ஜின்பிங்கிற்கு சிறுமுகை பட்டு... நாச்சியார் கோவில், தஞ்சாவூர் பெருமையும் சீனா பேசும்
இந்தியா வந்துள்ள சீனா அதிபருக்கு சிறுமுகையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் சார்பில் நெய்யப்பட்ட சிவப்பு நிற சால்வை அணிவித்து சீன அதிபருக்கு மரியாதை செய்யப்பட்டது.
Recommended Video
மாமல்லபுரம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வருகை தந்திருக்கிறார். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், தமிழக அரசும் மத்திய அரசும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கின்றன. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தமிழக அரசு சார்பில் சில பரிசுகளும் வழங்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் சரஸ்வதி ஓவியம் பரிசளிக்கப்பட்டதோடு சிறுமுகை நெசவாளர்களால் நெய்யப்பட்ட சிவப்பு நிற பட்டு சால்வையும் பரிசளிக்கப்பட்டது. அந்த சால்வையில் சீன அதிபரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதுதான் ஹைலைட்.
மோடி, ஜின்பிங் உருவம் பதித்த இரண்டு சால்வைகள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகையில் தயாரிக்கப்பட்டது. சிறுமுகைப்புதுார் ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கத்தில் இந்த சால்வைகள் உற்பத்தி செய்யப்பட்டன.
சிறுமுகையில் உள்ள கன்னட தேவாங்க சமூகத்தினரால் நடத்தப்பட்டு வரும் இந்த கூட்டுறவு சொசைட்டி நெசவாளர்களால் நெய்யப்பட்டுள்ள இந்தப் பட்டுப் பொன்னாடை, கிளாஸிக் பட்டு நூல்களைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கிறது. சீன நாட்டு கொடியை போன்று சிவப்பு நிறத்தில் நெய்யப்பட்டதும் கூடுதல் சிறப்பம்சம்.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது நாச்சியார் கோவில். நாச்சியார் கோவில் விளக்குகள் பிரசித்தி பெற்றவை. நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் எழுந்தருளும் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும், கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் தீர்க்கும் கல் கருட பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. இங்குள்ள கல் கருட சேவை பிரசித்தி பெற்றது.
தஞ்சையின் பெருமை
தஞ்சாவூர் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. ஓவியங்கள் பாரம்பரியம் மிக்கவை. அதுவும் வெண்மை நிறத்தில் சரஸ்வதி ஓவியம் பிரசித்தி பெற்றது. பார்க்கும் போதே அமைதியை ஏற்படுத்தும். அந்த அற்புதமான ஓவியத்தையும் சீன அதிபருக்கு பரிசளித்துள்ளார் பிரதமர் மோடி.
தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் பூம்புகார் இந்த நினைவுப் பரிசுகளை தயாரித்துள்ளது.
சிரித்த முகத்துடன் சீன அதிபர்
மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சிறுமுகை அழகிய சிற்றூர். இங்கு நெசவாளர்கள் ஏராளம். சீன அதிபரிக்காக தயாரிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற பொன்னாடையின் மையத்தில் தங்கச் சரிகையில் ஜின்பிங் சிரித்த முகத்துடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சீனாவிற்கு பறக்கும் தமிழக பரிசுகள்
தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு எத்தனையோ பரிசுகளை கொடுத்தாலும் நெசவாளர்களின் இந்தப் பட்டுப் பொன்னாடை நிச்சயமாக அவரின் மனதை நிச்சயம் தொடும். ஜின்பிங் உடன் சிறுமுகை பட்டு நாச்சியார் கோவில் விளக்கு, தஞ்சை சரஸ்வதி ஓவியமும் சீனா பயணிக்கிறது. இனி தமிழகத்தின் பெருமையை சீனாவில் பேசுவார்கள்.