16 தெய்வீக திருமணங்களுக்கான பந்தக்கால் முகூர்த்தம்- மழைவேண்டி 1000 கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம்
வேலூர்: வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மழை வேண்டியும், மக்கள் ஆரோக்யம் வேண்டியும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் 16 தெய்வீக திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. 1000 தவில் நாதஸ்வரம் கலைஞர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியும், 1008 கலச திருமஞ்சனம் மார்ச் 13 முதல் 17 வரை நடைபெறுகிறது.
தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு உலகில் எங்கும் நடைபெறாத வகையில் வரும் பங்குனி மாதம் 03 ஆம் தேதி மார்ச் 17ஆம் தேதி 16 தெய்வீக திருகல்யாணத்துடன் 1000 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம நிகழ்ச்சியுடன் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான பந்தக்கால் முஹூர்த்த விழா பிப்ரவரி 22ஆம் தேதி காலை நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், விவசாயம், வியாபார பெருமக்கள் நலனுக்காகவும், குடும்பங்களில் திருமணம், மக்கட்பேறு, கிரக பிரவேசம் போன்ற வைபவங்கள் தடையில்லாமல் நடைபெற வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும் எங்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கிடைக்க வேண்டியும், குலதெய்வம், குடும்ப தெய்வம் அருளுடன் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற வேண்டியும் 16 தெய்வீக திருமணங்கள் நடைபெற உள்ளன.
இதனை முன்னிட்டு மாசி மாதம் 10 ஆம் தேதி 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00 மணிக்கு நூறுக்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்ட பந்தக்கால் முஹூர்த்த விழா, கோபூஜை, யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பந்தக்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று, தன்வந்திரி மந்திரத்துடன் பந்தக்கால் முஹூர்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மஹா ஹோமமும், உற்சவர் தன்வந்திரிக்கு சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள், 108 சக்திபீட ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ காமக்ஷி ஸ்வாமிகள், குடியாத்தம் கும்மாத்தம்மா, திருவண்ணாமலை அக்ஷய சாயி ரவிச்சந்திரன், கொடுமுடி ஆட்சி பீடம் ராணியம்மா, பூந்தமல்லி அன்னபாப ஆலய நிர்வாகி ஸ்ரீமதி குமார் பாபா, ஆடிட்டர் திரு. தேவராஜன், டாக்டர் குழந்தைவேல், டாக்டர் தொப்பகவுண்டர், டாக்டர் ரங்கராஜன், மற்றும் ஆந்திரா, கர்னாடக, புதுச்சேரி மாநில பக்தர்களும், கிராம - நகர மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பங்கேற்ற அனைவரும் பந்தக்கால் முஹூர்த்தத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னாதானத்தில் பங்கேற்றனர்.
பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் பேசிய முரளீதர சுவாமிகள், உலக மக்களின் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மார்ச் 13 முதல் 17 வரை, ஒரே நேரத்தில் ஒரே மேடையில் 16 தெய்வீக திருகல்யாணம், 1000 தவில் - நாதஸ்வரம் கலைஞர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சி, 1008 கலச திருமஞ்சனம் போன்ற வைபங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.