சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020 - கடகம் ராசிக்காரர்களுக்கு களைகட்டப்போகிறது
சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.
நிகழும் மங்கலகரமான சார்வரி புது வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை 13.04.2020 இரவு மணி 7.20க்கு கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது. ஆண்டு தொடங்கும் போது ஆறாம் வீட்டில் கேது சந்திரன், ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு அதிசாரமாக அமர்ந்து நீச பங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். ஒன்பதாம் வீட்டில் புதன் நீசம் பெற்றிருக்கிறார் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன் உச்சம் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார் 12ஆம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார்.
யோகங்கள் நிறைந்த சார்வரி
சார்வரி தமிழ் புத்தாண்டு கடகம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை கொடுக்கப்போகிறது. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. ஆண்டு தொடங்கும் போதே சந்தோஷமாக தொடங்குகிறது. கண்டச்சனி காலம் என்றாலும் உங்களுக்கு சஷமகா யோகம் கிடைக்கிறது. செவ்வாய் மூலம் ருச்சிக யோகம் கிடைக்கிறது. குரு மூலம் நீச பங்க ராஜயோகம் அமைக்கிறது.
அரச யோகம்
உங்களுக்கு அரசு கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன. இரண்டு கிரகங்கள் உச்சம், இரண்டு கிரகங்கள் ஆட்சி பெற்றிருக்கின்றன. அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நிறைய சம்பளத்துடன் புரமோசன் கிடைக்கும். காரணம் உங்க ராசிக்கு உத்யோக ஸ்தானதிபதியான செவ்வாய் உச்சம் பெற்று உங்க ராசியை பார்க்கிறார். அதிகார பதவிகள் தேடி வரும். உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை தேடி வரும். அரசு அதிகாரிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.
குரு பார்வை யோகம்
குரு பகவான் ஆண்டு பிறக்கும் போது அதிசாரத்தில் ஏழாம் வீட்டில் இருந்து நீச பங்க ராஜயோகம் பெற்று உங்களை பார்கிறார் அது சிறப்பு. அவர் வக்கிரமடைந்து பின்னர் தனுசுக்கு திரும்பினாலும் கார்த்திகை மாதம் மீண்டும் மகரத்திற்கு திரும்புவார். சார்வரி ஆண்டின் கடைசியில் பங்குனி மாதம் 23ஆம் தேதி மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு செல்கிறார். இந்த ஆண்டு குருபகவான் பார்வை உங்களுக்கு பார்வை கிடைக்கிறது. அதுவே யோகம்தான்.
கணவன் மனைவி பிரச்சினை
சனி பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது கண்டச்சனி காலம். ராகு கேது பெயர்ச்சி ஆவணி மாதம் நிகழ்கிறது. விரைய ஸ்தானத்தில் உள்ள ராகு லாப ஸ்தானத்திற்கு ஆறாம் வீட்டில் உள்ள கேது ஐந்தாம் வீட்டிற்கும் வருகிறார். ஏழாம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை இருப்பதால் எச்சரிக்கையாக இருங்க. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரலாம். குருவின் சஞ்சாரமும் ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்ப்பதால் சில பிரச்சினைகள் தீரும்.
வெளிநாட்டு யோகம்
பெண்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் கூடி வரும். வேலைகளில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். தங்கம் வாங்கும் யோகம் வருகிறது. பெண்கள் நகைகளை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றிகள் தேடி வரும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு யோகமான ஆண்டு. நன்றாக படிப்பீர்கள்.
தோஷம் நீங்க பரிகாரம்
குடும்ப வாழ்க்கையில குழப்பம் கும்மியடிக்குதேன்னு நினைக்காதீங்க பரிகாரம் பண்ணுங்க நீங்க பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். திருமண தடை நீங்கும் விரும்பிய வாழ்க்கை தேடி வரும். ஆண்டு தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. திருமணம் தடை நீங்குவதற்காக நீங்கள் இந்த ஆண்டு செவ்வாய்கிழமையில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வணங்குங்கள். பன்னீர் அபிஷேகம் பண்ணுங்க. வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள். தோஷங்கள் நீங்கும் திருமணம் நடைபெறும். வாழையடி வாழையாக வம்சம் தழைக்கும் என்பது உறுதி.