சார்வரி தமிழ் புத்தாண்டு நாளில் விளக்கேற்றி பஞ்சாங்கம் படிங்க ஆயுள் அதிகரிக்கும்
சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர். சித்திரை முதல் நாள் விசு புண்ணியகாலமாகும்.
சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு இன்று இரவு 8.23 மணிக்கு பிறக்கிறது. சார்வரி என்றால் வீறியெழல் என்று அர்த்தம். சித்திரை முதல்நாளை தமிழ் புத்தாண்டாகவும், விஷூ புண்ணியகாலமாகவும் கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளன்று பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, பஞ்சாங்கம் வைத்து கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நன்மைகள் நடைபெறும். இந்த நாளில் பஞ்சாங்கம் படிப்பதன் மூலம் நோய்கள் நீங்கும் ஆயுள் அதிகரிக்கும்.
மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு உரியது விஷூ புண்ணிய காலம் ஆகும். 12 தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. அந்த மாதங்களின் முதல் நாள் விஷூ புண்ணிய காலம் என்று குறிப்பிடப்பட்டு, தலை எழுத்தை மாற்றி எழுதக் கூடிய பிரம்மாவை வணங்கு வதற்குரிய நாட்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜோதிட ரீதியாக, அந்த காலகட்டம் சூரியனது சர ராசி சஞ்சார மாதங்களாகவும் அமைகிறது.
சித்திரை 1ம் தேதியான ஏப்ரல் 14ம் தேதி காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில் நாம் வீட்டில் பூஜைகளை செய்வது நல்லது. வீட்டு வாசலில் நன்றாக தெளித்து கோலம் போட்டு பூ அலங்காரம் செய்து அதன் நடுவே ஒரு விளக்கு ஏற்றி வைப்பது நல்லது. வீட்டில் தோரணமாக மாவிலை, வேப்ப இலை கட்டுதல் நல்லது. வீட்டில் பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கு பழங்கள், நைவேத்தியம் செய்து விளக்கேற்றுவது அவசியம்.
சூரியன் சந்திரன்
தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தார் என்று புராணம் கூறுகிறது. சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் ஜோதிடத்தில் யுகம் என்று குறிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியைப் பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.
மேஷ ராசியில் சூரியன்
சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். தமிழ் மாதங்கள் சூரியமான மாதங்கள் எனப்படுகின்றன. இந்த மாதங்கள் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசி சக்கரத்தில் மேஷ இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் முதல் மே மாதம் 14ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
புத்தாண்டு சர்க்கரை பொங்கல்
புத்தாண்டு அன்று காலையில் மருந்துநீரில் குளிக்க வேண்டும். மருந்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆரோக்கியம் அதிகரிக்கும். குளித்த பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும். காலையில் நம் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும். சர்க்கரை பொங்கல் செய்ய முடியாதவர்கள் பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.
புத்தாண்டில் பஞ்சாங்கம்
பூஜை அறையை அலங்கரித்து கனிகளை படைத்து விளக்கேற்றி இராமாயணம், மகாபாரதம், பஞ்சாங்கம் போன்ற புத்தகங்கள் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து படிப்பது நல்லது. பஞ்சாங்கம் வாசிப்பது புத்தாண்டின் முக்கிய அம்சமாகும். பஞ்சாங்கம் வாசிப்பதில் வல்லுநர்கள் புது வருடத்திற்கான பஞ்சாங்கத்தை வாசித்து பலன் கூறுவார்கள். 12 ராசிகளுக்கான பலன்களும், லாப நஷ்ட கணக்கும் படிப்பார்கள். புது வருடத்தின் நிகழ்வுகள் கணித்துச் சொல்லப்படும்.
வாழ்க்கையின் உணவு
மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும். வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் என்பதை சொல்லும் வகையில் இந்த உணவை சாப்பிடலாம். இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும். அசைவ உணவு சாப்பிடக்கூடாது.
பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம்
வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தைப் பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள். தினமும் படிக்க முடியாவிட்டாலும் வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
ஐந்து விசயங்களை கூறும் பஞ்சாங்கம்
பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஐந்து விஷயங்களைத் தெரிந்துகொண்டு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி ஒரு காலண்டரைப் பார்த்து அன்றைய தேதியைத் தெரிந்துகொண்டு பல காரியங்களை நாம் செய்கிறோமோ, அதுபோல் பழங்காலம் முதல் இருந்து கொண்டிருக்கிற ஒரு பழக்கம். திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என ஐந்து விதமான விஷயங்களையும் அறிந்து கொண்டு காரியங்களைச் செய்வது பழக்கமாயிருந்து வருகிறது.
ஆயுள் வளர்க்கும் பஞ்சாங்கம்
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன், இன்று என்ன திதி? என்று அறிவதால் செல்வம் பெருகும். கிழமையை அறிவதால் ஆயுள் வளரும். இன்று என்ன நட்சத்திரம் என்பதை அறிவதால் பாபங்களில் சிறிது குறையும். இன்று என்ன யோகம்? என்பதை அறிவதால் ரோகம் விலகும். கரணம் என்ன? என்று அறிவதால் காரியம் சித்தியாகும்.