகவான், இந்த முறை மகரம் ராசியில் உங்களின் தர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த 5 ஆண்டுகாலமாக அதாவது கண்டச்சனி, அஷ்டமத்து சனியால் அவதிப்பட்ட நீங்கள், நிம்மதி பெறுமூச்சு விடும் நேரம் வந்து விட்டது.
பண வருமானம் அதிகரிக்கும்
நமக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கியிருப்பீர்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் பொன்னான நேரம் கூடி வரப்போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு பணவருமானம் அதிகமாக இருந்தாலும் உங்களின் நிதியை நிர்வாகம் செய்வதில் கவனமாக இருப்பது அவசியம். 2021ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டும். குருவும் சனியோடு இணைந்து 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அபரிமிதமான அதிர்ஷ்டம் தேடி வரும்.
ஆலய தரிசனம்
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வதோடு நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். மொத்தம் 30 மாதங்கள் சனி பகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும்.
மதிப்பு மரியாதை உயரும்
சமூகத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும். இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும்.
ஆடை ஆபரணம் சேரும்
பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.
திருமணம் கைகூடும்
சனி பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் போது குருவும் ஒன்பதாம் வீட்டில் சனியோடு இணைந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு மகிழ்ச்சி
ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். நண்பர்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும்.
பரிகாரம் என்ன
இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. பிரச்சினைகள் தீரும் இனி வரும் காலமெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த காலம்தான். குடும்பத்துடன் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வாருங்கள் இனி நன்மைகள் அதிகம் நடைபெறும்.