சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : மேஷம் ராசிக்கு தொழில் சனியால் என்ன பலன்கள் பரிகாரங்கள்
சனிப்பெயர்ச்சி மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த முறை தொழில் ஜீவன சனியாக அமைந்துள்ளது. பத்தாம் இடத்தில் கரும இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
மதுரை: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். மேஷம் ராசிக்கு கால புருஷ தத்துவப்படி சனிபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார். சனிபகவானுக்கு ஆட்சி வீடு மகரம் என்பதால் மேஷம் ராசிக்கு இது யோகமான சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு வரை மேஷம் ராசிக்காரர்களுக்கு சசமகா யோகம் கிடைக்கப் போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவான் பத்தாம் வீட்டில் அமர்கிறார். இது தொழில் ஸ்தானம்.
பத்தாம் இடம் கர்மஸ்தானம் என்பதால் இதை கர்மசனி என்றும் சொல்லலாம். இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு, தொழில், திருமணம், வேலைவாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.
ஜீவன சனி
சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு. ஜீவன காரகன் சனி ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது சனிபகவான் பார்வை விழுவதால் அதற்கேற்ப இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.
வருமானம் அதிகரிக்கும்
தொழில் ஸ்தான அதிபதி அவரது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு பாதகமில்லை. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான். காரணம் சனிப்பெயர்ச்சியோடு குருவின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. குருபகவான் பத்தாம் வீட்டில் சனியுடன் சஞ்சரிப்பதால் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பாக்கெட்டில் பணம் அதிகரிக்கும்.
உற்சாகமான வேலை
வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் அதிகரிக்கும் அதை சுகமான சுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் தெளிவாக முடிவு செய்து முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடந்து முடியும்.
புகழ் அந்தஸ்து கூடும்
இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும்.
வீடு வாங்கலாம்
நான்காம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் நல்ல வசதியான வீடு, வாகனம் வாங்கும் சூழ்நிலை அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மையேற்படும். உறவினர்களுக்கு கர்மகாரியம் செய்ய வேண்டியிருக்கும் வேலை பார்க்கும் இடத்தில் சுமை கூடினாலும் அதை எளிதில் கையாளுவீர்கள். தந்தையால் விரைய செலவு ஏற்படும்.
மாணவர்களுக்கு வெற்றி
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பு அமையும்.
தடைகள் நீங்கும்
திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.
பாதிப்புகள் நீக்கும் பரிகாரம்
அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும்.
இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படும் கவனம் தேவை. பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகரிக்க காக்கைக்கு எள் சாதம் வைக்கவும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் தங்கத்தினால் ஆன சொர்ண சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.