அரசியல் பதவியும் அரசாங்க பதவியும் சனிபெயர்ச்சியில் யாருக்கு கிடைக்கும்?
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நீண்ட நாட்களாக சனி பெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி கடந்த ஐப்பசி மாதம் 9ம் தேதி (26-10-2017) முதல்
விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியை அடைந்து செலுத்துகிறார் அங்கிருந்தபடி தனது சஞ்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கபடி வரும் மார்கழி மாதம் 4ம் தேதி (19-12-2017) அன்று விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து சனி பரிகாரஸ்தலங்களில் சனி பரிகார பூஜைகளுக்கு பிரும்மாண்டா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர், எந்த பஞ்சாங்கமாக இருந்தால் என்னங்க! இந்த ஆண்டில் இறுதியில் சனி மாறிவிடுகிறார் எனும் நற்செய்தியோடு சனைச்சர பகவான் யாருக்கு அரசியல் மற்றும் அரசாங்க பதவியை தருவார் என்று பார்க்கலாமே!
இன்று பலரும் பதவி மீது தனக்கு எந்த ஆசையும் இல்லை என உதட்டளவில் கூறினாலும் தனக்கு விரும்பிய பதவி கிடைக்க எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் தலைமை பதவியை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் ஒரு சிலர் ஒரு சமூக அமைப்பின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். இன்னும் சிலர் ஒரு ஊரின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். இன்னும் சிலர் ஒரு பிராந்தியத்தின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். ஒருவர் ஒரு தலைமைப் பதவியை அடைவதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்துச் சொத்துக்களையும், உறவுகளையும் இழக்கவும் தயாராகிறார்,
அரசியலில் பிரகாசிக்கும் ஜாதக அமைப்பு:
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர்.
அரசு வேலை தரும் ஜாதக அமைப்பு:
ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். .
ஜோதிட ரீதியாக அரசியல் மற்றும் அரசாங்க உயர்பதவி வகிக்கும் அமைப்பை தரும் கிரக நிலைகள்:
ஒருவர் அரசியலில் உயர்பதவி மற்றும் தலைமை பதவிகள் வகிக்க வேண்டும் என்றால் முதலில் அவருடைய லக்னம் பலமாக இருக்க வேண்டும். அரசியல் பதவிகளுக்கென்றே சில ராசிகள் இருக்கின்றது. அவற்றில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். கால புருஷ ராசியில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு சர ராசிகளில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த ராசியை லக்னமாக கொண்டிருக்கும்போது இந்த நான்கு ராசிகளில் ஒன்றே பத்தாம் வீடாகவும் அமையும். எனவே இந்த நான்கு ராசிகளையும் அரசியல் தொடர்புள்ள ராசிகளாக கூறப்படுகிறது.
இவற்றோடு அரசியல் மற்றும் அரசாங்க பதவிகளுக்கு ராஜ கிரகம் எனப்படும் சூரியனின் வீடும் லக்னமாக இருப்பது அரசியல் பதவியை தரும்.
மேலும் அரசியலில் மக்கள் தொடர்பு என்பது முக்கியமானதாகும். ஜோதிடத்தில் பொது மக்களை குறிக்கும் கிரகம் சனைச்சர பகவான் ஆவார். அவர் ஜாதகத்தில் ஜென ரஞ்சக ராசிகள் மற்றும் சுக்கிரனின் வீடுகளில் இருப்பது சிறப்பு. மக்கள் தொடர்பை குறிக்கும் பாவம் ஏழாம் வீடு ஆகும். கால புருஷ ராசியின் ஏழாம் வீடு மற்றும் ஜெனன ஜாதக ஏழாம் வீடு இரண்டும் அசுப தொடர்புகள் இன்றி இருக்க வேண்டும்.
அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.
ராஜ கிரகங்களான சூரியன் சந்திரன் மற்றும் அரசாங்க அதிகார பதவிகளை தரும் செவ்வாய் ஆட்சி உச்ச பலம் பெற்று நிற்க வேண்டும். மேலும் 6/8/12 மற்றும் பாதகாதிபதி தொடர்புகள் பெறாமல் இருக்கவேண்டும்.
அனைத்து பதவிகளையும் தீர்மானிக்கும் சனிஸ்வரபகவான் ஆட்சி உச்சம் பெற்று சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
சந்திரனும் குருவும் பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.
தர்ம கர்மாதிபதி யோகம் மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம்
செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.
1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.
மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.
6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.
6/8/12ம் அதிபதிகள் இந்த மூன்று வீடுகளுக்கள் மாறியோ பரிவர்தனை பெற்றோ அமர்ந்து விபரீத ராஜ யோகம் பெற்று நிற்பது.
லக்னம், ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய மூன்றும் சர்வாஷ்டக வர்கத்தில் 30 க்கு மேல் அதிக பரல் பெற்று நிற்க வேண்டும்.
இந்த அமைப்பு இருந்தும் இன்னும் அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்ற வருத்தமா? கவலைய விடுங்க! உங்களுக்காகவே சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கத்தில் அருள்மிகு ஆட்சீஸ்வரர் காத்திருக்கிறார்.
அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் 4 கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.
இந்த திருக்கோயில் உள்ள சிவபெருமானை ஞாயிற்று கிழமைகளில் சென்று அபிஷேகம் செய்து வணங்கி வர அரசியலில் பதவி வேண்டுவோருக்கும் அரசாங்க பதவி வேண்டுவோருக்கும் கிடைக்கும் என்பது நிதர்சனம். மேலும் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமை திறன், பதவி உயர்வு, அரசாங்க பதவி போன்றவற்றையும் வழங்குவதில் ஆட்சீஸ்வரருக்கு நிகர் இல்லை.