சனிப்பெயர்ச்சி 2020: கடகத்திற்கு கண்டச்சனி- வம்பு சண்டைக்கு போகாதீங்க
கடகம் ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகாலமாகவே சனி, குரு என இரண்டு கிரகங்களுமே அற்புதமான பலனை அளித்துக்கொண்டிருகின்றனர். 2020ஆம் ஆண்டில் இருந்து கண்டச்சனியாக ராசியில் சஞ்சரிக்கிறார்.
சென்னை: சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கடகம் ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு சனி பகவான் நகர்கிறார். கண்டச்சனி காலத்தில் சில பாதிப்புகள் வரலாம்.
கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு கண்டச்சனி காலம் என்றாலும் சனியின் ஏழாம் இட பார்வை உங்க ராசியில் மீது விழுகிறது. இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் முக்கிய முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். அதிகமாக கடன் வாங்கவோ, பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்கவோ வேண்டாம்.
கடகம் ராசிக்கு சனி யோகமான கிரகம் இல்லை இருந்தாலும் சனி பெயர்ச்சியால் சிலருக்கு அலுவலகத்தில் தலைமை பதவியை தருவார். கண்டச்சனி காலத்தில் சனி பகவான் சூரியன், சந்திரன் செவ்வாய் நட்சத்திரங்களில் சனி பயணிக்கிறார். உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் சனி பயணிக்கும் காலத்தில் சில சாதக பாதகங்கள் ஏற்படும்.
வெளிநாடு செல்லும் யோகம்
கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை செய்வார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். சனி பார்வை கடகத்தின் மீது விழுவதால் பாதிப்பு குறையும்.
தம்பதிகள் கவனம்
ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்கள். இந்த கால கட்டத்தில் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் வராது.
கடன் கொடுக்காதீங்க
கண்ட சனி கால கட்டத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் மன அமைதி குறையும்.
சனி சாந்தி ஹோமங்கள்
திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில், வாலாஜாபேட்டையில் உள்ள பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆகிய சனியின் திருத்தலங்களுக்குச் சென்று சனி சாந்தி ஹோமங்களை செய்யலாம்.
சனியின் குரு பைரவர்
பைரவர் சனி பகவானின் குரு. சனியின் அன்பால் மகிழ்ந்தவர் பைரவர். பைரவரை வணங்க சனிதோஷம் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, விரைய சனி, பாத சனி பிடித்தவர்கள் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்கலாம். சனி தோஷங்கள் நீங்கும். சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வெற்றிலை மாலை சாற்றி வணங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தானம்
மாற்றுத் திறனாளிகள் நடக்க இயலாதவர்கள், பார்வையற்றவர்களுக்கும் வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம். காலில்லாதவர்களுக்கு ஊன்றுகோல் தானம் தரலாம். முதியோருக்கு செருப்பு தானமாக தரலாம். சனிக்கு உகந்த எள்ளை தலைக்கு கீழே வைத்து உறங்கி, காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து சனியின் வாகனமான காகத்திற்கு வைக்கலாம் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பொது பலன்களுக்கும் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் சஞ்சாரம் தசாபுத்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. நல்ல தசாபுத்தி நடந்தால் எந்த கிரகங்களினாலும் பாதிப்பு வராது எனவே கவலைப்பட வேண்டாம்.