சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் செம்மண் - நிலம் விலை உயருமா?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் செம்மண் வைத்து பூஜை செய்யப்படுவதால் நிலம் விலை உயரும், ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் என்று பக்தர்கள் கூறியுள்ளனர்.
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவரின் கட்டளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவே இருக்கிறது. இம்முறை செம்மண் வைத்து வழிபடவேண்டும் என்று உத்தரவிடவே பூஜை பெட்டியில் ஒரு பாக்கெட்டில் செம்மண் வைத்து பூஜை செய்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது.
இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.
சிவன்மலை ஆண்டவர்
சிவன்மலை முருகன்கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொருட்கள் வைத்து பூஜை நடந்து வருகிறது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தண்ணீர் வைத்து பூஜை
மண், துப்பாக்கி, ஏர்கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. சில நாட்களிலேயே தமிழகத்தில் கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கி அப்பாவிகள் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது. அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது.
சிறை சென்ற விஐபிக்கள்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள்.
செம்மண் வைத்து பூஜை
கடந்த ஜூலை மாதம் அம்பும், செம்பும் வைத்து பூஜை செய்யப்பட்டது. இம்முறை செம்மண் வைத்து பூஜை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். செவ்வாய்க்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. எல்லா கிரகங்களுக்குமே அதிதேவதை, பிரத்யதி தேவதை என தேவதைகள் சில உண்டு. அதன்படி செவ்வாய்க்கு அதிதேவதை பூமிதேவி ஆவார்.
நிலம் விலை உயருமா?
செவ்வாய்க்கு பிரத்யதி தேவதை கந்தப்பெருமான் ஆவார். செவ்வாய்க்கும் பூமிக்கும் தொடர்புகள் உண்டு. புராணக்கதைகளின்படி செவ்வாய் பூமியின் மகன். முன் பேரழிவுகள் ஏற்பட்ட சமயத்தில், பூமி உருண்டையின் செம்மண் நிலப்பரப்பிலிருந்து உடைந்து சிதறி விழுந்த ஒரு செம்மண் உருண்டையே செவ்வாய் என்பது அறிஞர்களின் கருத்து. செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான் செவ்வாய் என்ற பெயரும் ஏற்பட்டது. இம்முறை செம்மண் வைத்து பூஜை செய்யப்படுவதால் நிலம் விலை உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
பூகம்பம் வருமா?
கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். செம்மண் வைத்து பூஜை செய்யப்படுவதால் நில அதிர்வு, பூகம்பம் ஏற்படுமோ என்ற அச்சமும் திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் சிவன்மலை ஆண்டவரின் உத்தரவு பெட்டி பற்றி இன்றைக்கும் அதிசயமாக பக்தர்கள் பேசிக்கொள்கின்றனர்.