ஏழு ஊர் சப்பரம் திருவிழா... டி.கல்லுப்பட்டியில் முத்தாலம்மனை தரிசிக்க கூடிய பக்தர்கள்
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் ஏழு ஊர் கிராம மக்கள் கொண்டாடும் முத்தாலம்மன் கோவில் சப்பரம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை: ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் சப்பரம் திருவிழா டி. கல்லுப்பட்டியில் கோலாகலமாக நடைபெற்றது. முத்தாலம்மனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
டி. கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி,கிளாங்குளம்,சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஆறு சப்பரங்கள் செய்து வந்து அம்மாபட்டியிலிருந்து முத்தாளம்மனை அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவது இந்த திருவிழாவின் சிறப்பம்சம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவை காண வெளியூர்களில் வசிப்பவர்களும் வந்து விடுவார்கள்.
ஜாதி பேதமின்றி, அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் விழா என்பது இந்த விழாவின் சிறப்பு. விடுமுறை காலமாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கானோர் இந்த திருவிழாவைக் காண திரண்டு வந்தனர்.
தரித்திர யோகம்: வறுமையும் பிச்சைக்காரர்கள் ஆகும் நிலையும் யாருக்கு வரும் தெரியுமா?
முத்தாலம்மன் வழிபாடு
முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர்.
சப்பரம் எடுத்து வழிபாடு
ஏழூர் அம்மன் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அம்மாபட்டியில் அம்மன் இருப்பதால் அந்த ஊர் தவிர கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி ஆகிய 6 கிராமங்களில் சப்பரங்கள் வடிவமைக்கப்பட்டன.
முப்பிடாதி அம்மன்
சப்பரம் வடிவமைக்கும் ஊர்களில் மல்லிகை கரகம் எடுத்து முப்பிடாதி அம்மனை வழிபடுவார்கள். இதற்காக நியமனம் செய்யப்பட்ட பூசாரி குடும்பத்தினர் கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபட்டு கரகத்தை கரைப்பது வழக்கமாகும்.
முத்தாலம்மன் வழிபாடு
அம்மாபட்டியில் அலங்காரமாக எழுந்தருளி அருள்பாலித்த முத்தாலம்மனுக்கு நேற்றிரவு கண் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று காலை கல்லுப்பட்டி உட்பட 6 கிராமங்களிலிருந்து சப்பரங்களை பக்தர்கள் தலையில் சுமந்து, அம்மாபட்டிக்கு கொண்டு வந்து அம்மனை அவரவர் ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.
சப்பரத்தின் கூடவே வரும் கிராம மக்கள்
சப்பரங்கள் அந்தந்த ஊர்களில் இருந்து வரும் போது கூடவே அந்த ஊர் கிராம மக்களும் சப்பரத்தின் கூடவே நடந்து வந்து அம்மாபட்டியில் உள்ள அம்மனை தரிசனம் செய்து அழைத்து செல்வது மரபாகும். இதற்காகவே இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் வெளியூர்கள், வெளிநாடுகளில் வேலைக்காக சென்றிருந்தாலும் ஏழு ஊர் முத்தாலம்மன் திருவிழாவில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.
திரண்ட ஏழு ஊர் மக்கள்
பல மாதங்களாக எந்த திருவிழாவும் கொண்டாடப்படாமல் இருந்த நிலையில் ஏழு திருவிழா கொண்டாடப்பட்டதால் அம்மனை தரிசனம் செய்ய ஏழு ஊர் கிராம மக்களும் டி. கல்லுப்பட்டியில் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பிரம்மாண்ட சப்பரத்தை தலை சுமையாக சுமந்து வந்து அம்மனை அழைத்து செல்லும் போது ஏராளமானோர் உற்சாக குரல் எழுப்பி அம்மனை வழிபட்டனர்.