சார்வரியில் மக்களை தாக்கும் நோய்களும் பேராபத்துகளும் - எச்சரிக்கும் பஞ்சாங்கம்
விகாரி வருடத்தில் புதிய வைரஸ் நோய் உலகை தாக்கும் என்று கணித்தது போலவே உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
சென்னை: சார்வரி வருடம் பிறந்து விட்டது. இந்த புது வருடம் நன்றாக செழிப்புடன் இருக்க வேண்டும் என்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சாங்கம் வாசித்திருக்கின்றனர். இந்த வருடம் கொசுவினால் புது நோயும், புது வைரஸ் பரவி மக்களை தாக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. விகாரி வருடத்தில் புதிய வைரஸ் நோய் உலகை தாக்கும் என்று கணித்தது போலவே உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அதேபோல இந்த சார்வரி வருடத்திலும் வைரஸ், வெட்டுக்கிளி வடிவத்தில் பேராபத்து காத்திருப்பதாக பஞ்சாங்கம் எச்சரிக்கிறது.
பஞ்சாங்கம் என்பவை ஐந்து அங்கங்களை கொண்டது. நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் பற்றி கூறுகிறது. கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியை வைத்து நோய்களையும், மழை வெள்ளத்தையும் அரசியல் நிகழ்வுகளையும் பஞ்சாங்கம் மூலம் ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.
விகாரி தமிழ் வருட பஞ்சாங்கத்தில் கணித்தது பல பலித்தது. நோய்கள் தாக்கியது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது. அதே போல பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டான சார்வரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.
சார்வரியில் என்ன நடக்கும்
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு"
அதாவது சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வெண்பா சொல்கிறது.
கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பு
இந்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்பை மக்கள் தங்களின் வீடுகளில் சிறப்பாக கொண்டாடினர். கோவில்களுக்கு செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை இருந்தாலும் வழக்கம்போல கனிகளை படைத்து இறைவனை வழிபட்டனர். கோவில்களில் பக்தர்கள் யாருமின்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில்களில் பஞ்சாங்கம்
வாசிக்கப்பட்டு பலன் சொல்லப்பட்டது.
ஆதாயம் அதிகம்
இந்த ஆண்டு மேஷம் விருச்சிகம் ராசிகளுக்கு ஆதாயம் 5 விரையம் 5 ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 14 விரையம் 11, மிதுனம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 2 விரையம் 11 கடகம் ராசிக்கு ஆதாயம் 2 விரையம் 2, சிம்மம் ராசிக்கு ஆதாயம் 14 விரையம் 2, தனுசு, மீனம் ராசிக்கு ஆதாயம் 8 விரையம் 11 மகரம் கும்பம் ராசிக்கு ஆதாயம் 11, விரையம் 5. இந்த ஆண்டு மொத்த ஆதாயம் 56 மொத்த விரையம் 47 . இந்த ஆண்டு ஆதாயத்தை விட விரையம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு வருமானத்தை விட செலவு குறைவாக இருக்கும். சேமிப்பு அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு ஆரோக்கியத்தை விட அனரோக்கியம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாங்கம் கணிப்பு
தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது எட்டாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இதனால் புதிய வைரஸ் நோய் உற்பத்தியாகும், குழந்தைளுக்கு கொசுவினால் நோய் உண்டாகும் என சார்வரி வருட தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஓசோனில் விரிசல் அதிகமாகி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை 16ஆம் தேதி முதல் மார்கழி 2ஆம் தேதிக்குள் உலக அதிசயம் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு எச்சரிக்கை
பல புதிய வைரஸ் நோய் உற்பத்தி ஆகும். இந்த ஆண்டு புதிய நோய்கள் கொசுக்களால் பரவும் என கணிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் நோயினால் மக்களும் கால்நடைகளும் பாதிக்கப்படுவார்கள். வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களை நாசம் செய்யும். ஆனி மாத சூரிய கிரகணத்தால் எங்கும் சூறாவளி காற்று ஆலங்கட்டி மழை பெய்யும். நிலநடுக்கம் இயற்கை சீற்றம் ஏற்படும் என கணித்துள்ளது. இந்த ஆண்டு வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும்
புரோட்டின் குறைபாட்டினால் புதிய நோய்களும், தண்ணீரின் மூலம் புதுவித நோய்களும் பரவும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்க நீச பங்கம் பெற்ற குருவின் பார்வை பெறுவதால் மக்களின் ஆயுள் விருத்தியாகும். பல நோய்களுக்கு புதிய மருந்துகள் கிடைக்கும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
கடந்த காலங்களில் சென்னை பெருவெள்ளம், புயல்கள் பற்றி பஞ்சாங்கம் கணித்தது பலித்தது. விகாரி வருடத்தில் கொரோனா வைரஸ் பற்றி கணித்திருந்தது பலித்தது. இதே போல இந்த ஆண்டு உலகத்தில் நடக்கப் போகும் பல விசயங்களை கணித்துள்ளது சார்வரி வருடத்திய பஞ்சாங்கம்.