For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி பெயர்ச்சி 2017-2020: 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள்

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்க கணிதப் படி மார்கழி 04ம் தேதி 19-12-2017 செவ்வாய்க் கிழமை காலை சுமார் 09-30 மணியளவில் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சனி பெயர்ச்சி 2017-2020: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்- வீடியோ

    -ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

    சென்னை: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள், பரிகாரங்களை அறிந்து கொள்வோம்.

    சனி பகவான் வாக்கிய பஞ்சாங்க கணிதப் படி இன்று காலை சுமார் 09-30 மணியளவில் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் நிலை, தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கும் சனி பெயர்ச்சி செய்யும் நன்மை தீமைகள் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

    மேஷம் ராசி

    மேஷம் ராசி

    (அஸ்வினி 1-2-3-4 பாதங்கள், பரணி 1-2-3-4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம்)

    வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரான மேஷம் ராசி அன்பர்களே!

    யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும் முதன்மையானவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் தைரியமும் வீரமும், விவேகமும் உடையவர்கள்.

    இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுகாரும் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார்.
    தற்சமயம் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அதாவது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூற வேண்டும்.

    ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டு பண்ணுவார்.
    சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல் உங்கள் நட்பை விரும்பி போற்றுவர்.

    உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும். அவை நல்லவிதமாக அமையும்.
    அடிக்கடி பயணங்கள் ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள் ஏற்படும். வீடு, இடம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
    தாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும். மேலும் ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். மேலும் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில், சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.
    விருந்து, உல்லாசம், விளையாட்டு, கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருத்தல் வேண்டும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
    பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு செய்யக் கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மை உண்டாகும்.
    வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்களால் நன்மை ஏற்படும்.
    சுய தொழில் செய்ய வாய்ப்பும், தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பங்களும் வந்து சேரும். முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். அடிக்கடி புனித ஸ்தல யாத்திரையும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பும். வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடைபெறும் வாய்ப்பும் உண்டாகும்.

    தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாக உயர்வதற்க்கு வாய்ப்பும் உண்டாகும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். அவர்களால் நன்மையும் எற்படும்.

    ரிஷப ராசி

    ரிஷப ராசி

    (கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், ரோகிணி 1-2-3-4, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்)
    வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் இரண்டாவது ராசியாக நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்கிரன் வீட்டிற்கு உரியவரான ரிஷபராசி அன்பர்களே!
    எவரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள். மற்ற எல்லா கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்கிரன் பகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார். அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கிறார்.

    அப்படிப்பட்ட சுக்கிர பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன் தான் என்றே கூற முடியும்.

    இதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.
    உங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசு ராசிக்கு சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.
    தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.
    வெளியூருக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் நிலை உண்டாகும். அதனால் அலைச்சல்களும் உடல் வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி கிட்டும்.
    தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எல்லா விஷயங்களிலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
    குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும். குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு கண்காணித்து வருதல் வேண்டும்.
    வழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டாக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
    அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின் எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் வேலைக்காரர்களால் பிரச்சனைகள் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.
    சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.
    வேலையில் போட்டி பொறாமைகள் தடைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.
    அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதையும் நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. ஆபரேஷன் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.

    மிதுனம் ராசி

    மிதுனம் ராசி

    (மிருக சீரிஷம் 3-4ம் பாதங்கள், திருவாதிரை 1-2-3-4 பாதங்கள், புனர்பூசம், 1,2,3ம் பாதங்கள்)
    வான மண்டலத்தில் மூன்றாவது ராசியாக வலம் வரும் மிதுனம் ராசியில் பிறந்த உங்களுக்கு
    உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். புதன் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள். பலருடைய பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாரான பலன்களையே கொடுக்கும்.

    இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி பகவான் கோசாரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக அமர்ந்து பலன்களை கொடுப்பார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் கொஞ்சமாக இருந்தது. இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் சிறப்பு என்று சொன்னால் அது மிகையாகாது.
    சனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் தான் என்றாலும் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும்.
    சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.
    குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும்.
    தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

    இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.
    வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மை். உண்டாகும்.
    சரியான நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற உணவுப் பண்டங்களை தவிர்ப்பது உங்கள் உடல் நலத்திற்க்கு நல்லது. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகளில் வெற்றி கிட்ட வாய்ப்புகள் அதிகம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.
    ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் உண்டாகும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.

    கடகம் ராசி

    கடகம் ராசி

    (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 1-2-3-4 பாதங்கள், ஆயில்யம் 1-2-3-4 பாதங்கள்)
    வான மண்டலத்தில் நான்காவது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதன் சந்திரன் ஆவார். நவக்கிரகங்களில் சந்திரன் ஒருவர் மட்டுமே வளர்ந்து தேய்ந்து வலம் வருபவராக இருப்பார். ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயல்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். அதற்காக முயன்று வெற்றி பெறுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருக்கும்.
    கடகம் ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இனி உங்கள் ராசிக்கு 6ம் இடமான ஜெயம், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். இரண்டரை ஆண்டு காலமாக போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் சுவையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது. இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.
    6ஆம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உருவாக்குவார். வேலையில் முன்னேற்றமும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவார். உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் உங்களைச் செயல்பட வைப்பார். இதுவரை வெளியே கடன் கொடுத்திருந்த பணம் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும், ஊதிய உயர்வும் உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும்.
    உங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும்.
    உடன் பிறப்புகளுக்கு சுப மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தாயாரால் உதவிகள் உண்டாகும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு வண்டி வாகனம், வீடு, இடம், மனை போன்றவைகள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.
    குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உங்களது உழைப்பு பிறருக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி உறவினர் வீட்டு சுப விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும்.
    வேலையாட்களால் நன்மை உண்டாகும். தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தேவைக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாழ்க்கையில் புது புதுப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் பயணிக்கும் பொழுது அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.
    புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருக்கும். முன்னோர்கள் சம்பாத்தித்த சொத்து கிடைக்கும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். அரசாங்கத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிக கவனம் தேவை. நண்பர்களால் நன்மை உண்டாகும்.

    சிம்மம் ராசி

    சிம்மம் ராசி


    (மகம் 1-2-3-4 பாதங்கள், பூரம் 1-2-3-4 பாதங்கள், உத்திரம் - 1ம் பாதம்)
    வான மண்டலத்தில் 5வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசி நாதன் ஆகிய சூரியபகவான் நவக்கிரகங்களில் முதலாவது கிரகமாகும். உலக உற்பத்திக்கும், உயிர்கள் வாழ்வதற்கும் சீராக தன்னுடய கதிர்களை வாரி வழங்கும் வல்லமை பெற்ற சூரியன் கிரகங்களில் நம்முடைய கண்களுக்கு தெரியும் முதல் கிரகமும் ஆகும், மற்றும் எல்ல கிரகங்களுக்கு தலைமையாக உள்ளவர் சூரிய பகவான் ஆவார்.
    நவக்கிரகங்களில் முதன்மையானது சூரியன் ஆகும். அதுபோல் அரசாளும் யோகமும், எதிலும் முதன்மையாகவும் விளங்க விருப்பமுடையவர்கள். நீங்கள் பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் புகழுக்காக இவ்வுலகில் எதையும் துணிந்து செயல்படுவீர்கள். நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள் இக் குணநலன்கள் உடைய உங்களுக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து சஞ்சாரம் செய்து அளிக்ககூடிய பலன்களை பார்க்க இருக்கிறோம்.
    உங்களது ராசிக்கு 5ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பாகும். சனிபகவான் பாபக்கிரகம் என்பதால் உங்களது ராசியின் 5ம் இடமான புத்தி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது புத்தியின் தன்மைகேற்ப செயல்படுவீர்கள், சிலசமயம் நல்ல அறிவும் ஆற்றலுடன் சிந்திக்கும் குணமுடைய நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.
    உடல் ஆரோக்யம் சீராகி மகிழ்ச்சியாக இருக்கும். பிணி மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
    வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் நட்புறவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சலுகை கிடைக்கும்.
    சனி தசை நடக்கும் சிலருக்கு குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழல் ஏற்படும். அதே சமயம் நன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு நன்மையாக அமையும்.
    உங்கள் பணம் பொருள் காணாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. விருந்து கேளிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். பூஜை, புனஸ்காரங்கள், கோவில், குளம், பக்தி பிரார்த்தனைகள் இவற்றில் அதிக ஈடுபாடு ஏற்படக் கூடும்.
    காதல் விஷயங்கள் உற்சாகமாக இருந்து வரும். காதல் கை கூடி திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். வழக்குகள் ஜெயிப்பது போல் தோன்றினாலும் எதிரி வெற்றி பெறும் வாய்ப்புண்டு. வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலேயே உங்கள் நிலை இருக்கும். பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது.
    ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. நண்பர்களால் தேவையற்ற வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு கடும் முயற்சிக்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டி நிறைந்த உலகத்தில் ஜெயிக்க முடியும்.

    கன்னி ராசி

    கன்னி ராசி


    (உத்திரம் 2, 3, 4, பாதங்கள், அஸ்தம் 1-2-3-4 பாதங்கள், சித்திரை 1, 2 பாதங்கள்)
    வான மண்டலத்தில் 6வது ராசியாக வலம் வரும் கன்னி ராசியின் அதிபதியான புதன் உங்கள் ராசிநாதன் ஆவார். கல்விக்கும் வித்தைக்கும் ஞானத்துக்கும் அறிவிக்கும் ஆற்றலுக்குமான புதன் பகவான் ராசியில் பிறந்த நீங்கள் எதையும் நின்று நிதானித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும் நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
    அறிவிக்கும் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் உரியவரான நீங்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள் மாற்றம் என்ற கருத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு இந்த சனிபகவான் இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ பயமோ கொள்ள வேண்டாம்.
    உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும். மேலும் 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. 5ம் இடம் என்பது பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவது அல்லது வெளியேற்றபடுவது என்பதைக் குறிக்கும். எனவே அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.
    சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்படும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார். எனவே உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் தோன்றி வேலையை விட வேண்டியது வரும்.
    புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. சகோதர சகோதரர்களில் அன்பும் ஆதரவும் இருந்தாலும் அவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாயாரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. இனம் தெரியாத நோய்களால் அவதிப்பட நேரிடும்.
    சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக கவனம் தேவை. அதில் மகிழ்ச்சியற்ற செயல்கள் நடந்தேறும். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் இனிதே நடந்தேறும். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். வழக்குகள் சாதகமாக இராது. தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.
    கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். கடுமையான எதிர்ப்பிற்க்குப் பின் காதல் நிறைவேறும் காதலால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும்.
    தொழில் முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. தொழிலில் கூட்டாளிகளுக்கு ஆக உழைக்க வேண்டி வரும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் இருந்து வரும். கடை, தொழில் நிலம் தோட்டம், பண்னை, பயிர் செய்யும் நிலம் வாங்கவும் கடை, அலுவலக கட்டிடம் கட்டவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உருவாகும். எதையும் தள்ளிப் போடுவது ஒத்திப் போடுவது கூடாது. அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும்.

    துலாம் ராசி

    துலாம் ராசி

    (சித்திரை 3, 4, ம் பாதங்கள், சுவாதி 1-2-3-4 , விசாகம் 1-2-3 பாதங்கள்)
    வான மண்டலத்தில் 7வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான சுக்ரன் - நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகவும் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பத்தையும் வழங்கவல்லவராக இருக்கிறார். கலை என்ற வார்த்தைக்கு சுக்கிரன் என்று அர்த்தம் உள்ள சுக்கிரனுடைய ராசியில் பிறந்த நீங்கள் நல்ல வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் நீங்கள்.
    இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் சொல்ல முடியாத வகையில் துயரங்கள், வேதனைகள், வீண் விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை வீட்டில் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும் காலமிது. எடுக்கும் முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள் வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.
    புது உறவுகளால் நன்மை ஏற்பட கூடிய நேரம். அதிகப்படியான உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் இடமாற்றம் ஊர் மாற்றம் மற்றும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி அதன் மூலம் வருமானம் வரக்கூடிய காலம். உங்களைப் பற்றிய வதந்திகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை.
    கல்வியில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கி விற்க நேரிடும்.
    காதல் விஷயங்கள் வெற்றி பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இனி சுபகாரியங்கள் நடக்கும் காலம். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, விருந்து, உல்லாசம் நல்ல லாபகரமாகவும் அமையும்.
    வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்., வேலையில் உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும், உங்களது ராசிக்கு இன் 4ம் மற்றும் 5ம் இடத்திற்கு சனிபகவான் அதிபதியாக இருப்பதால் தாங்கள் பார்க்கும் வேலையில் மிக கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். வரும் பணத்தை முறையாக சேமித்தல் நலம். எதையும் நன்கு ஆராய்ந்து பின் கடன் கொடுக்கவோ, வாங்கவோ ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டும்.
    கடன் வாங்குவதை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத பயம், குழப்பம் தோன்றும் காலம் எனவே சிந்தித்து செயலாற்றவும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற மனச் சஞ்சலம் ஏற்படும். தாய் மாமன்கள் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். காலம் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இராது. ஆன்மீக பயணங்கள் தொடரும் நண்பர்கள் பிரிந்து இணையும் காலம். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும். நற்பலன்கள் அதிகமாக நடக்கும்.

    விருச்சிகம் ராசி

    விருச்சிகம் ராசி

    (விசாகம் 4ம் பாதம், அனுஷம் 1-2-3-4 பாதங்கள் கேட்டை 1-2-3-4 பாதங்கள்)
    வான மண்டலத்தில் 8வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான செவ்வாய் பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுவார். இவரை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உடல்பலமும், உள்ள பலமும் கொண்டவராக திகழ்வீர்கள். தனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்பதில் நம்பிக்கையுடனும் மற்றவர்களிடம் இருந்து தனித்தும், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் திறம் கொண்டவர்களாகவும், மற்றவர்களை வசியப்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர்களாகத் திகழ்வீர்கள்.
    இத்தகைய வல்லமை உடைய உங்களது ராசியில் இதுவரை ஜென்மச் சனியாக சனிபகவான் சஞ்சரித்து வந்தார். இது வரை தேவையற்ற செலவினங்களையும் உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறும். சனி பகவான் உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
    எந்த வேலையும் முடிக்காமல் தள்ளி போட்ட நிலை மாறும் இதுவரை உங்கள் ஜென்மராசியாக இருந்தவர் மாறி 2ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், ஓரளவு காப்பாற்றப்படும். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும்.
    உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பசனி - குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும். சனிபகவான் 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
    உங்களை பற்றிய வீண் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும். உங்களை பற்றிய விமர்சனங்களையும் தூக்கி எறிந்து எண்ணிய செயலில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். இதுவரை வராமல் நிலுவையில் இருந்து வந்த பணம், பொருள், நகை, பத்திரங்கள் தாமாகவே வந்து சேரும். வீடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அடிக்கடி அமையும். காலிமனை, கட்டிய வீடு, வண்டி வாகனங்களால் மற்றும் நிறைய வீட்டு உபயோக பொருட்கள் தாமகவே வீடு வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.
    பேச்சில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்கள் பேசுவதோ எழுதவோ கூடாது. மற்றவர்கள் விஷயங்களில் அநாவசியமாக தலையிடுதல் கூடாது. கூடியவரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து வருதல் வேண்டும். பணவரவு பொருள் வரவு தாரளமாக இருந்து வரும். தேவையற்ற செலவினங்களும் வரும். கூடிய வரை சுபச் செலவுகள் செய்துவர நன்மை ஏற்படும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. கொடுத்த பணம் வருவதில் சற்று தடை ஏற்பட்டாலும் கண்டிப்பாக தவணை முறையில் வந்து சேரும்.
    காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமே ஆகும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரும் புது வரவால் நன்மையும் தீமையும் கலந்தே காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி இருவரும் தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. வேலையில் முன்னேற்றம் அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும்.

    தனுசு ராசி

    தனுசு ராசி

    (மூலம் 1-2-3-4 பாதங்கள், பூராடம் 1-2-3-4 பாதங்கள், உத்திராடம் 4ம் பாதம்)
    வான மண்டலத்தில் 9வது ராசியாக வலம் வரும் தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் - நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். இவருடைய ராசியில் ஜனனமான நீங்கள் தலைமை பதவி ஏற்கும் ஆற்றலும் எதிலும் உங்களை முன்னிலைபடுத்துவதிலும் முதன்மையானவர்கள் இயற்கையாகவே இறை சிந்தனை மற்றும் தெய்வ அனுகூலத்தையும் பெற்றவர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உடையவர்கள். செலவு செய்வதில் கணக்கு பார்க்காதவர்கள். உழைப்புக்கு உறைவிடமாகிய நீங்கள் எப்பொழுதும் ஓடி ஓடி உழைப்பவர்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்புவீர்கள்.
    இத்தகைய உயர் குணமுடைய உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் பயங்களாகவே நடந்து வரும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் வைத்தியச் செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார்.
    எடுக்கும் முயற்சிகளில் போராட்டங்கள் வலுவாக இருந்தாலும் இறுதியில் அவை நாம் எதிர்பாராத வெற்றியில் முடியும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக அமையும். இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் சற்று குறைந்து காணப்படும். எதையும் தைரியமாகவும் விவேகமாகவும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பாராத வெற்றி அடைவீர்கள் என்பது நிச்சயம். பேச்சில் அதிக எச்சரிக்கை தேவை. பணவரவு தாராளமாக இருந்து வரும். அதற்கேற்ப செலவினங்களும் அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகரித்தல் வேண்டும்.
    உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தடை ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சகோதர சகோதரிகளால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. எதிர்பார்த்த செய்திகள் வருவதில் சற்று தடை ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் குறைந்து காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். ஆரம்பத்தில் சொத்துகள் வாங்கினாலும் அதைப் பின்னால் கொடுக்க வேண்டியது வரும். ஒரு சிலருக்கு பழைய சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்க வாய்ப்பு அமையும்.
    உயர்கல்வியில் தடை ஏற்படும். எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாகச் சென்று வருதல் வேண்டும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்து எதையும் நன்கு சிந்தித்து செயல்பட வெற்றி நிச்சயம் உண்டாகும். விருந்து, கேளிக்கை இவைகளில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும்.
    சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பம் உருவாகும். குடும்பத்தில் புது வரவால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு கடுமையான போராட்டத்திற்கு பின் வேலை வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விருப்பமான வேலையை தேர்வு செய்தல் வேண்டும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள் வருவதில் சற்று கால தாமதமாகும்.
    உடல் உழைப்பை அதிகப்படுத்தவும், வழக்குகள் சாதகமாக இருந்து வரும். வேலையில் ஊதிய உயர்வில் உத்யோக உயர்வில் வலுவான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் பெற சிரமப்பட்டாலும் வேலை என்ற ஒன்று தொடர்ந்து நடந்து வரும். அதன் மூலம் வருமானமும் வந்து சேரும். புதிய தொழில்கள் அல்லது கூட்டுது தொழில் செய்ய சந்தர்ப்பம் அமையும். சிறு தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும்.
    வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாக இருந்து வரும். புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். அவர்களால் நன்மை ஏற்படும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிட்டும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மை அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். தேவையற்ற செலவினங்களைக் குறைத்தல் வேண்டும்.

    மகரம் ராசி

    மகரம் ராசி

    உத்திராடம் 2, 3, 4,ம் பாதங்கள், திருவோணம் 1-2-3-4 பாதங்கள், அவிட்டம் 1, 2,ம் பாதங்கள்)
    வான மண்டலத்தில் 10வது ராசியாக சஞ்சரிக்கும் சனிபவகானே உங்களது ராசியின் அதிபதி ஆவார். மனதில் உறுதியும், உழைப்பில் நேர்மையும், செயலில் சற்று வேகமும், எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள். நீங்கள் எண்ணியதை எண்ணியபடி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும், தெய்வ சிந்தனையும் உடையவர்கள்.
    எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சமும், ஆர்ப்பரிக்காமல் எதையும் அமைதியாகச் செய்து முடிக்கும் விவேகமும் உங்கள் தனிச் சிறப்பாகவும் மற்றவர்களின் சொத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்படாத ஆன்மா நீங்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் நிதானமும், நடு நிலையுடனும் செயல்படும் உங்கள் ராசிக்கு இதுவரை 11ம் இடமான ஸ்தாபனத்தில் சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.
    12ம் இடம் என்பது விரயஸ்தானம் மட்டுமல்ல அது முதலீட்டு ஸ்தானமும் கூட, உங்கள் மகர ராசியின் அதிபதி சனி ஆவார். அவரே உங்கள் ராசியின் 2ம் இடமான குடுமபஸ்தானத்திற்கும் அதிபதியாகி அவர் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் அடிக்கடி பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு அமையும்,இடமாற்றம் அமையும். குடியிருக்கும் வீடு, தொழில் ஸ்தாபனம், பணிபுரியும் இடம், அலுவலகம் இவற்றில் மாற்றங்கள் வர வாய்ப்பு அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்புகள் வந்து அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும், சோர்வும் அதிகரித்துக் காணப்படும்.
    எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் அல்லது பொருள் கையில் தங்காது. ஒன்று விரயமாகும் அல்லது செலவாகும் அல்லது முதலீடாகும். எனவே தேவையற்ற விரயங்களைத் தவிர்த்தல் நலமாகும். மறைமுகமான எதிரிகளால் நமக்கு தேவையற்ற பிரச்சனைகளும், இடைஞ்சல்களும் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும் சற்று பற்றாக் குறையாகவே இருந்து வரும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும்.
    எடுக்கும் காரியங்களில் சற்று தடை ஏற்பட்டாலும் அதனால் நன்மைகள் அதிகமாகும். புதிய முயற்சிகள் சற்று சுமாராகவே இருந்து வரும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மையும் அவர்களுக்கு வேலை திருமனம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் புது வரவுக்கான போராட்டம் இருந்தாலும் புது வரவால் மகிழ்ச்சி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அல்லது வீடு மராமத்து வண்டி பழுது பார்ப்பு இவற்றில் தேவையற்ற செலவினங்கள் வந்து சேரும்.
    வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுதல் அவசியம் காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். புது நண்பர்கள் வட்டாரம் உருவாகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விடவேண்டியது வரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் நிறைய தடைகளும், சிக்கல்களும் வந்து சேரும். உங்கலை பற்றிய வீண் வதந்திகள் உலவிய வண்னம் இருக்கும். அதிலும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற விஷயங்களை பற்றி பேசுவதோ கூடாது. எதிலும் நிதானம் தேவை. தொழில் ரீதியாக தேவையற்ற போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியது வரும்.
    உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்களால் இதுவரை இருந்து வந்த நட்பும் பாசமும் போராட்டமாக மாறிவரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எப்பொழுதும் எச்சரிக்கை தேவை. கால்நடைகள், காலி நிலங்கள், மனைகள் வாங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை. பாஸ்போர்ட் விசா வருவதில் இருந்த தடைகள் விலகி அவைகள் நல்லவிதமாக வந்து சேரும்.
    சுய தொழில்களில் ஏற்றம் இறக்கம் இருந்து வரும். லாபம்ம் வருவது போல் இருந்தாலும் அந்த லாபம் கைக்கு வருவதில் தடையேற்படும். வரவுகள் ஆறு போல் இருந்தாலும் செலவுகள் கடல் போல் ஆகிக் கொண்டே இருக்கும். இருப்பினும் தெய்வ அனு கூலத்தால் அவற்றை எளிதில் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில்கள் செய்ய புது தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வர். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் தடையும் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் நிறைய தடைகளும் இருந்து வரும். சந்தேகம் அவநம்பிக்கை தடுமாற்றம் இவற்றை தூக்கி எறிந்து வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுதல் வேண்டும்.

    கும்பம் ராசி

    கும்பம் ராசி


    (அவிட்டம், 3, 4ம் பாதங்கள் சதயம் 1-2-3-4 பாதங்கள், பூரட்டாதி, 1, 2, 3,ம் பாதங்கள்)
    ராசி மண்டலத்தில் 11வது ராசியாகத் திகழ்வது கும்பராசி ஆகும். எதையும் சந்திக்கும் ஆற்றலும், நெஞ்சிலே உறுதியும் அனைவரையும் வசீகரிக்கும் ஆற்றலும் உடையவர்களாக திகழ்பவர் நீங்கள். தலைமைப் பணபும், எதையும் நன்கு சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். நல்லது, கெட்டது, எது என்று பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற என்ணமும் சதா சிந்தித்து கொண்டும் சிந்தித்தை செயல்படுத்தவும் அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறவும் என்ன வழிகள் என்பதை ஆராயும் திறமை உடையவர்கள்.
    தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாத உயர்ந்த பண்பாளர் நீங்கள். உண்மை பேசுவதையும் உள்ளதை பேசுவதையும் நல்லதே பேச வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் சற்று சுய நலவாதிகளாகவும் விளங்குவீர்கள். உங்கள் மனதுக்கு சரி எனப்பட்டதை செய்யும் எண்ணம் உடையவர்கள்.
    இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனிபகவான் உங்கள் ராசிநாதனுமாகி அவர் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பானது என்று தான் கூற வேண்டும். உங்களது கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி அதிகரிக்கும், பேச்சில் நடை, உடை பாவனைகளில் மாற்றமும் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். இதுவரை மனதில் இருந்து வந்த பயம், பீதி, மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். அதற்கான சரியான நபர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும். அக்கம் பக்கம் உங்களை பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய அறிமுகம் மற்றவர்களை சென்றடையும் காலமாகும்.
    இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் நகைகள் இவைகள் எல்லாம் கைக்கு வந்து சேரும். பேச்சால், எழுத்தால் செயலால் ஒரு சிலருக்கு எதிர்பாராத தன வரவு பொருள் வரவு கிட்டும். உடன் பிறந்த சகோதர சகோதரர்களால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். புதுப் புது உறவுகள் வந்து சேரும். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கூடும். அதே சமயம் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அல்லது அவர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.
    மனை வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். தாயாரால் எதிர்பாராத நன்மைகள் அமையும். அவர்கள் உடல் ஆரோக்யம் சீராக இருந்து வரும். இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற தூக்கம் குறைந்து இனி ஓரளவு நிம்மதியான தூக்கம் வந்து சேரும். உயர் கல்வி பயிலவும் அதனால் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு அமையும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும்.
    நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    குடும்பத்தில் புது வரவுகள் அதாவது மருமகன் மருமகள் பேரன் பேத்திகள் போன்றவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய படிப்பு அல்லது புதிய பயிற்சி இவற்றை மேற்கொள்ள வேண்டிய காலமிது. இதுவரை இருந்து வந்த தயக்கம் தடுமாற்றம் இவை விலகி உழைப்பு என்ற சொல்லே மேலோங்கி அதன் மூலம் பொருள் ஈட்ட உங்களுக்கு சரியான காலம் இதுவாகும்
    காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் வெற்றியாகி அது திருமணத்தில் நல்லபடியாக முடியும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்கள் வேதனைகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களும் ஆலய தரிசனங்களும் அடிக்கடி சென்று வருதல் வேண்டும்.
    வேலையாட்களால் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் ஓய்ந்து நல்ல வேலையாட்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். மேலும் தேவையற்ற போட்டி எதிர்ப்பு, பகை, வம்பு வழக்கு கடன் விவகாரம் போன்றவற்றை முறியடிக்க கூடிய ஆற்றல்களும் அதிகரிக்கும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விட வேண்டிய வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தந்தையாரின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். மேலும் நண்பர்களால் உறவினர்களால் எதிர்பாராத தனவரவு அதிகரிக்கும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை அமையும்.

    மீனம் ராசி

    மீனம் ராசி

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி 1-2-3-4 பாதங்கள், ரேவதி 1-2-3-4 பாதங்கள்)
    வான மண்டலத்தில் 12அது ராசியாக உள்ள உங்கள் மீனம் ராசிக்கு அதிபதி குருவாகும். தெய்வத்திற்கும் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டவர்கள் நீங்கள். எப்பொழுதும் எதையும் நிதானமாக யோசித்துச் செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பும் உடையவர்கள். எதிலும் ஈடுபாட்டுடன் முனைந்து செயல்படும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆவீர்கள்.
    இப்படிப்பட்ட குணம் உடைய உங்கள் மீனம் ராசிக்கு சனிபகவான் உங்கள் ராசிக்கு இதுவரை 9ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 10ம் இடமான தொழில் ஜீவ ஸ்தானத்திற்கு வந்து பலன் அளிக்க உள்ளார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 11, 12 மற்றும் வீட்டுற்கதிபதியாவார், அவர் உங்கள் ராசிக்கு இப்பொழுது 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். பொதுவாகவே சனி பகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செயவது சிறப்பு என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.
    உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும். அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும். எப்பவும் அவசரப்படாமல் எதிலும் சற்று நிதானித்துச் செயல்படுவீர்கள் என்றால் வெற்றி நிச்சயமாகும்.
    தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பொழுது தான் வீண் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.
    அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக இராது. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். உறவுகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மனவருத்தங்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும், பழைய பொருளை விற்றுப் புதிய பொருட்கள் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டியது வரும். அல்லது வீடு மராமத்து மற்றும் தேவையற்ற விரையங்கள் ஏற்பட்டு விலகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்குப் போவதில் முட்டுக்கட்டை ஏற்படும் பின் நிறைவேறும். நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும்.
    மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும்.
    போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நனமையேற்படும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் நன்மையேற்படும்.
    இதுவரை திருமணத்தில் இருந்த தடை நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். புதிய நட்புகளால் எதிர்பார்த்த நன்மைகளும் அமையும்.

    English summary
    Shanaiswara, or Shani, Saturn completing one cycle every 30 years.Sanee (Saturn), the Lord that brings us all good things transits from viruchaga Rasi (Scorpio) to Dhanushu Rasi (Sagittarius) on Tuesday 19th December, 2017.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X