சார்வரி புத்தாண்டில் புது வைரஸ் இந்தியாவை கடுமையாக பாதிக்கும் - எச்சரிக்கும் பஞ்சாங்கம்
சென்னை: விகாரி வருடத்தில் உயிரைக்குடிக்கும் புதிய வைரஸ் ஒன்று தாக்கி மக்களை அலற வைக்கும் என்று கடந்த ஆண்டே வெளியான விகாரி வருஷத்திய ஆற்காடு தமிழ் பஞ்சாங்கம் எச்சரித்தது அது போலவே சீனாவை பதம் பார்த்தது கொரோனா வைரஸ். பஞ்சாங்கம் கணித்துள்ளது போலவே சீனாவில் உருவாகி ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட கொரோனோ வைரஸ் பரவி இப்போது இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்தியாவில் புது வைரஸ் நோய்களால் மக்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது சார்வரி தமிழ் புத்தாண்டு தமிழ் பஞ்சாங்கம்.
விகாரி ஆண்டில் திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்ந்திருந்தாலும் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழவில்லை எனவே இந்த வைரஸ் பாதிப்பிற்கு குரு சனி கூட்டணி ஏற்பட்டு பிரம்மஹத்தி தோஷம்தான் காரணம் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. சென்னை பெரு வெள்ளம், கஜா புயல், ஒக்கி புயல் பற்றி பஞ்சாங்கம் முன்பே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியை வைத்து நோய்களையும், மழை வெள்ளத்தையும் அரசியல் நிகழ்வுகளையும் பஞ்சாங்கம் மூலம் ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.
ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கப் போகும் சார்வரி புத்தாண்டில் குரு பகவான் பெயர்ச்சியாகி மகரம் ராசியில் நீசமடையப்போகிறார். மகரம் ராசியில் அமரப்போகும் குருவினால் இந்த பூமிக்கே தோஷம் என்று கணித்துள்ளது பஞ்சாங்கம்.
சார்வரியில் யாருக்கு பாதிப்பு
சார்வரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13, இரவு 8.23 மணிக்கு திங்கட்கிழமை பிறக்கிறது. சார்வரி புத்தாண்டில் என்ன நடக்கும் என்று வெண்பாவாக சித்தர்கள் எழுதியுள்ளனர்.
"சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு"
பொருள்:
சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வெண்பா சொல்கிறது. மக்களே வெண்பாவை படித்து யாரும் பீதி அடைய வேண்டாம்.
உயிரை குடிக்கும் வைரஸ்
சீனாவில் எலி புத்தாண்டில் கொரோனா வைரஸ் பல கொடுமையான மரணங்களை ஏற்படுத்தி மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இப்போதுதான் சீனா மிகப் பெரிய வைரஸ் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு பற்றி விகாரி தமிழ் பஞ்சாங்கம் முன்பே கணித்துள்ளது. மனிதர்கள், கால்நடைகள், விலங்குகள் பல புதிய நோய்களால் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளது பஞ்சாங்கம்.
மரணத்தை தரும் வைரஸ்
2019-nCoV எனப்படும் கொரோனோ வைரஸ் விகாரி வருடத்திய பஞ்சாங்கத்தில் முன்பே எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படுகிறது. படிப்படியாக நுரையீரல் உள்பட சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் மரணம் நிகழ்கிறது. இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
விகாரி பஞ்சாங்கம் எச்சரிக்கை
விகாரி புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதி ஞாயிறுக்கிழமை பிறந்தது. கடகம் லக்னத்தில் சூரியன் ஓரையில் புத்தாண்டு பிறந்தது. சனி ஆறாம் வீட்டில் பலம் பெற்ற குரு உடன் இணைந்திருந்த போது பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு உலகத்தில் ஒரு புதிய வைரஸ் நோய் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்திருந்தது. புதிய வைரஸ் நோய் ஒன்று மேற்கு திக்கில் இருந்து உற்பத்தி ஆகும் என்று எச்சரித்துள்ளது.
விஷப்பூச்சிகளால் தொல்லை
இதற்குக் காரணம் விகாரி வருடத்தில் தன சப்தமாதியான அசுர சுக்கிரன் இந்த ஆண்டு ரஸாதிபதியாக பலம் பெற்றும் பலத்துடன் இருப்பதும் உச்சமான ராஜ கிரகமான சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றும் லக்கினத்தில் சந்திரன் ஆட்சி பெற்று நிற்பதும், தேவகுரு பார்த்தும் சுக்கிரன் ராகு சாரம் பலம் பெற்றும் இருக்கிறார். இதன் பலனாக பல புதிய நோய்கள் உற்பத்தி ஆகும். விஷ பூச்சிகளால் மக்களுக்கு அதிக தொல்லைகள் ஏற்படும் என்றும் கணித்துள்ளது.
வெட்டுக்கிளிகள் தொல்லை
சார்வரி புத்தாண்டில் புதிய வைரஸ் நோய் தாக்கி மக்கள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கும் என்றும் கொசுக்களினால் பல புதிய நோய்கள் எற்படும் குழந்தைகளும் வயதானவர்களும் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்றும் சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஆடி 5ஆம் தேதி திங்கட்கிழமை வருவதால் இந்தியாவில் வெட்டுக்கிளிகளால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.