ஏழரை சனி ஆரம்பிக்குதா? விரைய சனி காலத்தில் வீடு சொத்து வாங்குங்க நிரந்தரமாக தங்கும்
ஏழரை சனி அதுவும் விரைய சனி ஆரம்பிக்குதா? சொத்துக்கள், வீடு, நகைகளாக வாங்குங்கள் உங்களுக்கு தேவையற்ற விரைய செலவுகள் ஏற்படுவது தடுக்கப்படும். அதே நேரத்தில் அந்த சொத்துக்கள் நிரந்தரமாக உங்களுக்கு தங்கிவி
Recommended Video
சென்னை: சனிக் கிழமைக்கு வட மொழியில் ஸ்திரவாரம் என்று பெயர். ஸ்திரம் என்றால் அசையாதது, நிரந்தரம், பலமாக ஊன்றி நிற்பது என்று பொருள். அதனால்தான் சனி பகவான் வலுப்பெற்று அவர் தசையில் வாங்கும் வீடு, நிலம் ஆகிய சொத்துக்கள் நிரந்தரமாகத் தங்கி வம்சத்தினருக்கும் செல்லும். மேலும் சனி தசையில் வாங்கிய சொத்துக்களை அவ்வளவு எளிதில் சுலபமாக விற்க முடியாது.
ஏழரை சனி காலத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும், திருமணம் கைகூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். காரணம் ஏழரை சனி நடக்கும் போது தசாபுத்தியும் சரியாக இருந்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். குருபலனும் கூடி வந்தால் கெட்டி மேளம் கொட்டி விட வேண்டியதுதான். தற்போது கும்ப ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் குருவின் பார்வை களத்திர ஸ்தான ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. புத்திர ஸ்தானமாக ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. எனவே இந்த குரு பார்வையால் கும்ப ராசிக்கு ஏழரை சனி ஆரம்பித்தாலும் திருமண யோகம் கை கூடி வருகிறது.
ஜாதகங்களில் சனி பகவானுடன் சூரிய பகவான் இணைந்தோ, பார்க்கப்பட்டிருந்தாலோ, சூரிய பகவானுடன் சர்பக் கிரகங்களான ராகு அல்லது கேது இணைந்திருந்தாலோ பித்ரு தோஷம் ஆகும். பித்ரு தோஷம் போக ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று உத்திராயண புண்ணிய காலத்தில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவானையும், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட பித்ரு தோஷம் மறையும். இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது எரிப்பதற்கோ உதவுவது மிகவும் உயர்ந்த சனிப்பிரீதியாகும். குறிப்பாக அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யவோ, எரிக்கவோ உதவி செய்பவர்கள் சனி பகவானின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.
விழுப்பு ஆடை
விழுப்பு ஆடை என்பது முதல் நாள் படுக்கையில் அணிந்திருந்தது. அதை மறுநாள் துவைக்கப் போட்டுவிட வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விழுப்பு ஆடைகளை சனிபகவானின் பிடியில் இருப்பவர்கள் அதாவது ஏழரை நாட்டுச் சனி, அர்தாஷ்டம சனி, மற்றும் அஷ்டம சனி ஆகியவை நடப்பவர்கள் மறுநாளும் அணிந்துகொண்டால் சனி தோஷம் அதிகமாகும். அதோடு சனியின் பிடியில் இல்லாதவர்களும் விழுப்பு ஆடைகளை அணியக்கூடாது. விழுப்பு இருக்குமிடத்தில் வில்வப் பழக்காரி வரமாட்டாள் என்பது மூதோர் வாக்கு. வில்வப் பழக்காரி என்பது திருமகளைக் குறிக்கும்.
வில்வ இலை அர்ச்சனை
சனி தோஷத்தால் வாழ்க்கையில் செல்வத்தை இழந்து கஷ்டப்படுபவர்கள் ஏழரை சனி அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு செல்வத்தை இழந்தவர்கள தங்களின் பொருளாதார வளம் சிறக்க 12 வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளையில் மஹாலட்சுமியை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வெள்ளிக் கிழமைகளில் மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய செல்வ வளம் பெருகும்.
நல்லெண்ணெய் குளியல்
சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை தலை, கை, கால் மூட்டுகள், தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி, சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும். இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும். ஏழரை சனி காலத்தில் கவனக் குறைவால் மறைமுகமாக ஏற்படும் அபாயங்களையும் சமாளிக்க முடியும்.
சனி பிரதோஷ தரிசனம்
சிவபெருமான் விஷம் அருந்திய நாள் சனிக்கிழமை. அவர் ஆனந்தத் தாண்டவமாடிய திதி திரயோதசி திதி. இந்த இரண்டும் சேர்ந்து வருவதுதான் சனிமஹா பிரதோஷம். ஒரு சனிப்பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று தரிசனம் செய்தால் ஐந்து வருடங்களுக்கு சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். அடுத்தடுத்து இரண்டு சனிப் பிரதோஷங்களை அனுசரிப்பது அர்த்தநாரி பிரதோஷம் என்று புகழப்படுகிறது. இதற்குப் பலன் பிரிந்த தம்பதிகள் கூடுவார்கள். மேலும் திருமணத் தடையும் விலகும். தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும்.
நள புராணம்
வீட்டில் குழந்தைகளை சனியனே, முண்டமே என்று திட்டாமல் இருப்பது அவசியம். இது சனீஸ்வரரை கேவலப்படுத்துவதாகும். மேலும் சனிக் கிழமைகளில் எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும், முடவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவி வர வேண்டும். நள புராணத்தைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம். சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும் சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.
தோஷம் விலகும்
சிவபெருமானிடம் சனி பகவானுக்கு பக்தி அதிகம். சனி பகவான், பஞ்சாட்சரமான, ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என்கிற மந்திரத்தை ஜெபம் செய்கின்றவர் என மந்திர சாத்திரங்கள் பேசுகின்றன. வைணவர்கள் சுதர்சன அஷ்டகம், ஆஞ்சநேய கவசம் படிக்க வேண்டும் சுதர்சன அஷ்டகத்தைப் படித்தால் சனி தோஷம் விலகும்.