சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு நகர்கிறார் சனிபகவான்
சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. அதாவது ஜனவரி 24ஆம் தேதி திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஏற்படுகி
சென்னை: நவகிரகங்களில் சனிபகவானை பார்த்து பலருக்கும் பயம்தான். காரணம் சனியின் பார்வைக்கு பயப்படாதவர்கள் யாருமில்லை. சனிபகவான் ஏழரை சனியாகவும், அர்த்தாஷ்டம சனியாகவும், அஷ்டம சனியாகவும், கண்டச்சனியாகவும் சிலருக்கு கஷ்டத்தை கொடுப்பார். இப்போது சனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. அதாவது ஜனவரி 24ஆம் தேதி திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஏற்படுகிறது. அதே நேரம் வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. எப்படியோ சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்வது உண்மைதான். ஆனால் அது ஜனவரியிலா அல்லது டிசம்பரிலா என்பதில்தான் பெரிய குழப்பம் உள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தை தொடர்கிறவர்களுக்கு இந்த குழப்பம் இல்லை ஜனவரி 24ஆம் தேதிதான் சனிப்பெயர்ச்சி. அதே நேரம் வாக்கிய பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பவர்களுக்கு டிசம்பர் 27ஆம் தேதிதான் சனிப்பெயர்ச்சியாகும். திருநாள்ளாறு சனிபகவான் பரிகார தலத்தில் சனிப்பெயர்ச்சி டிசம்பரில்தான் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம் பெரும்பாலான ஜோதிடர்கள் திருக்கணித முறைப்படி ஜாதகம் கணிப்பவர்கள் என்பதால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருந்தே சனிப்பெயர்ச்சி பலன்களை கூற ஆரம்பித்து விட்டனர். ஏழரை சனியின் பிடியிலும் அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியின் பிடியில் சிக்கித்தவித்தவர்களும் இந்த பலன்களைக் கேட்டு சற்றே ஆறுதல் பட்டனர். காரணம் நமக்கு இனி விடிவுகாலம் வந்து விட்டது என்றுதான் சந்தோஷப்பட்டனர். எது எப்படி என்றாலும் சனிப்பெயர்ச்சி நிகழப்போவது நிஜம்தான். திருக்கணித பஞ்சாங்கப்படி இன்னும் சில நாட்களிலும் வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதியும் சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
தனுசு மகரம்
சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சென்றாலும் பின்னர் வக்ரமாக தனுசு ராசிக்கு திரும்பி மீண்டும் டிசம்பர் மாதம் மகரம் ராசிக்கு செல்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்குமே சாதக பாதகங்கள் நிறைந்திருக்கும். ஏற்கனவே விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிகிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டம சனி ஆரம்பிக்கிறது. அதே நேரம் கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி தொடங்குகிறது.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் தொழில் மற்றும் லாப ஸ்தான அதிபதி. கர்ம ஸ்தான அதிபதி தனது வீடான பத்தாவது வீட்டில் கர்ம சனியாக அமர்கிறார். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சனிபகவானின் பார்வையும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பதால் சந்தோஷங்கள் நிறைந்த சனிப்பெயர்ச்சியாகவே உள்ளது. புதிய வேலைகளை மே மாதத்திற்கு முன்பாக ஒத்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதே நேரம் சில தோல் நோய்கள் அலர்ஜி தொடர்பான நோய்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்கள். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் சந்தோஷங்கள் நிறைந்த வருடமாகவே இருக்கும். சனிக்கிழமை மாலை நேரத்தில் சனிபகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கி நல்லதே நடக்கும்
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார் சனிபகவான். இதுநாள் வரை அஷ்டம சனியால் சஞ்சலப்பட்டு வந்த உங்களுக்கு இனி பாக்ய சனி பலவித சந்தோஷங்களை தருவார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒன்பதாம் இடம் அப்பாவின் உடல் நலத்தை பதம் பார்க்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். புதிய வேலைகள் கிடைக்கும் புரமோசன் கிடைக்கும். நோய்கள் நீங்கும். இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட வேண்டாம். நல்ல வேலை கிடைத்தபிறகு இருக்கிற வேலையை விடுவதைப்பற்றி யோசியுங்கள். சனிக்கிழமைகளில் சனி மந்திரத்தை கூறி வழிபடுங்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக இருக்கிறார். இனி அஷ்டம சனியாக எட்டாம் வீட்டில் அமரப்போகிறார். சனிபகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார் திடீர் திருப்பங்களும் எதிர்பாராத யோகங்களும் உங்களுக்கு வரும். சனிபகவான் எட்டாவது வீட்டில் சஞ்சரித்தாலும் குருவின் பார்வை உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்யும். வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் உங்களுக்கு தேடி வரப்போகிறது. முக்கிய முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் தவிர்த்து விடுங்கள். வேலையை விடுவதைப்பற்றி நீங்க யோசிக்கவே வேண்டாம். சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுங்கள் பாதிப்புகள் நீங்கி நல்லதே நடக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இதுநாள் வரை ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இனி ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இது கண்டச்சனி காலமாகும். சனிபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். வேலைப்பளு அதிகமாகும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் உங்க குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் வேலை செய்யும் இடத்திலும் கவனமாக இருங்க. சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சந்தோஷம் தரக்கூடியதாக உள்ளது. உங்க ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டு அதிபதி சனிபகவான். சனி கோச்சாரப்படி 3,6,11ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் போது நிறைய நன்மைகளை செய்வார். கடந்த சில ஆண்டுகாலமாகவே சனிபகவானால் சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். இனி சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நிறைய சந்தோஷங்களைத் தரப்போகிறார். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க வேலையில் திடீர் புரமோசன் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். வீடு வாங்கும் யோகம் வரும். இது விபரீத ராஜயோக காலம் என்பதால் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். உங்க ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால் நிறைய சந்தோஷங்கள் கிடைக்கும். சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்தை வேகவைத்து சனிபகவானுக்கு படைத்து தானம் செய்யுங்கள். சனிபகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு ஏழுமுறை வலம் வர நன்மைகள் நடைபெறும்.
கன்னி
சனிபகவான் உங்க ராசிக்கு ஐந்து மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. இப்போது பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமரப்போகிறார். அர்த்தாஷ்டம சனியால் உங்க உடல்நலமும் உங்க தாயாரின் உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தது. இனி சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, லாப ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களின் பிள்ளைகளின் மீது அதிக அக்கறை காட்டுங்கள். பிசினசில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து சனிபகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர். நான்காம் வீட்டில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கவனமாக இருங்கள். சனியின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சோம்பேறித்தனத்தை விடுங்கள். பிரச்சினைகளை சமாளிக்க விட்டுக்கொடுத்து போங்க ஈகோ வேண்டாம். கவனமாக எந்த வேலையையும் செய்யுங்கள் நல்லதே நடக்கும். உங்களின் நடுவிரலில் தங்க மோதிரம் அணியுங்கள் நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
சனிபகவான் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனி முடிவுக்கு வருகிறது. கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு கவலைப்பட்டு வந்த நீங்கள் இனி சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள் தீரப்போகிறது. கடன் பிரச்சினைகள் தீரும் உங்களை விட்டு விலகிய சொந்த பந்தங்கள் உங்களை நாடி வரப்போகிறார்கள். நமக்கு நல்ல காலமே வராதா? என்று ஏங்கித்தவித்த உங்களுக்கு இனி நன்மைகள் நடக்கப் போகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சனிபகவானை சனிக்கிழமை சனி ஹோரையில் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
தனுசு
சனிபகவான் உங்க ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதி. சனிபகவான் ஜென்ம சனியாக சஞ்சரித்து வந்தார் இனி பாத சனியாக இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படப்போகிறது. ஏழரை சனி காலத்தில் பாக்கி இன்னும் இரண்டரை ஆண்டு காலம் மிச்சம் இருக்கிறது. கவலைப்பட வேண்டாம் உங்க தலைமேல் அமர்ந்திருந்த சனி பகவான் இனி உங்க பாதத்திற்கு வந்து விட்டதால் பதற்றப்பட வேண்டாம் சந்தோஷமாக குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் நேரங்கெட்ட நேரத்தில் எதையும் சாப்பிட வேண்டாம் உங்கள் மனநிலையில் சின்னச் சின்ன குழப்பங்கள் வரலாம் அந்த குழப்பங்கள் தீர சனிக்கிழமைகளிலும் ஞாயிறு கிழமைகளிலும் ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது பாகமான ஜென்ம சனி காலம் ஆரம்பமாகிறது. சனிபகவான் உங்க ராசி நாதன், இரண்டாம் வீட்டிற்கு அதிபதி. ராசி நாதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஜென்ம சனியால் சங்கடம் வருமோ என்று பயப்பட வேண்டாம். சனிபகவான் நீதிமான் என்பதால் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். பொதுவாகவே சனிபகவான் தனது சொந்த வீட்டுக்காரர்களை எதுவும் செய்ய மாட்டார் எனவே தைரியமாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். சிலருக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வெளிநாடு செல்லும் யோகம் வரும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். கடன் கிடைக்கிறதே என்று இஷ்டத்திற்கு கடன் வாங்க வேண்டாம். பிசினஸ்ல அகலக்கால் வைக்காதீங்க. சொந்த வீடு, வண்டி வாகனம் வாங்குவீர்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும். சனிக்கிழமைகளில் கறுப்பு ஆடைகளை அணியுங்கள் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். சனிபகவான் உங்க ராசிக்கும் 12ஆம் வீட்டிற்கும் அதிபதி. விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். இது நாள் வரை லாப சனியாக இருந்தாலும் சில சங்கடங்களை கொடுத்து வந்தார். இனி ஏழரை சனியாக இருந்தாலும் உங்க ராசிக்கு அதிபதி என்பதால் நன்மையே செய்வார் சனிபகவான். வேலை செய்யும் இடத்தில் நீங்க அதிக வேலைப்பளு இருந்தாலும் சோம்பேறித்தனம் எதுவும் இல்லாமல் வேலையை செய்யுங்கள். உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். குருவின் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் தொழிலில் லாபம் வரும். அபரிமிதமான பணவரவினால் வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். சனி காயத்ரி மந்திரத்தை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.
Recommended Video
மீனம்
சனிபகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானம் மற்றும் விரைய ஸ்தான அதிபதி. சனிபகவான் உங்க வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரத்தினால் உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் வரும். புதிய நல்ல வாய்ப்புகள் உங்கள் வீட்டின் கதவை தட்டப்போகிறது வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க உடல் ஆரோக்கியம், பெற்றோர்களின் உடல் ஆரோக்கியமும் அற்புதமாக உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும். ஏழைகள் முதியவர்களுக்கு தானம் கொடுங்கள். சனிபகவான் சந்தோஷப்படுவார்.