இன்னார்க்கு இன்னதொழில் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று!
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
(இந்த கட்டுரை கடந்த ஞாயிறு 19/11/2017 வேலூர் ஜோதிடர்கள் ஆராய்ச்சி சங்க கருத்தரங்கத்தில் ஆற்றிய எனது உரையின் தொகுப்பு)
சென்னை: நீண்ட நாட்களாக சனி பெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி கடந்த ஐப்பசி மாதம் 9ம் தேதி (26-10-2017) முதல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியை அடைந்து செலுத்துகிறார் அங்கிருந்தபடி தனது சஞ்சாரத்தை தொடர்ந்து வருகிறார்.
ஆனால் வாக்கிய பஞ்சாங்கபடி வரும் மார்கழி மாதம் 4ம் தேதி (19-12-2017) அன்று விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து சனி பரிகாரஸ்தலங்களில் சனி பரிகார பூஜைகளுக்கு பிரும்மாண்டா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர், எந்த பஞ்சாங்கமாக இருந்தால் என்னங்க! இந்த ஆண்டில் இறுதியில் சனி மாறிவிடுகிறார் எனும் நற்செய்தியோடு சனைச்சர பகவான் கூறும் செய்திகளை பார்ப்போமே!
கடந்த சில நாட்களாகவே எண்ணிடம் ஜோதிட ஆலோசனை பெற வருபவர்களில் பலரும் வேலைகளில் பல வித பிரச்சனைகளை சந்தித்து வருவது தெரிகிறது. அதிலும் முக்கியமாக 40 வயதிற்க்கு மேல் உள்ளவர்கள்தான் அதிகளவு வேலை இழப்புக்குட்பட்டதாக தெரிகிறது.
மேலும் தகவல் துறை எனும் ஐடி துறை மற்றும் ஐடி சார்ந்த பிபிஓ துறையிலும் பலர் வேலையிழந்து நிற்கும் நிலையை காண முடிகிறது. அவர்களுக்கெல்லாம் கர்ம காரகன் என அழைக்கப்படும் சனைச்சர பகவான் கூறும் நற்செய்தி என்னவென்று பார்ப்போமா நேயர்களே!
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை பணியை விட்டு நீக்கியுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்கள் பல சமீப காலமாக பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து, கடந்த சில மாதங்களாகவே
பணி நீக்கத்தைத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் சில தங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். ஐ.டி கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு அதிகமாகி வருகிறது.
பொருளாதாரம் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வரும் ஆண்டில்வேலைவாய்ப்பு பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்மகாரகன் எனப்படும் சனைச்சர பகவான்:
காலபுருஷ ராசியில் கர்ம காரகணாக விளங்கும் சனைச்சர பகவானே சகலவிதமான கர்மங்களுக்கும் காரகராகிறார். முக்கியமாக உலக இயக்கமே சனைச்சர பகவானின் அருளால்தான் நடைபெறுகிறது என்றால் மிகையாகாது.
பொதுவாக கர்மாவை மூன்று விதமாக பிரிக்கலாம்:
1. சஞ்ஜித கர்மா, ப்ராரப்த கர்மா, ஆகாமிய கர்மா எனப்படும் விதியை பற்றி கூறுவது
2. ஜீவனத்திற்க்கு ஆதாரமான தொழிலை குறிக்கும் கர்மா
3. இறந்த பின் செய்யும் கர்ம காரியங்களை குறிக்கும் கர்மா
சனைச்சர பகவான் ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரஹங்களுடன் இணைந்து சுப/அசுப பலன்களை வழங்குகிறார்.
1. சனி சூரியனுடன் சேர்ந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது.
2. சனி சந்திரனுடன் சேர்ந்தால் மனம் சார்ந்த தொழில்கள், நீர் சார்ந்த தொழில்கள், பயணம் சார்ந்த தொழில்கள், கனினி சார்ந்த தொழில்கள்
3. சனி செவ்வாயுடன் சேர்ந்தால் கடின உழைப்பு சார்ந்த தொழில்கள், இயந்திரங்களின் உபயோகம் சார்ந்த தொழில்கள், நெருப்பு சார்ந்த தொழில்கள், சக்தி சார்ந்த தொழில்கள், மருத்துவம் சார்ந்த தொழில்கள்
4. சனி புதனுடன் சேர்ந்தால் மூளையை உபயோகித்து செய்யும் நுட்பமான அறிவு சார்ந்த தொழில்கள், தகவல் தொடர்பு, கால் செண்டர், ஜோதிடம், பள்ளி கல்லூரிகள், முகவான்மை, தரகு, கதை, கவிதை, எழுத்து, மீடியா சார்ந்த தொழில்கள்
5. சனி குரு சேர்ந்தால் ஆன்மீகம், கோயில், நீதி, போதனை, ஆய்வு, பொன், நிதி சார்ந்த தொழில்கள்.
6. சனி சுக்கிரன் சேர்க்கை வாகனம், பணம், அழகு, சினிமா, அதிர்ஷ்டம்,
ஆபரணங்கள், நவரத்தின கற்க்கள் மற்றும் நகை சார்ந்த தொழில்கள்
7. சனி ராகு சேர்ந்தால் பரிகார கர்மங்கள், மருத்துவம், வெளிநாட்டு வேலை, மந்திர மாந்திரீக வேலைகள், விஷம் மற்றும் மருந்து சார்ந்த தொழில்கள்
8. சனி கேது சேர்ந்தால் மோக்ஷ கர்மங்கள், இறுதி காரியங்கள், ஜோதிடம்,
ஞானம், ஆன்மீகம், பரிகாரம், சித்து, மந்திர கட்டு, ரசாயனம் சார்ந்த தொழில்கள், எளிமை, இழப்பு, துறவு சார்ந்த தொழில்கள்.
யார் யாருக்கு என்னென்ன தொழில் அமையும்?
1. சனி இருக்கும் வீட்டில் அதிபதியின் தொழில்கள், சனியோடு பரிவர்தனை பெற்ற கிரஹங்கள் சார்ந்த தொழில்கள்
2. சனி இருக்கும் பாவத்தின் தொழில்கள்.
3. சனியை பார்க்கும் கிரஹங்களின் தொழில்கள்
4. சனி பார்க்கும் கிரஹங்களின் தொழில்கள்
5. சனியோடு சேர்ந்து நிற்க்கும் கிரஹங்களின் தொழில்கள்.
6. சனி பத்தாமதிபதி சம்மந்தமான தொழில்கள்
7. சனி காலபுருஷனுக்கு பத்துக்கு பத்தான துலாராசியோடு தொடர்பு கொண்ட தொழில்கள்
8. சனிக்கும் உச்ச வீட்டு கிரஹங்களுக்கும் உள்ள தொடர்பு சார்ந்த தொழில்கள்
9. சனிக்கும் பஞ்ச மகா புருஷ யோகங்கள் தரும் கிரஹங்களுக்கும் உள்ள தொடர்பு சார்ந்த தொழில்கள்
10. சனிக்கும் ஆத்மகாரகனுக்கும் உள்ள தொடர்பு சார்ந்த தொழில்கள்
இவற்றில் எத்தனை தொடர்புகள் இருக்கிறது அத்தனை தொழில்களை தனது வாழ்நாளில் ஒரு ஜாதகர் மேற்கொள்வார்.
வேலையிழப்பிற்கான ஜோதிட ரீதியான காரணங்கள்:
சிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ! உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ! அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனைஸ்வர பகவான் ஆவார். எனவேதான் அவரை 'கர்மகாரகன்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தர்ம கர்மாதிகளான குருவும் சனியும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் வேலைகளில் மாற்றம் ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கர்ம காரகனான சனைஸ்வர பகவானை குரு பார்வை அல்லது சேர்க்கையால் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் சம்பள உயர்வுடன் கூடிய வேலைமாற்றம் ஏற்படும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
அதேநேரம், சனைஸ்வர பகவான் தன காரகனான குருவை தனது பார்வை மற்றும் சேர்க்கையால் தொடர்பு கொள்ளும்போது, வேலையில் ஒரு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஜெனன குருவை கோசார சனி தொடும்போது அவர் அதுவரை செய்துவந்த வேலையிலிருந்து முற்றிலும் புதுமையான துறைக்கு மாற நேருகிறது.
சேர்க்கையை பொருத்தவரை மூன்று பாகை அளவுக்குள் சேர்க்கை ஏற்படும்பொழுதுதான் வேலையில் மாற்றம் நிகழ்கிறது.
ஜாதகத்தில் வேலையிழப்பை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்:
1. ஜெனன ஜாதகத்தில் பத்தாம் வீடு, கால புருஷனுக்கு பத்தாம் வீடு மற்றும் அதன் அதிபதி, கர்ம காரகன் சனைச்சர பகவான் பாப கர்த்தாரி யோகத்தில் நின்று தசா புத்தியை நடத்துவது.
2. ஜெனன ஜாதகத்தில் சனியும் ஸர்ப கிரகங்களும் முக்கியமாக கேது சனியுடன் இணைவு பெற்று தசா புத்தியை நடத்துவது.
3. நீசம்/வக்ரமடைந்த சனியுடன் செவ்வாய் பார்வை, சேர்க்கை பெற்று தசா புத்தி நடைபெறுவது.
4. ஜெனன சனியின் மீது கோச்சார செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரஹங்கள் கடந்து செல்வது.
5. ஜெனன பத்தாம் வீட்டதிபதி நீசம்/வக்ரம், 6/8/12 தொடர்பு மற்றும் பலமிழந்த நிலையில் கோச்சார செவ்வாய், சனி, ராகு, கேது அகிய கிரஹங்கள் கடந்து செல்வது.
6. ஜெனன ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் 2,6,10 மகரம், துலாம் ஆகிய வீடுகளில் சேர்ந்து நின்றாலும், பார்வை அல்லது சேர்கை பெற்றாலும், நக்ஷத்திர சார தொடர்பு பெற்றாலும் அடிக்கடி வேலை இழப்பு ஏற்படுகிறது.
7. ஜெனன பத்தாமிடத்தை கோச்சார சனியும் கோச்சார கேதுவும் ஏக காலத்தில் தொடர்பு கொள்ளும் போது வருமானம் குறைவதோடு வேலை இழப்பு ஏற்படுகிறது. இந்த காலத்தில் வேலையின் மீது ஒரு பற்றற்ற தன்மை ஏற்பட்டுவிடுகிறது.
எப்போது தீரும் வேலையிழப்பு பிரச்சனை?
தற்போதுள்ள கோசாரக கிரஹ நிலையில் ராகு பகவான் கடகத்திலும்
கேது பகவான் மகரத்திலும் இருக்கிறார்கள். சந்திரனின் வீடான கடகம் காலபுருஷனுக்கு சுகஸ்தானமாகவும் சனைச்சர பகவானின் மகரம் கர்ம ஸ்தானமாகவும் இருந்து அங்கு ஸ்ர்ப கிரஹங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் உள்நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்தாலும் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும். சந்திரனின் வீட்டில் ராகு நிற்பது தகவல் தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் உள்நாட்டில் அமைவது சற்று கடினமே.
தற்போது சனைஸ்வர பகவான் வக்ர நிவர்த்தி பெற்று இயல்பு கதியில் மீண்டும் தனுர் ராசியை அடையும் போது வேலையிழப்பு பிரச்சனைகள் பெரிய அளவில் குறைந்து விடும் என எதிர்பார்க்கலாம் என்றாலும் அவர் தனது சுய வீடு மற்றும் காலபுருஷனுக்கு கர்மஸ்தானமான மகரத்தை அடையும் வரை இந்த பிரச்சனையின் தாக்கம் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும்.
இதில் கூறப்பட்டுள்ளது பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் அவரவர் சுய ஜாதகத்தில் இரண்டாமதிபதி, ஆறாமதிபதி, பத்தாமதிபதி குரு, சனி, ராகு, கேது போன்றவர்கள் இருக்கும் நிலையை பொருத்தும், அஷ்டம மற்றும் ஏழரை சனி போன்ற நிலைகளை பொருத்தும் மாறும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
வேலையிழப்பை தவிர்க்க பரிகாரங்கள்:
1. திருநள்ளாறு, குச்சனுர் சென்னை பொழிச்சலூர், சனி சிங்கனாபூர்
போன்ற சனி ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது.
2. சூரிய செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் கந்த சஷ்டி கவசம் படித்துவர நல்ல வேலை அமையும்.
2. குரு மற்றும் செவ்வாய் ஸ்தலமான திருச்செந்தூருக்கு வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வருவது
3. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தவறாமல் செய்வது. அவரவர் குல வழக்கபடியான நித்திய கர்மானுஷ்டங்களை தவறாமல் கடைபிடிப்பது போன்றவை கர்மகாரகன் சனைஸ்வர பகவானை மகிழ்விக்கும் செயலாகும்.
4. அடிமை தொழில் செய்வோர், கடின உழைப்பாளிகளான வண்டி,ரிக்ஷா, வீடுகளில் பணி புரிபவர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கு சம்பள பேரம், சம்பள நிலுவை போன்றவை செய்யாமல் சரியான சம்பளத்தை வழங்குவது மற்றும் இயன்ற உதவிகளை செய்வது வேலையிழப்பினை குறைக்கும் பரிகாரங்களாகும்.
5. நல்ல வேலை கிடைப்பது அவரவர் கர்ம நிலை அடிப்படையிலேயே அமைந்துவிடுகிறது. எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரி கல்வி தகுதி பெற்றாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை அமைந்துவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நமது கீழ் பணி புரியும் ஊழியர்களின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் நடந்துக்கொள்வது, நமக்கு கீழே பணிபுரிபவர்களை கருணையுடன் அனுகுவது ஆகியவை சிறந்த பரிகாரங்களாகும்.