புண்ணியம் நிறைய மாசி மகம் 2019 : புனித நீராடி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்
சென்னை: மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மாசிமாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமிர்தம் இருப்பாதாகக் கருதப்படுவதால் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுகின்றனர். மாசி மகத்தில் புனித நீராடுவதன் மூலம் தங்களின் பாவங்கள் நீங்கும் என்பதால் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
மாசிப்பௌர்ணமி அன்றுதான் அன்னை பரமேஸ்வரி காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவத்தில் தோன்றினாள். சிவபக்தனான தட்சன் சங்கினைத் தொட்டவுடன் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள். எனவே மாசிபௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வின் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.
மாசிப்பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.
பௌர்ணமிகளில் மாசிப் பௌர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது. வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசிபௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார். அதனால் மாசி பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் இன்றும் செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பு.
மாசி மகம் சிறப்பு
மகம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. மகத்தில் பிறந்தார் ஜகத்தை ஆள்வார் என்பது ஜோதிட வாக்கு. மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்நாளில் தான் உமா தேவி தட்சனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தாட்சாயிணி மாசி மகத்தன்று அவதாரம் செய்ததால் தேவியின் பிறந்த தினமாக அப்புனித நாள் மகத்துவம் பெறுகிறது. மாசிமாதம் மகாவிஷ்ணுவிற்கான மாதம் ஆகும். எனவே இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
ஜெகம் ஆளும் யோகம் தரும் மகம்
மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது.
மாசி மக விரதம்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
வருணபகவான்
ஒருமுறை சமுத்திரராஜனான வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார்.
தோஷம் நீங்கும்
தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதை போன்று மாசிமகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவவினைகள், பிறவி பிணிகள் துன்பங்கள் யாவும் நீங்கி அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அது முதல் புனித நீராடி வருகின்றனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலம் தரும். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம். தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
மகா மக தீர்த்தக்குளம்
வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த நேரத்தில் மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம்.
பிள்ளை வரம் கிடைக்கும்
மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறப்பதாக ஐதீகம்.
ஜோதிட ரீதியாக குழந்தை பாக்கியம்
பெண்ணிற்கு தாய்மையடையும் பாக்கியம் உண்டாவதைப் பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒருவரின் ஜனன ஜாதக ரீதியாக 5ம் பாவம் புத்திர ஸ்தானம் என்றாலும், பெண்களுக்கு 5க்கு 5ஆம் பாவமான 9ஆம் பாவமும் புத்திர ஸ்தானமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நவகிரகங்களில் குரு பகவான் புத்திர காரகனாக கருதப்படுகிறார். எனவே, பெண்களுக்கு 5ஆம் பாவமும் 9ஆம் பாவமும், புத்திர காரகன் குருவும் பலமாக அமைந்துவிட்டால் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுக்கும் யோகமும் உண்டாகும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 5,9 க்கு அதிபதிகள் ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான தாய்மை யோகம் உண்டாவது மட்டுமின்றி புத்திர காரகன் குருவும் பலம் பெற்று 5,9ம் பாவத்தையோ 5,9 ம் அதிபதிகளையோ பார்வை செய்தால் அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் பெண்ணிற்கு உண்டாகிறது. 5,9 ம்வீடுகள் சுபக்கிரகங்களின் வீடாக இருந்து சுப பார்வை பெறுவது நல்லது. 5,9 ம் அதிபதிகள் பாவியாக இருந்தாலும், வலுப்பெற்று அமைந்து சுப பார்வை பெறுவதாலும் சிறப்பான தாய்மை பாக்கியத்தை உண்டாக்கும். மாசி மகத்தில் புனித நீராடி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.