இன்று செவ்வாய் ஜெயந்தி: போர் வீரன் செவ்வாய்... விஷேச பார்வைக்கு என்ன பலன் தெரியுமா?
சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். நவகோள்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்க
சென்னை: நவகிரகங்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு. செவ்வாய் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த வேளையில் செவ்வாயைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆவணி அமாவாசைக்கு மாறுநாள் பிரதமையில் செவ்வாய் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையைப் பொருத்து புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள். சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய்.
செவ்வாய் ஒரு ஆண் கிரகம். முக்கோண வடிவம் கொண்டது. செந்நிற மேனி கொண்டவர். தெற்கு திசை நோக்கி அமர்ந்து இருப்பவர்.
பன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் ஸ்தானங்களாகும். இருபத்தேழு நட்சத்திரங்களில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய் குரியன. செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு, கிரகங்களாகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகையாகும். அதே நேரம் சனி கிரகம் செவ்வாயை பகையாக கருதுகிறது.
செவ்வாய்க்கு வாக்குகாரகன் என்ற பலம் உண்டு. ஆகையால் இவர்களின் குணாதிசயங்களை கணிப்பது கடினம். எந்த நேரத்தில் எப்படி பேசுவார்கள், எப்படி மாறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது, திடீரென்று கடும் சொற்களை பயன்படுத்துவார்கள். தன் காரியங்களை சாதித்துக் கொள்ள எந்த கீழ்நிலைக்கும் இறங்கி வருவார்கள். தகாத சேர்க்கை, கூடா நட்பு ஏற்படும். ஸ்திர புத்தி இருக்காது. உடலில் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. செண்பக மலர் இவருக்கு உகந்த மலர். துவரை இவருக்கு மிகவும் பிடித்த தானியம். செவ்வாய்க்கு துவர்ப்புச் சுவை பிடிக்கும். செம்பு, உலோகம் செவ்வாயின் உலோகம். செந்நிற ஆடையையே செவ் வாய் பகவான் விரும்பி அணிவார். நவரத்தினங்களில் இவருக்கு உரியது பவளம் ஆகும். லக்னத்தில் செவ்வாய் இருந்தால் விரும்பிய வாழ்க்கை அமையாது. எடுக்கும் காரியங்களில் தோல்விகளே கிடைக்கும்.
அஷ்டம சனி, ஏழரை சனி நடக்குதா கடன் வாங்காதீங்க - பரிகாரம் பண்ணுங்க
செவ்வாய் கிரகம்
செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.
பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்காரகன் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு மாலினி, சுசீலின் என்று இரண்டு மனைவிகள் உண்டு. நவ கிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. ஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு செவ்வாய் கிரகம் பலமே காரணமாக இருக்கிறது.
பலம் குறைந்த செவ்வாய்
போலீஸ் - ராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு அதிபதியாக இருக்க, செவ்வாய் கிரகத்தின் தயவு தேவை. எண்ணற்ற சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்களுக்கு செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது. சேர்ந்தாலும் தங்காது.
ஆற்றல்காரகன்
மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய். பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கக்கூடியவர். செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவர். சகோதரகாரகன் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கு சகோதர காரகன் என்ற சிறப்பு ஏற்பட்டுள்ளது.
வீடு மனை நிலம்
செவ்வாய் என்பது முழுமையான ஆண் கிரகம். ஆண்மைக்கு காரகம் வகிக்கும் கிரகம். அதனால் எதிர் பாலினத்தவறை அன்பால் உணர்வால் வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும். மருத்துவம்,பொறியியல்,கட்டிட கலை, காவல்,ராணுவம், ஆயுதம்,ரத்தம்,இளைய உடன் பிறப்பு, ஆண்மை ,வீரம், வீரியம், மிடுக்கு தைரியம் ஆகியவைகளுக்கு செவ்வாய் காரணகர்த்தா. செவ்வாய்க்கு மூன்று விசேஷ பார்வைகள் உண்டு. பாவ கிரகங்களான சனி செவ்வாய் க்கு கேந்திரத்தில் அதிக பலம். அதன் அடிப்படையில் செவ்வாய், தான் இருக்கும் இடத்தில் இருந்து நான்காம் கேந்திரத்தை பார்ப்பார். அதாவது 4ஆம் பார்வை உண்டு. 4 என்பது வீடு,நிலம் வாகனம் தாய் என பல விஷயங்களை கூறும் பாவகம்.தாயை பாதுகாப்பது தாய் மண்ணை பாதுகாப்பது போன்றவை செவ்வாய் வலுவாக உள்ளவர்கள் செய்யும் செயல். பூமிகாரகனுக்கு 4ஆம் பார்வையை கொடுத்ததில் வியப்பில்லை.
பயமற்ற போர்வீரன்
நவகிரகங்களுக்கு ஏழாம் பார்வை விஷேசமானது. 7 என்பது களத்திரம் நண்பர்கள், வாழ்க்கை துணை, வியாபார வெற்றிக்கு உதவுபவர் செவ்வாய். அதேபோல திருமணத்தில் செவ்வாயின் பங்கு முக்கியமானது. அதே போல 8வது பார்வை செவ்வாய்க்கு முக்கியமானது. 8ஆமிடம் ஆயுள்ஸ்தானம். மரணம், அவமானம் அச்சம் என மனிதர்கள் பயப்படும் இடம். போர்வீரனான செவ்வாய் இந்த இடத்தை பார்க்கிறார். மரணபயமற்ற நிலை, அவமானங்களை வென்று வெற்றி வாகை சூடுபவன் போர்வீரனான செவ்வாய். அதனால்தான் செவ்வாய்க்கு எட்டாம் இடம் விஷேசமானது.
செவ்வாயுடன் சனி கூட்டணி
செவ்வாயும் சனியும் ஒரே ராசியில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். அப்படி இல்லாமல் செவ்வாய் சனி மட்டும் ஒன்றாக இணைந்திருந்தால் அவை எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்தி விடும்.
சனி பாதுகாப்புத்துறைக்குரிய போர்க்கிரகம். செவ்வாய் போரில் வீரர்களை வழிநடத்தும் சேனாதிபதி கிரகம். தீவிரமான செயல்திறனும் மெதுவான செயல் வேகமும் கொண்ட சனி சேனாதிபதியான செவ்வாயின் பார்வையில் அல்லது சேர்க்கையில் போரிடும்போது தீவிரமாக செயல்படும்.
இயற்கை பேரழிவுகள்
ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள். பொதுவாக சனி செவ்வாய் சேர்ந்து இருப்பது, இயற்கை பேரழிவுகளை கொண்டுவரும். பூகம்பம், நில நடுக்கம், விமான விபத்துகள், நாடுகளுக்கு இடையேயான போர்கள், தீவிரவாத தாக்குதல்கள், பெரும் தீ விபத்துகள் போன்றவவை ஏற்படும். கடல் உயிரினங்கள், வன உயிரினங்கள் போன்றவை பெரும் உயிரிழப்புகளை சந்திக்கும்.
2015ஆம் ஆண்டு விருச்சிக ராசியில் சனி இருந்த போது செவ்வாய் இணைந்தது. அப்போது பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தது. ஜப்பான் சுனாமி பூகம்பம் கூட செவ்வாய் சனியின் சேர்க்கையின் போது ஏற்பட்டதுதான்.
பிருகுமங்கள யோகம்
சுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது பிருகு மங்கள யோகம் உண்டாகும். சொத்து சேரும்; சுகபோகம் கூடும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வசதியான வாழ்க்கை அமையும். உயர்வாகன யோகமும் உண்டாகும். செவ்வாய் இருக்கும் ராசிக்கு கேந்திரத்தில் அதாவது செவ்வாய்க்கு 4, 7, 10ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் பிருகு மங்கள யோகமாகும். இந்த அமைப்புள்ள ஜாதகர்கள் பெண்கள் மூலம் யோகம் அடைவார்கள். சொத்து, செல்வாக்கு உள்ள மனைவி அமைவார். வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட், தோப்பு என மண் மனை யோகம் உண்டு.
பயம் வேண்டாம்
செவ்வாய்க்கும் திருமணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். செவ்வாய் தோஷம் பற்றி அச்சப்படும்படி பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டாலும் பயப்பட வேண்டாம். செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெறுவது நல்லது. செவ்வாய் பலமிழந்து இருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, மாதவிடாய் கோளாறு உண்டாகும்.
செவ்வாய் முருகன்
செவ்வாய் முருகப்பெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர். செவ்வாய் பகவான் வழிபட்ட தலங்கள் திருச்சிறுகுடி, வைத்தீஸ்வரன் கோவில், பழனி. வைத்தீஸ்வரன்கோயில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். மயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாக கூறப்படுகிறது.