மோடிக்கு சகாயம் செய்த சனிபகவான்... ராகுலுக்கு பாதகமானது ஏன்? #சனிபெயர்ச்சி
சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு சகாயம் செய்த சனி பகவான், ராகுல்காந்தி மீது சற்றே பாதகமான பார்வையை வீசியிருக்கிறார்.
சென்னை: சனி பெயர்ச்சி பிரதமர் நரேந்திமோடிக்கும், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கும் எப்படியிருக்கப் போகிறது என்று பலரும் கணித்திருந்தனர். இருவருமே விருச்சிக ராசிதான் ஆனால் நட்சத்திரம்தான் வேறு வேறு என்றாலும் ஒருவருக்கு சற்றே சாதகமாகவும் மற்றொருவருக்கு பாதகமாக முடிந்துள்ளது.
சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். தனுசு ராசியில் இருந்து, மூன்றாம் பார்வையாக, கும்ப ராசியையும், ஏழாம் பார்வையாக மிதுன ராசியையும், பத்தாம் பார்வையாக, கன்னி ராசியையும் பார்க்கிறார்
இந்த சனிப்பெயர்ச்சி நாட்டின் இரு முக்கிய தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கும் எப்படி இருக்குமோ என்று ஜோதிடர்கள் கணித்தனர்.
நரேந்திர மோடி விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்மசனி முடிந்து பாத சனியாக தொடர்கிறது. இது பிரதமர் மோடிக்கு பொங்கு சனி காலமாகும்.
கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக விருச்சிக ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை அதிகம் சம்பாதித்து கொடுத்தார் சனி பகவான்.
சனிப்பெயர்ச்சி சாதகம்
தற்போது சனிபகவான் விருச்சிகம் ராசியின் இரண்டாம் வீட்டில் அமர்வதால் இனி மோடியின் முகத்தில் புன்னகை மிளிரும், சோர்வு நீங்கி மீண்டும் உற்சாகமடைவார் மோடி. வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் என்பதை நிரூபிக்கும் வகையில் குஜராத், இமாசல பிரதேச தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.
சனி சகாயம்
மோடி பிறந்த அனுசம் நட்சத்திரம் சனிபகவானின் நட்சத்திரம். பிரதமர் மோடி சனிபகவானின் நட்சத்திர சாரத்தில் பிறந்துள்ளார். இதனாலேயே சனிபகவானின் சகாய பார்வை மோடிக்கு கிடைத்துள்ளது. மோடியின் அரசியல் பயணம் வெற்றியடையும் என்றே கணிப்புகள் கூறுகின்றன.
விருச்சிக ராசி கேட்டை
காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்துள்ளார். இவருக்கும் ஜென்மசனி முடிந்து பாத சனி தொடங்கியுள்ளது. கேட்டை நட்சத்திரம் புதனின் சாரமாகும். சொந்த கட்சியில் செல்வாக்கு ஏற்பட்டாலும் மிகப்பெரிய வெற்றியை பெற அதிக போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
சனிபகவான் பாதகம்
இந்த ஏழரை சனிக்காலம் சற்றே சறுக்கல்களை ஏற்படுத்தியிருந்தாலும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள ராகு பெயர்ச்சி சாதகத்தை தருவார் என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த ஏழரை சனியின் காலகட்டத்தில் தொடக்கத்தில் சிரமங்கள் இருந்தாலும் வெற்றிகள் உண்டு என்றே கூறுகின்றனர் ஜோதிடர்கள். எது எப்படியோ சனிபகவான் பிரதமர் மோடிக்கு சகாயம் செய்து விட்டு ராகுல்காந்தி பாதகத்தை ஏற்படுத்தி விட்டார்.