திருமணம் ஆகவில்லையா? ஆகியும் பிரம்மச்சாரியா? குடும்ப சனியை தரிசனம் செய்யுங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
நீண்ட நாட்களாக சனிபெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி கடந்த ஐப்பசி மாதம் 9ம் தேதி (26-10-2017) முதல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியை அடைந்து செலுத்துகிறார் அங்கிருந்தபடி தனது சஞ்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கபடி இன்று மார்கழி மாதம் 4ம் தேதி (19-12-2017) அன்று விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து சனி பரிகாரஸ்தலங்களில் சனி பரிகார பூஜைகளுக்கு பிரும்மாண்டமான முறையில் செய்து வருகின்றனர், எந்த பஞ்சாங்கமாக இருந்தால் என்னங்க! இந்த ஆண்டில் சனி மாறுவது நல்லதே நடக்கும் என நம்புவோம்.
ஜோதிடமே தெரியாதவர் கூட சனைஸ்வர பகவானை தெரியாமல் இருக்க மாட்டார்கள். யாருக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ சனியின் பார்வைக்கு பயப்படதவர் இருக்க முடியாது. அப்படிபட்ட சனைச்சரன் எனப்படும் சனி பகவான் யார்? அவர் நல்லவரா? கெட்டவரா? இந்த சனி பெயர்ச்சி நாளில் பார்ப்போமே.
நவ கிரஹங்களில் கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். 'சனை' என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு! விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர் இவர் . சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.
ஒரு ஜாதகருக்கு ஜாதக ரீதியான நன்மையான அல்லது தீமையான பலன்கள் தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர் சனிபகவான் தான். இவர் தலைமை நீதிபதி போன்றவர் ஆவார். ஒருவன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
இவர் அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுபவர். மனிதனுக்கு துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பார். மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கஷ்ட படும் நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்க்கும் இவர்தான் காரணம். இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுப்படாது. மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்க்குதான் அதனால் இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில் தான் உள்ளது.
எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நம்மை சாதிக்க செய்வது நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள்.
சனீஸ்வரன் என்ற சொல்லைக் கேட்டாலே, அடித்துப் பிடித்து ஓடுவர்; ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருநரையூர் கிராமத்தில் இருக்கும் சனீஸ்வரர், தன் குடும்பத்துடன், அனுக்கிரக சனியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு, ஆகமவிதிப்படி, கொடி மரம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து, 9 கி.மீ., தூரத்தில் உள்ளது, நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., தூரத்தில் உள்ளது, திருநரையூர்.
இவ்வூரில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில், மூலவருக்கு பலி பீடமோ, கொடி மரமோ கிடையாது. ஆனால், சனீஸ்வரருக்கு தனி சன்னிதியுடன், பலி பீடமும், கொடி மரமும் உண்டு. சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. சனீஸ்வரர் தன் இரு துணைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடன் அருள்பாலிக்கிறார். அத்துடன், இவர்களது மகன்களான குளிகன், மாந்தி ஆகியோரும் இங்கிருக்கின்றனர். இவர்களை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார், தசரதர்.
தசரத சக்கரவர்த்தி தனக்கு ஏற்பட்ட நோய் தீர, இத்தலத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை வழிபட்டு நிவாரணம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது. ராமபிரான், ராவணனை வதம் செய்து, அயோத்தி திரும்பும் போது, தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டுள்ளார்.
தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர், இங்கு வந்து மாந்திக்கு அர்ச்சனை செய்து, நிவாரணம் பெறுகின்றனர். நவக்கிரக மேடையின் நடுவே, சனீஸ்வரருடைய தந்தை சூரிய பகவான், தன் மனைவியர் உஷா தேவி மற்றும் பிரத்யுஷா காட்சி அளிக்கிறார்.
அத்துடன், இக்கோவிலின் சிறப்பை அறிந்த அனுமனும் சிவ வழிபாடு செய்துள்ளார். அதற்கு சான்றாக இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அனுமந்த லிங்கமும், மூலஸ்தானத்தில் ராமர் வழிபட்ட ராமநாத சுவாமியும் அருள்கின்றனர். இவர்களுடன் பர்வதவர்த்தினி அம்மன் காட்சி தருகிறாள்.
யாரெல்லாம் குடும்ப சனியை வணங்க வேண்டும்?
1. ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் சனீஸ்வரர் அடியெடுத்து வைக்கும் தனுர் ராசி மற்றும் லக்ன காரர்கள். அவர்களுக்கு மிதுனம் ஏழாம் வீடாக வந்து அதனை தனது சம சப்தம பார்வையால் பார்க்கிறார்
2. மிதுன ராசி லக்ன காரர்களுக்கு களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடான தனுசு ராசியில் அடியெடுத்து வைத்து தனது சம சப்தம பார்வையால் மிதுனத்தை பார்ப்பது.
3. சனீஸ்வர பகவான் தனது 3-7-10 பார்வையாலும் தனது திரிகோண பார்வையாளும் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளை பார்க்கிறார், "குரு இருக்கும் இடம் பாழ் - சனி பார்க்கும் இடம் பாழ்" என்பது சொல்வழக்கு. எனவே மேஷ, மிதுன, சிம்ம கன்னி, தனுசு, கும்ப ராசிகளை இரண்டாம் வீடுகளாக (குடும்ப ஸ்தானமாக) கொண்ட மீனம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள்/லக்ன காரர்கள் குடும்ப வாழ்க்கை சிறக்க குடும்ப சனியை வணங்குவது நல்லது.
4. கணவன்/மனைவியை குறிக்குமிடமாக களத்திர ஸ்தானம் எனப்படு ஏழாம் வீட்டை குறிப்பிடுவார்கள். எனவே மேஷ, மிதுன, சிம்ம, கன்னி, தனுசு, கும்ப ராசிகளை ஏழாம் வீடுகளாக கொண்ட துலாம், தனுசு, கும்பம், மீனம், மிதுனம், சிம்மம் ராசி/லக்ன காரர்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க குடும்ப சனியை வணங்குவது நல்லது.
5. நீங்கள் நினைப்பது புரிகிறது. 12 ராசிகளையும் கூறிவிட்டீர்கள். எதைதான் விடுவது என்பதுதானே? பன்னிரெண்டு ராசி/லக்ன காரர்களுக்கும் குடும்பம் இருக்கிறது தானே? எனவே 12 ராசி லக்ன காரர்களும் குடும்ப சனியை வணங்குவது தான் சிறப்பு. ஒரு ராசியில் நின்று 12 ராசிகளையும் கட்டுபடுத்துகிறார் அல்லவா? அதனால் தான் சனீஸ்வர பகவானை நீதிமான் என போற்றுகிறோம்.
இந்த சனி பெயர்ச்சி நன்னாளில் சனீஸ்வரபகவானை குடும்ப சமேதராக தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!