சார்வரியில் அரசுக்கு புதையல், தொழிலதிபர்கள் ஏழைகளாவார்கள்... எதிர்கட்சிகளுக்கு ராஜயோகம்
சார்வரி ஆண்டில் எதிர்கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது ஆளும் கட்சி போராட்டமாகவே ஆட்சி நடத்த வேண்டியிருக்கும் என சார்வரி வருடத்திய பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: கொரோனா பீதியோடு ஊரடங்கு விடுமுறையோடு பிறந்திருக்கிறது சார்வரி தமிழ் புது வருடம். ஒருநாள் லீவோடு பிறக்கிற ஆங்கில புத்தாண்டு எங்கே, 15 நாள் லீவோடு பிறந்திருக்கிற தமிழ் புத்தாண்டு எங்கே என்று கொண்டாடக்கூட முடியவில்லை காரணம் கொரோனா. கோவிலுக்கு கூட போக முடியாமல் வீட்டிலேயே அமைதியாக கழிந்து விட்டது என்றாலும் இந்த புது வருடத்தில் என்னென்ன நடக்கும் என்று கிரகங்களின் அடிப்படையில் பஞ்சாங்கம் கணித்துள்ளது. எதிர்கட்சிகளுக்கு ராஜயோகம் இருக்கிறதாம் பல தொழிலதிபர்கள் ஏழைகளாவார்கள் என்றும் கணித்துள்ளது பஞ்சாங்கம்.
கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. எல்லா தொழில்துறையுமோ அடிவாங்கியுள்ளது. பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் படு பாதாளத்திற்கு போய் விட்டனர். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பசியோடு பல வயிறுகள் தூங்குகின்றன.
பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் முக்கியம் என்று நாட்டின் பிரதமர் மோடி சொன்னாலும் பொருளாதாரத்தை உயர்த்த என்ன செய்யலாம் என்று ஆள்பவர்கள் யோசித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சார்வரி வருடத்தில் நடக்கப்போவது பஞ்சாங்கம் கணித்துள்ளது. அப்படி என்னதான் நடக்கும் என்று சுவாரஸ்யமாக படிங்க.
புதையல் கிடைக்கும்
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஆடி மாதத்தில் செவ்வாய் பகவான் தனது சொந்த வீடான மேஷத்தில் ஆட்சி பெற்று வலிமையான நிலையில் இருப்பார். இந்த கால கட்டதில் பூமிக்கு அடியில் அரசுக்கு புதையல் கிடைக்கும் நடுக்கடலில் அரசுக்கு பொக்கிஷம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பணப்பற்றாக்குறை தீரும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு நன்மை
ராஜாவாக புதன் வருவதால் தமிழக மாணவர்கள் உயர்கல்விக்காக நடத்தப்படும் தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள். கல்வியில் இந்தியா உலக அரங்கில் முதலிடம் வகிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விண்வெளி ராக்கெட் மூலம் இந்தியா புதிய சாதனை படைக்கும்.
எதிர்கட்சிகள் பலம்
இந்த ஆண்டு ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் அதிகரிக்கும். எதிர்கட்சியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. இந்த ஆண்டு விபத்துகள் அதிகம் நடைபெறும். ஆனி மாதம் சூரிய கிரகணம் பிடிப்பதால் பயிர்கள் நாசமடையும். ஆடி மாதம் வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
நடிகர்கள் புதிய கட்சி
இந்த ஆண்டு பல பெரும் தொழிலதிபர்கள் ஏழைகள் ஆவார்கள். பல நடிகர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்குவார்கள். ஆளுங்கட்சியில் பல குழப்பங்கள் ஏற்படும். புதிய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பல புதிய நீர் தேக்கங்கள் கட்டி முடிக்கப்படும். வங்கக்கடலில் நில நடுக்கம் ஏற்படும் தமிழ்நாடு, கர்நாடகா, பம்பாய், பாதிக்கும் என சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் கணித்துள்ளது.