தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் கூட்டணி- 12 ராசிக்காரர்களும் என்ன செய்யலாம் செய்யக்கூடாது
நவ கிரகங்களில் ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் சஞ்சரிக்கின்றன. ஒரே நேர்கோட்டில் சஞ்சரிக்கின்றன. இதுபற்றி பலரும் பயப்படுகின்றனர். பயமுறுத்துகின்றனர். பேரழிவு ஏற்படும் என்றெல்லாம் எச்சரிக்கின்றனர்.
சென்னை: தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒண்ணு சேரப்போகுதாமே ஏதாவது சுனாமி வருமோ, பூமியில மிகப்பெரிய பேரழிவு ஏற்படுமோன்னு பயம் கலந்த திகிலோடு பேசுறாங்க. பெட்டி கடைகள் முதல் கார்ப்பரேட் கம்பெனிகளில் கேண்டீன்கள் வரை இதே பேச்சா இருக்கே. இது பற்றி நாம சில மாதங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறோம். இருந்தாலும் இந்த கிரக சேர்க்கைகள் பற்றி இப்போது பரவலாக பேசுவதால் மீண்டும் ஒரு பதிவு போடுகிறோம்.
டிசம்பர் 25 இரவு முதல் டிசம்பர் 27 இரவு வரை சூரியன், சந்திரன், சனி, குரு, புதன், கேது ஆகிய ஆறு கிரகங்கள் ஒன்றாக தனுசு ராசியில் இணைந்திருக்கும். அதன்பிறகு சந்திரன் மகரம் ராசிக்கு நகர்ந்து விட்டாலும் ஐந்து கிரகங்களின் கூட்டணி ஜனவரி 13ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சந்திரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் சூரியன் மாதம் ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கின்றன. குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த ஆண்டு இறுதி வரை தனுசு ராசியில் சனி, கேது, குரு சஞ்சரிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் ராஜகிரகங்கள் சூரியன், சந்திரன், புதன் தனுசுவில் இணையப்போகின்றன. சூரியன், வியாழன் சேர்க்கை பற்றிய பயம் வேண்டாம். இந்த கிரக சேர்க்கையினால் பெரிய பேரழிவு எல்லாம் வராது. சூரியனும் சனியும் சேர்ந்து பாக்ய ஸ்தானத்தில் இணைவதால் பிறக்கும் குழந்தைக்கு யோகங்கள் வரும்.
கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடு. பாக்ய ஸ்தானத்தில் தந்தை கிரகமான சூரியன், தாய் கிரகமான சந்திரன், உழைப்பு கிரகமான ஆயுள்காரகன் சனி , அறிவு கிரகமான புதன், ஞானகாரகன் கேது கூடவே குருவும் இணைகின்றன. ஒரு ராசியில் இப்படி ஆறு கிரகங்கள் இணைவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இந்த ஆண்டு அது நிகழப்போகிறது. இது நிச்சயமாக நல்ல தாக்கம்தான். தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கப் போகிறது என்பதன் அறிகுறி என்கின்றனர் ஜோதிடர்கள். காலபுருஷ தத்துவப்படி ஒன்பதாம், பத்தாம் அதிபதி சேர்ந்து இருப்பது தர்ம கர்மாதிபதி யோகத்தை பெற்றுள்ளது. ஒன்பது வலுப்பெற்று உள்ளதால் அதில் அரசில் ராஜ கிரகம் மற்றும் புத்தியை குறிக்கும் மதிநுட்ப கிரகங்கள் உள்ளன. இதனால் சில அரசியல் மாற்றங்கள் சட்டங்கள் இயற்ற முற்படுவார்கள், கர்மாவை கழிக்க தான தர்மம், ஆன்மீகம் என்று மக்கள் செயல்பட ஆரம்பிப்பார்கள்.
நெருப்பு ராசியில் இணையும் கிரகங்கள்
காலபுருஷ தத்துவப்படி 9ம் வீட்டில் அதாவது தனுசில் குரு ஆட்சி புரிந்து இருப்பது மிகச் சிறந்த ஒன்று. டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் சேர்க்கை என்பது இரண்டரை நாட்களில் இந்த நிகழ்வு நடைபெறப்போகிறது. இந்த அமைப்பால் ஒரு சில யோகங்கள், கிரக யுத்தம், மற்றும் தோஷங்கள் நடைபெறும். வருஷ கிரகங்கள் என்று கூறப்படும் குரு சனி, கேதுக்களுடன் மாத கிரகங்கள் என்று கூறப்படும் சூரியன், புதன் மற்றும் இரண்டரை நாட்கள் சஞ்சரிக்கும் மனோகரகனுடன் சந்திரனோடு சேரும்பொழுதும் அதே நேரம் ராகுவின் பார்வையும் இந்த காலகட்டத்தில் இடம்பெறும். அடுத்தது தனுசில் ஆட்சி பெற்ற சுபத்தன்மை கொண்ட குருவோடு எந்த கிரகம் சேர்ந்தாலும் சுபத்துவம் பெரும். குருவும் சந்திரனும், குருவும் சனியும், குருவும் கேதுவும், குருவும் சூரியனும், குருவும் புதனும் சேர்ந்து இருப்பது பல்வேறு யோகங்களை தரும்.
புத ஆதிபத்ய யோகம்
சூரியனும் புதனும் சேர்ந்திருக்க புத ஆதித்தயோகம் பெரும் இது நிறைய ஜாதகத்தில் உள்ளது. ஆனால், இந்த சேர்க்கை லக்கினத்திலிருந்து 1, 4, 8 ஆகிய இடங்களில் இருந்தால் ஜாதகன் அரசனாவான். அதுவே சூரியன் சந்திரனும் இணைத்து 2, 9, 10 இருந்தால் பெரும்புகழ் உடையானவன். சூரியனும் குருவும் கூடி லக்கினத்திலோ, 11ம் வீட்டிலோ இருந்தால் ஜாதகன் வேந்தனாவான் என்று ஜாதக அலங்காரத்தில் கூறப்படுகிறது. இந்த கிரக கூட்டணி உள்ள நேரத்தில் பிறக்கும் பிள்ளைக்கு அந்த யோகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
புலிப்பாணி சித்தர்
ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன் இணைந்து 1, 5, 9 ஆம் வீடுகளில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு மிக அதிக அளவில் செல்வம் சேர்க்கை, ஆடம்பரமான வசதிமிக்க வாழ்க்கை, வீடு கட்டும் யோகம், எதிரிகளுக்கு அஞ்சாத நிலை மற்றும் அனைத்து விதமான சுகபோகங்களை அனுபவிக்கும் யோகமும் ஏற்படும். சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான். சூரியனும் சந்திரனும் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் ஜாதகர் சிறந்த நிர்வாகியாகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள் என்று புலிப்பாணி சித்தர் கூறியுள்ளார்.
ஆஞ்சநேயரை வணங்கலாம்
இந்த ஆறு கிரகங்களின் தாக்கமே சில பிரச்னைகளை, மன குழப்பமான சூழ்நிலையில் முடிவெடுக்க வைக்கும் அந்த நேரம் எல்லா ராசிக்காரர்களும் அதாவது மூன்று நாட்களும் புதிதான செயல்களை செய்யாமல், எப்பொழுதும் செய்யும் வேலையை சரிவர செய்தல் போதுமானது. முக்கியமாக ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு, மகரம் போன்ற ராசிகள் மற்றும் லக்கினகாரர்கள் அமைதி காப்பது நல்லது. இந்த சேர்க்கை பார்த்து அனைவரும் பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். அந்த நாட்களில் முன்னோர்களை வணங்கலாம். அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் அந்த நாளில் ஆஞ்சநேயரை வணங்கினால் அச்சம் அகலும்.
மேஷம் ரிஷபம்
பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டில் ஆறு கிரகங்கள் கூட்டணி சேருவது அற்புதமாக இருக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. துன்பங்கள் இல்லை, நல்லதே நடக்கும் என்பதால் மேஷ ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம். ரிஷபம் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்ட ஸ்தானத்தில் கிரகங்கள் மறைகின்றனர். சந்திராஷ்டம நாள் என்பதால் அமைதியாக இருக்கவும். ஆயுள் ஸ்தானத்தில் கிரகங்கள் இணைவதால் கெடுதல் ஏற்படாது என்றாலும் மருத்துவ செலவு ஏற்படும். ஊர் சுற்ற வேண்டாம் பயணங்களை தவிர்க்கவும்.
மிதுனம் கடகம்
ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் கூட்டணி சேருவதால் வேலையில் கவனம் தடுமாறும் பேசாம அன்னைக்கு லீவு போட்டுவிடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பத்திரம். அந்த 3 நாட்கள் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடகம் ராசிக்கு ஆறாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றனர். எதிரிகள் தொல்லைகள் தீரும். நோய்கள் துன்பங்கள் தீரும். உங்களுக்கு அனைத்துமே நல்லதாகவே நடக்கும்.
சிம்மம் கன்னி
சிம்மம் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் சேரகின்றன. கர்ப்பிணிகள் கவனம். பிள்ளைகளை பத்திரமாக பாருங்க செலவுகள் வரும். கன்னி ராசிக்கு ஆறு கிரகங்கள் நான்காம் வீட்டில் இணைகின்றன. அம்மா உடல் நலனில் அக்கறை காட்டுங்க. சுக ஸ்தானம், வண்டி வாகனம் வாங்க வேண்டாம். யோசித்து முடிவு பண்ணுங்க.
துலாம் விருச்சிகம்
துலாம் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் சேருகின்றன. தைரிய வீரிய ஸ்தானத்தில் கிரகங்கள் இணைகின்றன. துணிந்து எதையும் செய்யுங்கள். விருச்சிகம் ராசிக்கு இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணைவதால் பேச்சில் கவனமாக இருங்க. குடும்பத்தில் குழம்பம் வரலாம் எச்சரிக்கை. அந்த 3 நாட்கள் வீட்டை விட்டு எங்கேயும் போகாமல் இருப்பது நல்லது.
தனுசு மகரம்
தனுசு ராசிக்கு ஜென்ம ராசியில் ஆறு கிரகங்கள் இணைவதால் மனதளவில் குழப்பமாக இருக்கும். இந்த மூன்று நாட்கள் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. மகரம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் 6 கிரகங்கள் இணைகின்றன. முக்கிய முடிவுகளை ஒத்திப்போடுங்க பணத்தை எதிலும் முதலீடு பண்ணாதீங்க. ஆபிஸ்க்கு கூட போகாம லீவு போட்டுட்டு கம்முன்னு வீட்ல ரெஸ்ட் எடுங்க..
கும்பம் மீனம்
கும்ப ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. ரொம்ப சிறப்பு. இயற்கையே வசப்படும் யோகம். லாபம் என்பதால் கவலைப்படாமல் இருங்க. மீனம் ராசிக்கு பத்தாம் வீட்டில் 6 கிரகங்கள் இணைவதால் வாழ்க்கை மீதே வெறுப்பு தட்டும். மூன்று நாட்களில் குழப்பங்கள் ஏற்படும். எந்த முக்கிய முடிவுகளும் அந்த 3 நாட்களில் எடுக்காதீங்க.