சனிப்பெயர்ச்சி 2020: கும்பம், மகரம், தனுசு ராசிக்கு ஏழரை சனி - பாதிப்புக்கு பரிகாரங்கள்
சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்னும் சில நாட்களில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
மதுரை: வாக்கியப்பஞ்சாங்கப்படி இந்த மாதம் 27ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரை சனி யாரை அதிகம் பாதிக்கும், யாருக்கு சங்கடம் தரும் ஏழரை சனி முடிந்து யாருக்கு சந்தோஷம் வரப்போகிறது என்று பார்க்கலாம். பரிகாரங்களையும் பார்க்கலாம்.
ஏழரை ஆண்டு காலமாக சனியின் பிடியில் சிக்கியிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. என்னதான் ஏழரை சனி காலம் என்றாலும் சனிபகவான் அவருடைய சொந்த வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் அதிகம் நன்மைகளே நடைபெறும்.
சனிபகவான் நீதிமான் அவர் தவறு செய்பவர்களையும் அநியாயம் செய்பவர்களயும்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் தடுமாற வேண்டாம். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினை கிடைக்கும். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் என்று பார்க்கலாம்.
சனிப்பெயர்ச்சி 2020: சனிபகவானால் ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
தனுசு
தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. தனுசுக்கு தனாதிபதி சனி பாத சனியாக தொடர்கிறார். கஷ்டங்கள் விலகும் சங்கடம் தீரும். தனாதிபதி தன ஸ்தானத்தில் ஆட்சி அமர்கிறார். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம். ஏழரை சனியாக இருந்தாலும் இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை. வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தொழில் வருமானம் அதிகரிக்கும். சனி வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்பதால் பொறுமை தேவை. சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீர வாலாஜாபேட்டையில் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி காலமாகும். உங்க ராசி நாதன் சனி உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். பாதகங்களை விட சாதகங்களே அதிகம்.வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும். பிசினஸ் செய்ய நினைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தரும். நிறைய உதவி கிடைக்கும் வளர்ச்சிக்கு உதவும் நன்மைகள் கிடைக்கும். 30 வயதை கடந்தவர்களுக்கு முன்னேற்றகரமான காலம் தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். பயணங்களில் எச்சரிக்கை தேவை. உழைப்பால் உயர்ந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். குச்சனூருக்கு குடும்பத்துடன் சென்று சனிபகவானை வழிபட்டு வரலாம் பாதிப்புகள் குறையும் நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
கும்பம் ராசிக்கு ஏழரை சனிகாலம் தொடங்குகிறது. உங்க ராசிநாதன் சனி 12ஆம் வீட்டில் விரைய சனியாக சஞ்சரிக்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும். சில விசயங்களில் கவனம் தேவை. பண விரையம் வரும், சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்களை சேர்ப்பீர்கள். திருமணம் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். மாணவர்களுக்கு கவனம் தேவை. படிப்பில் கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொறுமை தேவை. நிதானம் அவசியம். சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் இந்த சனி பெயர்ச்சி வளர்ச்சியை தந்து உங்களைக் காப்பாற்றுவார். சாதக பாதகம் நிறைந்த சனிப்பெயர்ச்சி இது. முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பயணங்கள் பண்ணும் போது கவனம் தேவை. சனி பகவான் மருத்துவ செலவுகளை தருவார். 30 வயதிற்குள் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் தேவை. தான தர்மங்கள் செய்வது நல்லது. குடும்பத்துடன் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பொங்கு சனீஸ்வரரை தரிசனம் செய்து வர சகல செல்வங்களும் கிடைக்கும்.
பரிகாரங்கள் என்னென்ன
ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, சனி திசை, சனி புக்தி போன்றவையின் தாக்கம் குறையவும் சனிக்கிரகத்தினால் ஏற்படும் குடும்ப கஷ்ட நஷ்டங்கள் குறையவும், உடல் நலம் பெறவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் சனிக்கிழமைகளில் உச்சந்தலையில் சில துளிகள் நல்லெண்ணெய் வைத்து குளிக்கவும். சனிக்கிழமை சனி ஹோரையில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். ஏழைகள், வயதானவர்கள், கடைநிலை ஊழியர்களுக்கு தானம் செய்யலாம். தானம் செய்பவர்களை சனிபகவானுக்கு நிறைய பிடிக்கும் எனவே இயலாதவர்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.