புத்திரதோஷம் தீர்க்கும் சனீஸ்வரர் - சனி தோஷம் தீர்த்து சொர்ணம் அளிக்கும் சொர்ண சனீஸ்வரர்
சனி பகவானால் சிலருக்கு புத்திர தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு பரிகாரமாக வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு பொருட்கள் தானமாக கொடுக்கலாம். சனி சாந்தி ஹோமம் ச
மதுரை: புத்திர தோஷம் சனிபகவானால் ஏற்பட காரணம் பிறர் மனைவியை அபகரித்ததால் உண்டான கணவனின் சாபத்தினாலும், நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளியின் சாபத்தாலும், ஏற்படும் தோஷமாகும். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு கைத்தடி, சைக்கிள் தானம் செய்வதன் மூலமும் பரிகாரம் தேடலாம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை 06.07.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சனி பகவானை வேண்டி சொர்ண சனீஸ்வரர் யாகமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும், ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கு எள் எண்ணெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
நவக்கிரகங்களில் சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக ஜோதிடர்கள் மற்றும் அர்ச்சகர்கள், ஆச்சாரிய பெருமக்கள் மூலமும் மேலும் பல வகையிலும் அறிந்துள்ளோம். சனி பகவானை, சனீஸ்வரன் என்றும் ஆயுள்காரகன் என்றும் அதிர்ஷ்டத்தை அளிப்பவன் என்றும் போற்றி வணங்குகிறோம்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்குமானால் அந்த ஜாதகத்திற்குரிய நபர் ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் முற்பிறவியில் தங்களிடம் பணிபுரிந்த வேலைக்காரர்களுக்கு சரியாக ஊதியம் கொடுக்காமலும், நல்ல உணவு, ஆடை வழங்காமல், கடுமையாக பணிகளை செய்ய வைத்தும், உடல் மற்றும் மனரீதியில் துன்புறுத்தியதாலும், அந்த பணியாளர்களின் சாபத்தை பெற்று இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உண்டாகியிருப்பதை அறியலாம்.
புத்திர தோஷம் நீங்க பரிகாரம்
ஜாதகத்தில் சனி கிரகம் காரணமாக தான் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு எள் முடிச்சு பரிகாரத்தைச் செய்து சனி பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம். 200 கிராம் கறுப்பு எள் அல்லது வெள்ளை எள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை சமபாகமாக பிரித்து, ஒரு கருப்பு நிற துணியை துணியை ஒன்பது துண்டுகளாக வெட்டியெடுத்து, பிரித்து வைத்த ஒவ்வொரு பங்கு எள்ளையும் ஒன்பது துணிகளில் போட்டு முடிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒன்பது துணி முடிப்புகளையும் உங்கள் வீட்டு பூஜையறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையையும் எடுத்து வைத்து விட வேண்டும்.
ஒன்பது நாட்கள் பூஜை
பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் - மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, சனி பகவானை மனதில் நினைத்து "சனி பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும்" என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும்.
சனிபகவான் அருள் கிடைக்கும்
பத்தாவது நாள் காலையில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது எள் தானியங்கள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு சனி கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக சனீஸ்வர பகவான் அருள் புரிவார்.
சனிபரிகார சாந்தி ஹோமம்
சனிகிரக சாந்திஹோமம், சனி பகவானுக்காக செய்யப்படும் ஒரு யாகமாகும். ஒவ்வொருவருடைய வாழ்விலும் சனி கிரகத்தின் அற்புத சக்தியானது, சில நேரங்களில் துன்பங்களையும், சோதனைகளையும் ஏற்படுத்தி, தவறை உணர்ந்து நம்மை நேர்வழியில் அழைத்துச் செல்வதே சனி பகவானின் நோக்கமாகும். எனினும், சில நேரங்களில் சனியின் தாக்கம் நம்மால் தாங்க முடியாததாக அமைந்து வருகிறது. இவற்றை களைவதற்கு சனி சாந்தி ஹோமம் வழிவகை செய்கிறது. மேலும் ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும் சனியின் எதிர்மறைத் தாக்கத்தை நிவர்த்தி செய்யவும், நமது முயற்சிகளில் வெற்றி காணத் துணை புரியும் வகையில், இந்த ஹோமம் தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.
முன்னேற்றங்கள் கிடைக்கும்
சனியின் எதிர்மறைத் தாக்கம் நீங்கி, துன்பங்கள் விலகுகின்றன. சனி கிரகத்தின் அருளால், சாதகமான பலன்கள் கிடைக்கவும், விருப்பங்கள் நிறைவேறவும், வாய்ப்புகள் பெருகுகின்றன. சனி பகவானை திருப்திப் படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம். எதிர்மறைத் தாக்கங்கள் விலகி, நன்மை தரும் முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் சனி பகவானை இவ்வாறு வழிபடுவதனால், மேலும் சிறந்த பலங்களை அடையலாம். இந்த யாகத்தின் மூலம் தெய்வீக அருளால், தர்மத்தின் பாதையில் நடந்து, கடவுளோடு இணைந்த ஒரு வாழ்க்கையை பெறலாம்.