நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சனி பெயர்ச்சி தரும் நற்செய்தி!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நீண்ட நாட்களாக சனி பெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி இன்று ஐப்பசி மாதம் 9ம் தேதி (26-10-2017) விருச்சிக ராசியிலிருந்து தனது சஞ்சாரத்தை தனுசு ராசியை நோக்கி செலுத்துகிறார். அதனையொட்டி சனைச்சர பகவானுக்கு அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் சனி பரிகார ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு செய்வது நல்லது.
கடந்த சில நாட்களாக ஜோதிட ஆலோசனை பெற வருபவர்களில் பலரும் வேலைகளில் பல வித பிரச்சனைகளை சந்தித்து வருவது தெரிகிறது. மேலும் தகவல் துறை எனும் ஐடி துறை மற்றும் ஐடி சார்ந்த பிபிஓ துறையிலும் பலர் வேலையிழந்து நிற்கும் நிலையை காண முடிகிறது. அவர்களுக்கெல்லாம் கர்ம காரகன் என அழைக்கப்படும் சனைச்சர பகவான் கூறும் நற்செய்தி என்னவென்று பார்ப்போமா நேயர்களே!
இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை பணியை விட்டு நீக்கியுள்ள நிலையில்,
தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்கள் பல சமீப காலமாக பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து, கடந்த சில வாரங்களாக பணி நீக்கத்தைத் தொடங்கியுள்ளது செய்திகளில் வருவது அனைவரும் அறிந்ததே! மேலும் அவ்வப்போது தொழிலாளர்கள் போராட்டங்களும் தலை தூக்கிக்கொண்டிருக்கின்றன.
வேலையிழப்பிற்கான ஜோதிட ரீதியான காரணங்கள்:
சிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ! உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ! அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனைஸ்வர பகவான் ஆவார். எனவேதான் அவரை 'கர்மகாரகன்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நேற்று வரை காலபுருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிகத்தில் நிலைகொண்டிருந்த சனைஸ்வரபகவான் செவ்வாயின் வீட்டில் இருந்ததோடல்லாமல் செவ்வாயோடு அதிக காலம் சேர்க்கை பெற்று நின்ற காலத்தில் நீரினாலும் காற்றாலும் பலவித பிரளயங்களை சந்தித்ததை யாராலும் மறக்க முடியாது.
மேலும் ரூபாய் நோட்டு மாற்றம், சூராவளி சுழற்காற்று, வார்தா புயல், அரசியல் பிரமுகர் மரணம், ஆட்சியில் ஸ்திரதன்மையற்ற நிலை போன்றவையும் மக்களிடையே பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கர்மகாரகனான சனைஸ்வர பகவான் தனுர் ராசிக்கு அதிசார கதியில் சென்றது மற்ற பிரச்சனைகளுக்கு தற்காலிகமாக முடிவு கட்டிவிட்டாலும் காலப்புருஷனுக்கு பத்தாவது வீடான மகரத்திற்க்கு பனிரென்டில் சனைஸ்வர பகவான கோசாரபடி சென்றதாலும் கும்பத்தில் இருந்த கேதுவின் பதினோரம் பார்வையை பெற்றதாலும் வேலை மற்றும் தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது. அமெரிக்காவில் வேலைசெய்பவர்கள் திரும்பி அனுப்ப பட்டதும் இந்த சேர்க்கையின் விளைவு தான்.
மீண்டும் வக்கிர கதியில் விருச்சிக ராசிக்கு திரும்ப வந்து சரக்கு மற்றும் சேவை வரி ஒரு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையைல் சனைச்சரர் தனது பகைவனி வீட்டிலிருந்தும் கேதுவின் பாரிவையிலிருந்தும் விலகி சனியுடன் இணைந்து கால புருஷ ராசிக்கு தர்ம கர்மாதி யோகத்தை தரும் வீடான குருவின் வீட்டிற்க்கு சென்றிருப்பது சற்று ஆறுதல் தரும் விஷயமாகும்.
தர்ம கர்மாதிகளான குருவும் சனியும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் வேலைகளில் மாற்றம் ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கர்ம காரகனான சனைஸ்வர பகவானை குரு பார்வை அல்லது சேர்க்கையால் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் சம்பள உயர்வுடன் கூடிய வேலைமாற்றம் ஏற்படும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
அதேநேரம், சனைஸ்வர பகவான் தன காரகனான குருவை தனது பார்வை மற்றும் சேர்க்கையால் தொடர்பு கொள்ளும்போது, வேலையில் ஒரு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஜெனன குருவை கோசார சனி தொடும்போது அவர் அதுவரை செய்துவந்த வேலையிலிருந்து முற்றிலும் புதுமையான துறைக்கு மாற நேருகிறது.
எப்போது தீரும் வேலையிழப்பு பிரச்சனை?
தற்போதுள்ள கோசாரக கிரஹ நிலையில் ராகு பகவான் கடகத்திலும்
கேது பகவான் மகரத்திலும் இருக்கிறார்கள். சந்திரனின் வீடான கடகம் காலபுருஷனுக்கு சுகஸ்தானமாகவும் சனைச்சர பகவானின் மகரம் கர்ம ஸ்தானமாகவும் இருந்து அங்கு ஸ்ர்ப கிரஹங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் உள்நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்தாலும் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும். சந்திரனின் வீட்டில் ராகு நிற்பது தகவல் தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் உள்நாட்டில் அமைவது சற்று கடினமே.
தற்போது சனைஸ்வர பகவான் வக்ர நிவர்த்தி பெற்று இயல்பு கதியில் மீண்டும் தனுர் ராசியை அடையும் போது வேலையிழப்பு பிரச்சனைகள் பெரிய அளவில் குறைந்து விடும் என எதிர்பார்க்கலாம் என்றாலும் அவர் தனது சுய வீடு மற்றும் காலபுருஷனுக்கு கர்மஸ்தானமான மகரத்தை அடையும் வரை இந்த பிரச்சனையின் தாக்கம் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும்.
இதில் கூறப்பட்டுள்ளது பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் அவரவர் சுய ஜாதகத்தில் இரண்டாமதிபதி, ஆறாமதிபதி, பத்தாமதிபதி குரு, சனி, ராகு, கேது போன்றவர்கள் இருக்கும் நிலையை பொருத்தும், அஷ்டம மற்றும் ஏழரை சனி போன்ற நிலைகளை பொருத்தும் மாறும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஜாதகத்தில் வேலையிழப்பை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்:
1. ஜெனன ஜாதகத்தில் பத்தாம் வீடு, கால புருஷனுக்கு பத்தாம் வீடு மற்றும் அதன் அதிபதி, கர்ம காரகன் சனைச்சர பகவான் பாப கர்த்தாரி யோகத்தில் நின்று தசா புத்தியை நடத்துவது.
2. ஜெனன ஜாதகத்தில் சனியும் ஸர்ப கிரகங்களும் முக்கியமாக கேது சனியுடன் இணைவு பெற்று தசா புத்தியை நடத்துவது.
3. நீசம்/வக்ரமடைந்த சனியுடன் செவ்வாய் பார்வை, சேர்க்கை பெற்று தசா புத்தி நடைபெறுவது.
4. ஜெனன சனியின் மீது கோச்சார செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரஹங்கள் கடந்து செல்வது.
5. ஜெனன பத்தாம் வீட்டதிபதி நீசம்/வக்ரம், 6/8/12 தொடர்பு மற்றும் பலமிழந்த நிலையில் கோச்சார செவ்வாய், சனி, ராகு, கேது அகிய கிரஹங்கள் கடந்து செல்வது.
வேலையிழப்பை தவிர்க்க பரிகாரங்கள்:
1. திருநள்ளாறு, குச்சனுர் சென்னை பொழிச்சலூர், சனி சிங்கனாபூர்
போன்ற சனி ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது.
2. குரு மற்றும் செவ்வாய் ஸ்தலமான திருச்செந்தூருக்கு வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வருவது
3. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தவறாமல் செய்வது. அவரவர் குல வழக்கபடியான நித்திய கர்மானுஷ்டங்களை தவறாமல் கடைபிடிப்பது போன்றவை கர்மகாரகன் சனைஸ்வர பகவானை மகிழ்விக்கும் செயலாகும்.
4. அடிமை தொழில் செய்வோர், கடின உழைப்பாளிகளான வண்டி,ரிக்ஷா, வீடுகளில் பணி புரிபவர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கு சம்பள பேரம், சம்பள நிலுவை போன்றவை செய்யாமல் சரியான சம்பளத்தை வழங்குவது மற்றும் இயன்ற உதவிகளை செய்வது வேலையிழப்பினை குறைக்கும் பரிகாரங்களாகும்.
5. நல்ல வேலை கிடைப்பது அவரவர் கர்ம நிலை அடிப்படையிலேயே அமைந்துவிடுகிறது. எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரி கல்வி தகுதி பெற்றாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை அமைந்துவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நமது கீழ் பணி புரியும் ஊழியர்களின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் நடந்துக்கொள்வது.