சனிப்பெயர்ச்சி 2020: சனிபகவானால் ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
சனிபெயர்ச்சி 2020 வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ உள்ளது. இந்த கிரகப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.
சென்னை: சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் சனி பெயர்ச்சி திருக்கணிதப்படி நிகழ்ந்திருந்தாலும் திருநள்ளாறு, குச்சனூர் சனிபகவான் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்க முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து நிம்மதி பிறக்கிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. மேஷம்,ரிஷபம், சிம்மம்,மீனம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.
2020 ஆம் ஆண்டின் ஜனவரியில் இருந்தே சனிபகவான் திருக்கணிதப்படி மகரம் ராசிகளில் சஞ்சரித்து வருகிறார் என்றாலும் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களுக்கு டிசம்பர் 27ஆம் தேதிதான் சனி பெயர்ச்சி நிகழ்கிறது. மகரம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களான மீனம், கடகம், துலாம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது.
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இந்த சனியின் சஞ்சாரம் பார்வையால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்.
மேஷம்
சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. இனி விடிவு காலம் ஆரம்பமாகிறது. மேஷம் ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு வரை குருவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் அனைத்திலும் ஏற்றம் தரும் காலமாக அமையப்போகிறது.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரகளுக்கு ஆட்டி வைத்த அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். குரு பகவானும் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். வெளி நாடு பயணம் செல்லும் யோகம் வரும். சகோதரர்களிடம் பேசும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். 2023ஆம் ஆண்டுவரைக்கும் சனி, குருவின் சாதகமான சஞ்சாரத்தினால் ராஜயோகம் கிடைக்கப் போகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். இனி யோகமான கால கட்டமாக அமைந்துள்ளது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். சனி தனது சொந்த வீட்டுக்கு வந்து அமர்வதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். வெற்றிகள் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம் வியாபாரம் முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இது செழிப்பான காலட்டமாகும் ராஜயோக காலமாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடிவுக்கு வருகிறது. இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் தேடி வரப்போகிறது. பொருளாதார சிக்கல்கள் நீங்கும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். ராசியில் கேது இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ஏழரை சனி முடிந்து விட்டால் நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் நிறைய லாபங்கள் கிடைக்கும். குரு பகவானும் பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும்.