சர்ப்பதோஷம் நீக்கும் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்
வீட்டில் பாம்பு, தேள், பூரான் அடிக்கடி தட்டுப்படுகிறதா? சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வேட்டிக்கொள்ளுங்கள் விஷ ஜந்துக்களின் தொல்லை நீங்கும்.
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வணங்கினால் வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
உக்கிரபாண்டிய மன்னர் 943 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை நிர்மாணித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. விரைவில் இந்த ஆலயம் 1000-வது ஆண்டை எட்டப்போகிறது.
சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் ஒன்றாகும் இந்த ஐம்பூத தலங்களில் முதல் தலம் இதுவே ஆகும். இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள். வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் இந்த சங்கரன் கோவில்.
சங்கரன் கோவில்
சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரத்தின் உச்சி தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும்.
சங்கரநாரயணர்
சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளது. கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர். சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.
கோமதியம்மன்
கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது.
கோமதியின் மகிமை
பெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும். கோமதி அம்மனின் மகிமையை முழுமையாக உணர்ந்தவர்கள் இது வரை யாருமே இல்லை.
பேசும் தெய்வம் கோமதி
சக்தி பீடங்கள் 108-ல் சங்கரன் கோவில் கோமதி அம்மனின் தலம் 8-வது பீடமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கோமதி அம்மனை "பேசும் தெய்வம்'' என்று சொல்கிறார்கள். சங்கரன்கோவில் தல வரலாற்றில் கோமதி அம்மனை "கூழை நாயகி''என்று குறிப்பிட்டுள்ளனர். கூழை என்றால் "வால் அறுந்த நாகம்'' என்று பொருள்.
ஒற்றைக்கால் தவம்
கோமதி அம்மன் முன்பு பதிக்கப்பட்டுள்ள சக்கரத்துக்கு "ஆக்ஞ சக்கரம்'' என்று பெயர். ஆடித்தபசு விழா அம்பாளுக்கு மட்டுமே உரிய விழா என்பதால், அன்று அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருவாள். ஆடி தபசின் கடைசி நாளில் அம்பிகை, தபசு மண்டபத்தில் கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.
விளைச்சல் அதிகரிக்கும்
ஆடி தபசு திருவிழாவின் போது தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை எல்லாம் தபசு காட்சி நடக்கும் இடத்தில், காட்சி தரும் சிவன், சக்தி மீது போடுவார்கள். விளைபொருள்களை அம்மை அய்யன் மீதும் மீதும் போட்டால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
துளசியும் வில்வமும்
சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள். புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது.
ராகு கேது தோஷம் நீங்கும்
சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
மனநலம் சரியாகும்
அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது நம்பிக்கை.
சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர்
5 தீர்த்தங்கள்
இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும்.
நாகசுனை
நாகசுனைக்கு மேலும் பல அற்புதங்கள் உண்டு. இந்த சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம். கோவிலுக்கு பின் பக்கம் பாம்பாட்டி சித்தர் தவசாலை உள்ளது. அவர் இங்கு தான் அடங்கினார் என்றும் சொல்கிறார்கள்.
ஒற்றுமை உண்டாகும்
பொதுவாக கோவில் கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு காட்சி தருவார். ஆனார் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். சங்கரன் கோவில் தலத்தில் வழிபட்டால் ஒற்றுமை குணம் உண்டாகும். நானே பெரியவன் என்ற மமதை எண்ணம் நீங்கும்.
எப்படி செல்வது
நடை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை. இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் உண்டு. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது.