ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் சந்திக்கும் போது நிகழும் சூரிய கிரகணம் - யாருக்கு பரிகாரம்
இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 25 முதல் 27 வரை ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. தனுசு ராசியில் இணையும் ஆறு கிரகங்களால் எதுவும் அதிசயம் நிகழுமா என்று பலரும் பேசி வருகின்றனர். ஆறு கிரக சேர்
மதுரை: திகில் மர்ம திரைப்படங்கள், பேய் படங்களில் ஆறு கிரகங்கள் ஒன்றான இணையும் அந்த நேரத்தில் சூரிய கிரகணமும் நிகழும் அந்த நாளில் தீய சக்திகள் ஆதிக்கம் அதிகரிக்கும். அப்போது ஜனிக்கும் அந்த உயிர் உலகத்தையே வெல்லும் என்று கதை சொல்வார்கள். அதே போல ஒரு நிகழ்வு இப்போது நிகழப்போகிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி மார்கழி 10ஆம் நாள் நிகழ்கிறது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1.35 மணிவரை உலகம் முழுவதும் இந்த சூரிய கிரகணம் நீடிக்கிறது. கேது கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் மூலம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியும் என்பதால் கிரகண தோஷமுள்ள நட்சத்திரகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
கேட்டை, மூலம்,பூராடம், அசுவினி, மகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது அவசியம். கிரகணம் முடிந்த உடன் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். கிரகண தோஷமுள்ளவர்கள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது. கிரகணம் தொடங்கும் முன்பாகவே குளித்து விட்டு அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் மீண்டும் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு போய் ஆலய தரிசனம் செய்து விட்டு வரலாம். புதிதாக சமைத்து சாப்பிடலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
சூரியன் பூமி சந்திரன்
அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம். பூமி சூரியனை சுற்றுகின்றது. சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. கிரகங்கள் சுற்றும் போது ஒரு சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அப்போது நிழல் மறைக்கும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதே போல சில நேரங்களில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் வரும். சூரியனுக்கு நடுவே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனில் படுவதே சந்திர கிரகணம் எனப்படும்.
சாப்பிட வேண்டாம்
கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வரும் கதிர்கள் நம்மை தாக்கும் என்பதாலேயே வெளியே செல்ல வேண்டாம் என்று கூறினர், தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும், சமைத்த உணவுகள் மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டது. கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் சாப்பிடவேண்டும். தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னனர் நம் முன்னோர்கள்.
இறை வழிபாடு
மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும். அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம். எனவேதான் கிரகண நேரத்தில் எந்த வேலையும் செய்யாமல் வண்டி வாகனத்தில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இறை வழிபாடு செய்ய சொல்கின்றனர்.
கல் உப்பு கலந்த தண்ணீர் குளியல்
கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, குளித்து, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதோடு, கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் கடலிலோ அல்லது கல் உப்பு சிறிது போட்ட அந்த தண்ணீரில் குளித்தல் நல்லது. அப்படி செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலில் இருந்து அகலும்.
பரிகார நட்சத்திரகாரர்கள்
இந்த ஆண்டு கேது கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணையும் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. விருச்சிக ராசியில் உள்ள கேட்டை, தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம், கேதுவின் நட்சத்திரங்களான மேஷத்தில் உள்ள அசுவினி, சிம்மத்தில் உள்ள மகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். கிரகண தோஷமுள்ளவர்கள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது. கிரகணம் தொடங்கும் முன்பாகவே குளித்து விட்டு அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். தெய்வ வழிபாடு மட்டுமே தீமைகளில் இருந்து நம்மை காக்கும்.
சூரியனை விழுங்கும் பாம்பு
கேது கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் சூரியனை கேது என்ற பாம்பு விழுங்குமா என்றெல்லாம் கேட்க வேண்டாம். ராகு கேது நிழல் கிரகங்கள். இம்முறை கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ராகு கேதுவிற்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் என்ன பகை என்பது பற்றிய புராண கதையை மற்றொரு பதிவில் பார்க்கலாம்.