நோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் - ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க
பானு சப்தமி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். நாளை அக்டோபர் 20ஆம் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள்.
சென்னை: நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒளியும். சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் பானு சப்தமி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. நாளை அக்டோபர் 20ஆம் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். பானு சப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை. நாளை விரதமிருந்து சூரியனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது.
ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
பெற்றோர்களை வழிபட்ட சனிபகவான்
சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார். சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி.
ராமர் செய்த சூரிய பூஜை
சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர்.
முன்னோர்கள் ஆசி
காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்துசேரும். நாளை அக்டோபர் 20ஆம் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும் இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்.
தொழுநோய் நீங்கும்
கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார்.
சூரிய வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களும் கழியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பானு சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர தொழுநோய் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலவ முனிவர் முக்காலமும் உணர்ந்தவர். தனக்கு தொழுநோய் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து நவக்கிரகங்களை நோக்கி தவமிருந்து நோய் வராமல் இருக்க வரம் பெற்றார். இதனை அறிந்த பிரம்மன் சினம் கொண்டு நவகிரகங்களை பூலோகத்தில் அவதரித்து தொழுநோய் பீடிக்க சாபம் கொடுத்தார். சபவிமோசனமாக காவிரி நதிக்கரையில் அர்க்கவனத்தில் கார்த்திகை முதல் ஞாயிறு முதல் பன்னிரண்டு ஞாயிறு தவம் செய்து திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் சிவபெருமானை வழிபட்டு உதயாதி ஏழு நாளிகைக்குள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து உண்டு சாபம் நீங்கினர்.
அரசு பதவி
அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் பானு சப்தமியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் அரசு தொடர்பான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது.
அரசு வேலை தரும் சூரிய வழிபாடு
பானு சப்தமி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். காலபுருஷ தத்துவப்படி பத்தாமிடம் இடம் தொழில் உத்யோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.
உடல் நலம் பெறும்
பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்.
சூரிய வழிபாடு
வெள்ளெருக்கு செடியில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து சூரியனை வழிபட்டால் எதிரிகளை எளிதில் வெல்ல முடியும். நாளை அதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டால் புகழ் கூடும். மங்களம் உண்டாகும். உடல் நலம் பெறும்.