ஆடித்தபசு: ஊசி முனையில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கோமதி அம்மனை பார்க்க சங்கரன்கோவில் வாங்க
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வரலாற்று பழமையான சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா ஆகஸ்ட் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 13ம் தேதி நாளை கோமதியம்மன் தவசு காட்சி திருவிழா நடை
சங்கரன்கோவில்: "அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில் மண்ணு" என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவே அன்னை பார்வதி இப்பூவுலகிற்கு வந்து ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவம் இருந்தார். இதை இன்றைக்கும் மக்கள் சங்கரன் கோவிலில் ஆடித்தவசு திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
உமை ஒரு பாகனாய் காட்சி தரும் சிவ பெருமான் சங்கரன் கோவிலில் புன்னை வனத்தில் பசுக்கூட்டங்களின் நடுவே அன்னை கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்ததை மெச்சி, நாராயணரை தனது இடது பாகத்தில் ஏற்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர். இந்த நிகழ்வு ஒரு ஆடி மாதத்தில் நிகழ்ந்தது. இன்றைக்கும் ஆடி மாதத்தில் சங்கரன்கோவிலில் தவசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில், தனது ஒருபாகத்தை உடன் பிறந்தவருக்கு விட்டுக்கொடுத்து பிறந்த வீட்டுப் பெருமையையும், புகுந்த வீட்டு தியாகத்தையும் நிலைநிறுத்தியவள் அன்னை பார்வதி.
ஆடித்தபசு விழா
'அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், சங்கரன் கோமதியம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி தந்த ஆடித்தபசு விழா நாளை நடைபெற உள்ளது. ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
தபசு தேரோட்டம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வரலாற்று பழமையான சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா ஆகஸ்ட் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஹரியும் சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை உணர்த்த கோமதியம்மன் ஒற்றை காலில் தவம் செய்வதே ஆடித்தவசு திருநாளாக கொண்டாடப்படுகிறது. விழாவில் தினமும் காலை, இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 9ம் நாளான ஞாயிறன்று தேரோட்டம் நடைபெற்றது.
கோமதியம்மன் தபசு காட்சி
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு நாளை நிகழ்கிறது. காலை தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மாலையில் சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு வீதியில் தபசுக்காக சிவபெருமான் எழுந்தருளும் நிகழ்வும் நடக்கிறது. அப்போது தன் வலது காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தவக்கோலத்தில் காட்சி அருள்கிறாள். இந்தக் காட்சியை பல்லாயிரம் பக்தர்கள் கண்டு வணங்குகிறார்கள்.
அம்மனுக்கு நேர்த்திக்கடன்
அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
குவியும் பக்தர்கள்
சங்கரநாராயணராக அம்மைக்கும் மக்களுக்கும் காட்சி அளித்த ஈசன் நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி அளிக்கும் 2ஆம் தபசு காட்சி நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே சங்கரன் கோவிலில் குவிந்துள்ளனர்.